படை வீரர்களை நினைவுகூர முடியுமானால் இறந்த புலிகளுக்கும் அனுமதி வேண்டும்
படை வீரர்களை நினைவுகூர முடியுமானால் இறந்த புலிகளுக்கும் அனுமதி வேண்டும்
அரசாங்கத்திடம் எம். ஏ. சுமந்திரன் எம்.பி கோரிக்கை
உயிரிழந்த படை வீரர்களை நினைவுகூரும் நவம்பர் மாதத்தில் உயிர்நீத்த விடுதலைப் புலி
உறுப்பினர்களையும் அவர்களின் உறவினர்கள் நினைவுகூர்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க
வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் நேற்றுக் கோரிக்கைவிடுத்தார்.
உயிரிழந்த புலி உறுப்பினர்களின் மயானங்கள் மனிதாபிமானமற்ற முறையில் கடந்த
அரசாங்கத்தால் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று முதல் ஒரு வாரத்துக்கு
உயிரிழந்த புலி உறுப்பினர்களை அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்
நினைவுகூர்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
வரவுசெலவுத் திட்டம்
தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான முதலாவதுநாள் விவாதத்தை நேற்று ஆரம்பித்துவைத்து
உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். நவம்பர் மாதமானது உயிரிழந்த வீரர்களை
நினைவுகூரும் மாதமாகும். இருந்தபோதும் உயிரிழந்த புலி உறுப்பினர்களை
நினைவுகூர்வதற்கு அவர்களுடைய பெற்றோர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ கடந்த
அரசாங்கத்தால் தடை ஏற்படுத்தப் பட்டது.
இவ்வாறான நிலையில் புதிய அரசாங்கம் உயிரிழந்த புலி உறுப்பினர்களை நினைவுகூர அனுமதி
வழங்கவேண்டும். மயானங்களுக்குச் சென்று நினைவுகூர்வதற்கு தடைஏற்படுத்தப்படக் கூடாது
என்றும் அவர் குறிப்பிட்டார்.