மாசடைந்த சூழல், வெப்பம், தூசு பயன்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் கிரீம்களால்
அதிகப்படியான நச்சுக்கள் சருமத்தில் சேர்ந்திருக்கும். அவற்றை சுத்தம் செய்ய, இதோ
எளிமையான வழிகள்.
தலை முதல் பாதம் வரை
மர மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், கப்பு மஞ்சள், விளாமிச்சை வேர், வெட்டி வேர், பாசிப்
பயிறு, ரோஜா இதழ்கள், மரிக்கொழுந்து ஆகியவற்றை அரைத்து தலை முதல் பாதம் வரை தடவி
குளித்து வர, சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். சோப்பை விட சிறந்தது
நலங்குமாவு . கரும்புள்ளிகள், சரும பிரச்சினைகள் குணமாகும். பாதத்தில் வெண்ணெய்
தடவுவதால் பாதங்களுக்கு நல்லது. அதுபோல கண்களுக்கும் நன்மையை செய்யும்.
முகம்
தயிர், அம்மான் பச்சரிசி, மஞ்சள், செஞ்சந்தனம் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி, 10
நிமிடங்களில் இளஞ்சூடான நீரில் கழுவலாம். மரு, பரு, கரும்புள்ளிகள் மறைய தொடங்கும்.
சித்த மருந்தகங்களில் கிடைக்கும் நீர் கோவை என்ற மாத்திரையை இழைத்து, பருக்களின்
மேல் பூச பருக்கள் மறையும்.
கூந்தல் மற்றும் ஸ்கால்ப்
வாரம் ஒருமுறை அரிசி வடித்த நீரில் சிகைக்காய் கலந்து குளிக்க, கூந்தலில் உள்ள
நச்சுக்கள் வெளியேறும். மாதம் இருமுறை வேப்பிலை விழுது, குப்பை மேனி விழுது
போன்றவற்றை கூந்தலில் தடவ, கூந்தல் மற்றும் ஸ்கால்ப் சுத்தமாகி கூந்தல் வளர்ச்சியும்
நன்றாக இருக்கும்.
கண்கள்
அஞ்சனமிடுதல் என்றால் கண்களில் மை இடுதல். அதாவது அஞ்சன கல்லை இழைத்து தண்ணீரில்
கலந்து கண்களில் மையாக இடுதல். 3 நாளுக்கு ஒருமுறை காலை வேளையில் இடலாம். சூரியன்
மறைந்த பிறகும், மாதவிலக்கு சமயத்திலும், எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்த அன்றும்
மை இடக் கூடாது. இப்படி மை இடுவதால் கண்களிலிருந்து அழுக்கு, கருநிற நீர்,
நச்சுக்கள் வெளியேறும். வாதம், பித்தம், கபம் ஆகியவை சமநிலையில் இருக்கும்.
கண் பார்வை திறனும் அதிகரிக்கும். சுரப்பிகள் சரியாக செயல்படும்.
கருவளையம் போக்கும் தெரப்பி
கண்கள் தொடர்ந்து சோர்ந்திருந்தால், அதற்குக் கீழ் கருவளையம் உருவாகிறது. இதற்கு,
மனஅழுத்தம், தூக்கமின்மை, எலக்ட்ரானிக் கருவிகளை அதிகம் பயன்படுத்துதல்,
ஊட்டச்சத்துக் குறைபாடு எனப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
கருவளையத்தைப் போக்க, பால் அல்லது மூலிகை கிரீம்களைப் பயன்படுத்தி, க்ளென்சிங்
செய்யப்படும். பிறகு, ஐஸ் கட்டிகள், கெரட் ஜூஸ் என அவரவர் சருமத்துக்கு ஏற்றபடி
கண்களைச் சுற்றி மிருதுவாக மசாஜ் செய்யப்படும்.
இமைகளின் மீது பஞ்சுவைத்து, அதன் மேல், வேப்பிலை, கற்றாழை, துளசி, ஆப்பிள் உள்ளிட்ட
சில இயற்கை, மூலிகைப் பொருட்களால் ஆன கலவையைவைத்து, அரை மணி நேரம் அதன் சாறு
சருமத்தில் இறங்கும் வகையில் விடப்படும். அதன் பிறகு, தூய நீர் கொண்டு சுத்தம்
செய்யப்படும். சிகிச்சையினால், கண்களைச் சுற்றியுள்ள சருமப்பகுதிக்குச் சீரான ரத்த
ஓட்டம் ஏற்பட்டு, கருவளையம் மறையத் தொடங்குகிறது. இந்த சிகிச்சைக்கு அரை மணி நேரம்
தேவைப்படும். வாரத்துக்கு ஒரு முறை செய்துகொண்டால், இரண்டே மாதங்களில் கருவளையம்
முற்றிலுமாக மறையும்.