பாவாடை தாவணி நமது பாரம்பரியப் பண்பாட்டு உடை. இதனுடைய இடத்தினை இன்று
சுடிதார், பேண்ட் போன்றவை ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றன. மார்டன் டிரஸ்
என்கின்ற இந்த இறக்குமதிகள் எல்லாம் கவர்ச்சியினைக் காட்டி, பால் உணர்வினைத்
தூண்டுவனாகவே அமைந்துள்ளன.
பெண்களுக்குக் கண்டிப்பாக இடுப்புப் பகுதிக்கு கொஞ்சமாகிலும் காற்றோட்டம் தேவை.
இடுப்புப் பகுதி உடற் கூறு ரீதியாகப் பெண்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஜனனேந்திரியங்கள், கருப்பை, அண்டகோசங்கள் ஆகியவை எல்லாம் ஜீவன் ஜனிக்கின்ற புனித
இடமாகும். அப்பகுதிக்குத் தேவையான வைட்டமின் ‘டி‘ புளோரைடு, ஓசோன் ஆகியவை அன்றாடம்
காற்றினால், வெளிச்சத்தால் பெறப்பட்டு நலம் பெறுகின்றன.
மேலும் இடுப்பில் கூடை, குடம், குழந்தை என எதனையும் சுமக்கும் போது புடவை, பாவாடை,
தாவணி இவற்றினால் அசௌரியம் மிகவும் குறைவு. மார்டன் டிரஸ்சில் அசௌரியம் மிக அதிகம்.
பாவாடை பிரில் என்கிற மடிப்பு வைத்துத் தைக்கப்படும். அதனால் விபரீதக் கவர்ச்சிகள்
களையப்படுகின்றன. அதிகமான அருவருப்புகள் அகற்றப்படுகின்றன.
புடவையிலும் பிரில் வைத்துக் கட்டும்போது இடுப்புப் பகுதிக்கு சிறிது காற்றோட்டம்
கிட்டும். தேவையற்ற கவர்ச்சி இருக்காது. கால் ஏனைய உறுப்புகளின் பரிமாணம் தென்படாது.
வெப்பப் பிரதேசமான நமது மண்ணில் வாழும் மகளிருக்கு, பாவாடை தாவணியின் தன்மையும்,
தனிச்சிறப்பினையும் வேறு எந்தவித உடைகளும் தராது.
பெண்களின் உடல் அமைப்பிற்கும், அவர்களின் பிரச்சினைகளுக்கும் ஏற்றது எனத்தான் நமது
முன்னோர்கள் நமக்கு ஒத்துப் போகின்ற உடைகளைக் கண்டறிந்து பயன்படுத்தி அதனைப்
பண்பாட்டு உடை எனக் கண்டு கொண்டனர். நாகரீகம் என்கிற மயக்கத்திலும், பேஷன் என்கிற
பேதமையாலும் நமது நலம் தரும் சம்பிரதாயங்களுக்கு நஞ்சு ஊட்டப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை பள்ளி ஒன்றில் பாவாடை தாவணி போடத் தடை விதித்த
போது தென் மாவட்ட தமிழ்த் தந்தை ஒருவர் கோர்ட் வரை சென்று தன் மகளுக்கு பாவடை தாவணி
அணிவதற்குப் போட்ட தடையைத் தகர்த்தார். படிப்பு முடியும் வரை அம்மாணவி பாரம்பரிய
உடையிலேயே வெற்றிகரமாகப் படிப்பினை முடித்தார். அவர்களின் பண்பும் துணிவும்
அனைவருக்கும் வரும்போதுதான் சிதிலமடையும் நமது சம்பிரதாயங்களை சிறப்புடன் காக்க
இயலும்.