ஒற்றுமைப்படுவதால் மட்டும்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்
ஒற்றுமைப்படுவதால் மட்டும்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்
இந்நாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களைப்
பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளின் தலை வர்கள் ஒன்றுபட்டுச் செயற்படுவதன்
மூலமே தத்தமது சமூகங்களின் சிறப்பான எதிர்கால வாழ்விற்கு வழிசமைத் துக்கொடுக்க
முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள் ளதை அவதானிக்க முடிகிறது. இன்றைய நல்லாட்சி
அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்
சிறுபான்மையின மக்க ளுக்கு நல்லவற்றைச் செய்ய முன்வருகின்ற போதெல்லாம் அவற்றைக்
குழப்பியடிக்க பெரும்பான்மையின கட்சிக ளிலுள்ள சிலர் எதிர்ப்புத் தெரிவித்து
வருவதைக் காண லாம்.
இது இன்றைய ஆட்சியில் மட்டுமல்ல. கடந்த ஆட்சி அதற்கு முன்னைய ஆட்சி என இலங்கை
சுதந்திர மடைந்த காலத்திலிருந்தே இருந்து வரும் நிலைதான். ஆனால் முன்னைய
ஆட்சியாளர்கள் இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சிறுபான்மையின மக்களது பிரச்சி
னைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதைத் தட்டிக் கழித்து வந்தனர். இதுவே உண்மையான வரலாறு.
ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. ஜனாதிபதியும், பிரதமரும் உண்மையாகவே செயற்பட்டு
வருகின்றனர். எனினும் இன வாதிகள் சிலரது எதிர்ப்பிரசாரங்கள் இவற்றை மழுங்
கடிப்பதாகவே உள்ளது.
இந்நிலையை முறியடிக்க வேண்டுமாயின் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தத்தமது
பிரச்சினைகளை அரசாங் கத்திடம் முன்வைக்கும் சந்தர்ப்பங்களில் தமக்கிடையே
பொய்யாகவேனும் ஒற்றுமையாக இருப்பதுபோல பாசாங்கு செய்ய வேண்டும். ஒருவரையொருவர்
அல்லது ஒரு கட்சியை மற்றைய கட்சி எதிர்த்து வசைபாடுவதைத் தவிர்த்துக் கொள்வது
அவசியம். ஏனெனில் இவ்வாறு கட்சித் தலைவர்கள் அல்லது கட்சிகள் தமக்கிடையே மோதிக்
கொள்வதை இனவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அத்துடன்
இவர்களிடை யேயான பிளவு அரசாங்கத்திற்கும் சங்கடத்தை ஏற்ப டுத்துவதாக உள்ளது.
எனவே இவ்விடயத்தில் தமிழ்க் கட்சிகள் தமக்குள்ளும், முஸ்லிம் கட்சிகள் தமக்குள்ளும்
ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தி காரியங்களைச் சாதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு
விடயத்திற்காக இருவேறு கருத்துக்க ளுடன் அரசாங்கத்தை அணுகுவதை முதலில் இவர்கள்
தவிர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக தன்னால்தான் இவ்விடயம் வெற்றி கொள்ளப்பட்டது
அல்லது தனது கட்சியே இவ்விடயத்தில் வெற்றி கண்டது எனும் ஊடகப் பிரசாரத்திற்கான
தந்திரத்தை சமூக நலன் கருதி உடன டியாக இவ்விரு கட்சிகளும் கைவிட வேண்டும். தனது
தனிப்பட்ட தலைமை, பதவி அல்லது தமது கட்சியின் வளர்ச்சி என்ற எண்ணத்தைக் கைவிட்டு
சமூக நலன் குறித்து ஒற்றுமையாகச் செயற்பட முன்வந்தால் பல விடயங்களை இலகுவாகச் செய்து
விடலாம்.
குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் இதுவே நடந்துள்ளது. எத்தனை கட்சிகள்,
எத்தனை அரசியல்வாதிகள், எத்தனை விதமான எதிரும் புதிருமான கருத்துக்கள்.
இவ்விடயத்தில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்து ஒரே குரலில் தமது கருத்துக்களை
முன்வைத்திருந்தால் எப்போதே வெற்றி பெற்றிருக்கலாம். ஏட்டிக்குப் போட் டியாக அறிக்கை
விடுவது மட்டுமல்லாது, சிறைச்சாலை களுக்கும் சென்று இந்தக் கைதிகளை பார்வையிட்டு
அவர்களையும் குழப்பி தாமும் குழம்பி வெளியே வந்து ஊடகங்களுக்கு அரைகுறையாக
விளக்கமளித்து பின்னர் அதனை அவை திரிபுபடுத்தி வெளியிட்டு பெரும்பான் மையின
கட்சிகளைக் குழப்பி என எத்தனை நடந்தேறி விட்டது. இவையெல்லாம் தேவையா? இதுவா மக்கள்
சேவைக்கான அரசியல்?
இதேபோன்றுதான் வடபுல முஸ்லிம் மக்களது மீள் குடியேற்ற விடயத்தில் முஸ்லிம் கட்சிகள்
சில நடந்து கொள்ளும் முறை முகச்சுளிப்பை ஏற்படுத்துகின்றது. அங் கும் ஏட்டிக்குப்
போட்டியாகவே கட்சிகளின் செயற் பாடுகள் காணப்படுகிறது. உண்மையான நல்லாட்சி நடை
பெறுகிறது. அதில் எமது சமூக மக்களை எப்படியாவது மீளவும் அவர்களது சொந்தக் காணிகளில்
குடியமர்த்தி அவர்களது வாழ்வில் இருபத்தைந்து வருடங்களிற்குப் பின்னராவது ஒளியை
ஏற்றுவோம் எனச் சிந்திப்பதற்கு மாறாக இதனை நானே செய்தேன், எனது கட்சியே செய்தது எனப்
பெயர் எடுப்பதிலேயே செயற்பாடுகள் மற்றும் ஊடக அறிக்கைகள் குறியாக அமைந்துள்ளதை
அவதானிக்க முடிகிறது.
இவ்விடயத்தில் சகல தலை மைகளும் இணைந்து செயற்பட்டிருந்தால்
இன்று இடம் பெயர்ந்த முஸ்லிம் மக்களில் தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமான மக்கள்
மீளவும் குடியமர்ந்திருப்பார்கள்.
மலையகத்திலும் இதே நிலைமையைத்தான் காண முடிகிறது. சகல விடயங்களிலும் போட்டித் தன்மை,
சம்பளப் பிரச்சினையா? தீபாவளி முற்பணமா? வீட மைப்பா? சொந்தக் காணிக் கோரிக்கையா?
எதையெ டுத்தாலும் கட்சிகளுக்கிடையே போட்டி அல்லது தலை வர்களுக்கிடையே போட்டி. அங்கு
மக்களுக்குக் கிடைக் கும் சலுகைகள், வசதி வாய்ப்புக்கள் பல இவர்களது போட்டி
அரசியலால் இல்லாமற்போன சந்தர்ப்பங்கள் மலையகத்தில் நிறையவே உள்ளது. அதிலும் கடந்த
வருடம் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை
அமைத்துக் கொடுப்பதில் எத்தனை போட்டி காணப்படுகிறது. இந்தப் போட்டிகளால்
அம்மக்களுக்கு இதுவரை பெரிதாக எந்த நன்மையும் கிடைக்காமை கவலை தரும் விடயமாக உள்ளது.
மாறாக இவ்விடயத்தில் மலையக கட்சிகளும், அதன் தலைவர்க ளும் ஒற்றுமையாக இணைந்து
செயற்பட்டிருந்தால் அந்த மக்கள் இன்று புதிய வீடுகளில் தமது தீபாவளியைக்
கொண்டாடியிருப்பார்கள்.
இவையாவும் ஒற்றுமையின்மையினாலேயே ஏற்பட்டது என்பதை இனியாவது தலைமைகள் உணர வேண்டும்.
மக்கள் சேவைக்காக என மக்களது வாக்குகளைப் பெற்று அரசியல்வாதிகளானதும் அதனை மறந்து
நீங்கள் பெயர் பெறுவதற்காகச் செயற்படுவது அழகல்ல. தமது தேவை களை நிறைவேற்றவே மக்கள்
தமது பிரதிநிதிகளாக உங்களை தெரிவு செய்கிறார்கள். இவ்வாறு தெரிவான உங்களுக்கு
அரசாங்கம் பற்பல சலுகைகளைத் தருகிறது. அதனைப் பெற்று திருப்தியுடன் மக்கள்
பணியாற்றுவதே சிறப்பாக இருக்கும். இனிவரும் காலங்களிலாவது ஒற்றுமை யாகச் செயற்பட்டு
மக்கள் பலனும், பயனும் பெறும் வகையில் அரசியல் செய்யுங்கள். அரசியல்வாதிகளான நீங்கள்
ஒன்றுபடுவதனால் மட்டுமே மக்களது எதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும் என்பதே எமது
கருத்தாகும்.