197 புள்ளிகளைப் பெற்று மாவனல்லை சாஹிரா மாணவி சாதனை
197 புள்ளிகளைப் பெற்று மாவனல்லை சாஹிரா மாணவி சாதனை
புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாவனல்லை சாஹிரா தேசியப் பாடசாலை மாணவி
பாத்திமா சமா 197 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில்
முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இந்த மாணவி தேசிய ரீதியாக மூன்றாம் இடத்தையும்
பெற்றுள்ளார்.
மருதமுனையை பிறப்பிடமாகவும் மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட ஐ.எல்.எம்.நிஸ்வர்
மற்றும் ரஜபு நிஷா ஆகிய தம்பதிகளின் புதல்வியான இவர் 197 புள்ளிகளை பெற்று தம் கற்ற
பாடசாலைக்கும் தாம் சமூகத்திற்கும் ஒரு பெறுமதியான நன்மதிப்பைத் தேடித் தந்துள்ளார்.
இவரது தந்தை கட்டார் நாட்டில் கணனி கிரபிக் படவரைஞராக பணிபுரிகின்றார். சமாவின்
இல்லம் மாவனல்லை சாஹிராக் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இவருக்கு
இப்பாடசாலையில் கல்வி பயிலும் ஒரு சகோதரி இருக்கின்றார். இம்மாணவி கல்வி பயிலும்
சாஹிரா ஆரம்பப் பிரிவின் பொறுப்பாளர் அதிபர் எம்.இஸட்.எம்.ஐயூப் ஆவர்.
பாத்திமா சமா
இந்தச் சந்தர்ப்பத்தில் முதன் முதலாக அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பதுடன் தன்னுடைய
கற்கைக்குத் துணை புரிந்த பாடசாலை அதிபர் கே.எம்.பெளமி, ஆரம்பப் பிரிவு ஆசிரியர்
எம்.இஸட்.எம்.ஐயூப், வகுப்பாசிரியர் எம்.பீ.எம்.பbல் ஆகியோருக்கும் மற்றும்
என்னுடைய பெற்றோருக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன். சாஹிராக் கல்லூரியில் தரம்
ஒன்றிலிருந்து ஐந்து வரை கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
என்னுடைய முயற்சிகளுக்கு எனது பெற்றோர்களும் கஷ்டத்துடன் உந்து சக்தியாக
இருந்தார்கள். அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இனி
வரும் காலங்களிலும் இப்பாடசாலையில் கல்வி கற்று அதிபருக்கும் ஆசிரியர்களும்
நற்பெயரையும் புகழையும் ஈட்டிக் கொடுப்பேன். அத்துடன் என்னுடைய பெறுபேறுகளைக் கேட்டு
யார் யாரோ சந்தோசம் அடைகின்றார்களோ அனைத்து மக்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில்
என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதிபர் கே.எம்.பெளமி
197 புள்ளிகளைப் பெற்ற இந்த மாணவியின் சாதனையை உண்மையிலேயே தமிழ் மொழி மூலப்
பாடசாலைகளைப் பொறுத்தவரையில் வரலாறு கண்ட நிகழ்வாக நாங்கள் பார்க்கின்றோம். இதற்கு
முன்னர் வெளியான புலமைப் பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் 197
புள்ளிகளை எவரும் பெற்று இருக்க முடியாது எனக் கருதுகின்றேன். சப்ரகமுவ மாகாணம்
மாத்திரமல்ல அகில இலங்கை ரீதியாகப் பல போட்டிகளில் பங்குகொண்டு வெற்றிகளைப் பெற்றுக்
கொண்டவர். அது மாத்திரமல்ல எனது அயராது உழைப்பினால் எந்தவொரு வேலையையும் உடனடியாகச்
செய்யக் கூடிய ஒரு மாணவி. இந்த மாணவியுடைய வளர்ச்சியை மூன்றாம் ஆண்டு முதல்
காணக்கூடியதாக இருந்தது.
சபாவின் தாயார் ரஜபு நிஷா
நான் முதலில் இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு இந்தப் பாடசாலை அதிபர் மற்றும்
ஆசிரியர்களுக்கும் தான் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால்
பிள்ளைகளுக்கு முறையான கல்வியைக் கொடுத்து பிள்ளையின் வளர்ச்சிக்காக தியாக
அர்ப்பணிப்புடன் உந்து சக்தியாக செயற்பட்டு இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவர்கள்
இந்தப் பாடசாலை அதிபர், ஆசிரியர்களே. இவ்வாறு முன்னுக்குக் கொண்டுவருவதற்கு
ஆசிரியர்களுடைய பங்களிப்பு அளப்பரியது.