ஜனாதிபதி மஹிந்த ஊவா மாகாண தேர்தலில் வெற்றிவாகை சூடுவார்
மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் மக்கள் தலைவர்
ஜனாதிபதி மஹிந்த ஊவா மாகாண தேர்தலில் வெற்றிவாகை சூடுவார்
னாதிபதி என்ற முறையில் தன்னால் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளையே மக்களுக்கு
அளித்து அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவேனே ஒழிய ரணில்விக்கிரமசிங்கவைப் போன்று
செய்ய முடியாத, கற்பனையில் உருவாக்கப்பட்ட வாக்குறுதிகளை தேர்தல் காலத்தில் விடுத்து,
மக்களை அன்றும் இன்றும் என்றும் ஏமாற்றவில்லை என்று கூறினார்.
அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி இன்னுமொரு அறிவுறுத்தலையும் செய்தார். எல்லா விடயங்கள்
குறித்தும் நன்கறிந்தவர்கள் போல் அரசியல்வாதிகள் பேசுவதை தவிர்த்துக் கொண்டு
தங்களுக்கு நன்கு தெரிந்த விடயங்கள் குறித்தே பேசவேண்டும். அரசியல்வாதிகளின்
நாவடக்கம் இன்மையினால்தான் நாட்டில் அநாவசியமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும்
ஜனாதிபதி கூறினார்.
ஜனநாயகவாதி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு அரசியல் நடத்தும் ரணில்
விக்கிரமிங்க இன்று எல்.ரி.ரி.யை ஆதரிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் குழுக்களினதும்
வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உள்ள தேசத்துரோக சக்திகளுடன் இணைந்து செயற்படுவது
அவரது எதிர்கால அரசியலுக்கு பெரும் பாதகமாக அமையும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
எங்கள் அரசாங்கம் எவ்வித சுயநோக்கங்களை வைத்து நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை
என்றும் தயாரித்ததில்லை. மக்களுடன் ஒட்டி உறவாடும் நானும் ஏனைய அமைச்சர்களும்
மக்களின் யோசனைகளை உள்ளடக்கியே அவர்களுக்கு தீங்கிழைக்காத வகையில் வரவு செலவுத்
திட்டங்களை தயாரித்து வருகிறோம் என்றும் இந்த வரவு செலவுத்திட்டம் மக்களின் தேவைகளை
நிவர்த்தி செய்யும் வரவு செலவுத்திட்டமாக விளங்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு அரசாங்கத்தின் நல்லாட்சிக்கு
மிகவும் அவசியமாகும். எனவே இனிமேலாவது அமைச்சர்கள் பொது இடங்களில் ஒருவரை ஒருவர்
தாக்கி பேசுவதும் அநாவசியமாக குற்றச்சாட்டை ஒருவர் மீது ஒருவர் சுமத்துவதையும்
தவித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அமைச்சர்கள் அமைச்சரவைக்
கூட்டத்தில் தங்களின் நிலைப்பாடுகளை எடுத்துரைத்து அதுகுறித்து விவாதித்து முடிவு
எடுப்பதற்கான பூரண சுதந்திரத்தைப் பெற்றுள்ளார்கள் என்றும் கூறினார்.
தேர்தல்கள் நடைபெறும் வரை மக்களைப் பற்றி சிந்திக்காமல் மூலையில் முடங்கிக்
கிடக்கும் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற
உறுப்பினர்களும் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்ற உத்தியோகபூர்வ அறிவித்தல்
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட தினம் முதல் கும்பகர்ணன் துயில் எழுந்தது போன்று
திடீரென்று விழித்துக் கொண்டு மக்களுக்காக சேவை செய்கிறோம் என்ற தொனிப்பொருளை வைத்து
அரசியல் மோசடிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உடனடியாக பவுசர்களில் குடிநீரை
அனுப்பி வைக்கத் தவறிவிட்டது என்றும் வரட்சியினால் நெற் பயிர்கள் பாதிப்புக்குள்ளான
பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவி செய்ய மறுக்கிறது என்றும் பொய்யான
குற்றச்சாட்டுகளையும் பிரசாரங்களையும் மேற்கொண்டு ஊவா மாகாண சபை வாக்காளர்களை ரணில்
விக்கிரமசிங்கவும் அவரது எம்.பிக்களும் ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
போதியளவு சுத்தமான குடிநீர் பவுசர்கள் மூலம் இப்போது பாதிக்கப்பட்ட பிரதேசங்களில்
உள்ள மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உலர் உணவுகள் மற்றும் அரிசி போன்ற உணவுப்
பொருட்களும் அரசாங்கத்தின் முயற்சியினால் மக்கள் அமைப்புக்கள் இலவசமாக
விநியோகித்தும் வருகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவின் இன்னுமொரு ஏமாற்று வித்தையே, ரயில் நிலையங்களுக்குச்
செல்வதும் ரயில்களில் பயணிப்பதும் ஆகும். ரணில் விக்கிரமசிங்கவோ அவரது முதலாளித்துவ
வர்க்கத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களோ இலங்கையில் எங்கு சென்றாலும்
விமானங்கள் மூலமும் அல்லது தனியார் ஹெலிகொப்டர்கள் மூலம் அல்லது இலட்சக் கணக்கான
மதிப்பு உடைய சொகுசு வாகனங்களிலேயே பயணிப்பார்கள்.
இவர்கள் ஒரு நாள் கூட பொதுப் போக்குவரத்து சேவைகளான பஸ்ஸிலோ, ரயிலிலோ பயணிப்பதில்லை.
இப்போது தாம் மக்களின் போக்குவரத்து கஷ்டங்களை உணர்ந்து கொண்டது போன்று பஸ்களிலும்,
ரயில்களிலும் மக்கள் அசெளகரியமாகவே பயணிக்கிறார்கள் என்று ரணில் விக்கிரமசிங்க
முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
அதேவேளையில் தென்னிலங்கையில் இருந்து தோன்றிய மண்வாசனை உடைய எங்கள் தேசத் தலைவர்
மஹிந்த ராஜபக்ஷ பஸ்களிலும், ரயில் வண்டிகளிலும் இளமைக் காலத்திலும் பாராளுமன்ற
உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் பயணம் செய்வதுண்டு. இதனால் அவருக்கு
மக்களின் போக்குவரத்து கஷ்டங்கள் நன்கு தெரியும் அதனால்தான் இன்று ரயில் பெட்டிகளின்
எண்ணிக்கையையும் பஸ்களின் எண்ணிக்கையும் அரசாங்கம் அதிகரித்து பொதுப் போக்குவரத்து
வசதிகளை பெருக்கி வருகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் முதலாளித்துவக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஐக்கிய தேசியக்
கட்சி அரசாங்கமே தேசிய மயமாக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்சேவையை
சீர்குலைப்பதற்காக தனியார் பஸ் சேவைகளை 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் அறிமுகம் செய்து
வைத்தது. அப்போது மக்கள் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் பஸ்களில் மிதி
பலகைகளில் தொங்கிச் சென்று உயிர்துறந்த சம்பவங்களையும் ரயில் பெட்டிகளிலும்
அதுபோன்று மிதி பலகைகளில் பலர் தொங்கிச்சென்றும் மேலும் பலர் ரயில் வண்டிகளின்
கூரையில் அமர்ந்து சென்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிக் காலத்தில் வேதனைகளை
அனுபவித்ததையும், உயிர் துறந்ததையும் மறந்து விட்டு இன்று ரணில் விக்கிரமசிங்க
எங்கள் நாட்டின் பொதுப் போக்குவரத்து சீர்குலைந்து விட்டது என்ற கோமாளித்தனமான
வாதத்தை முன்வைக்கின்றார்.
இந்த அரசாங்கம் அரச வளங்களை விற்கவில்லை. தேசத்தின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும்
இத்தகைய தேசத்துரோக நடவடிக்கைகளில் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசியக்
கட்சி அரசாங்கமுமே கடந்த காலத்தில் ஈடுபட்டன என்றும் தெரிவித்த ஜனாதிபதி
தனியார்மயப்ப டுத்தப்பட்ட அரச நிறுவனங்களான சிறிலங்கன் எயார் லைன்ஸ், காப்புறுதிக்
கூட்டுத்தாபனம், எரிவாயு நிறுவனம், செவனகல உட்பட பல நிறுவனங்களை எமது அரசாங்கமே
மீண்டும் மக்கள் மயப்படுத்தியது என்று கூறினார்.
தேர்தல் காலத்தில் மாத்திரம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்
கட்சியினர் பொதுச் சந்தைகள், ஆஸ்பத்திரிகள், பஸ்தரிப்பு நிலையங்கள், ரயில்
நிலையங்கள் போன்றவற்றுக்கு சென்று மக்களின் குறைபாடுகளை கேட்டு அவற்றை தேர்தல்
முடிவடைந்தவுடன் அவற்றை நிறைவேற்றுவோம் என்று கடந்த காலத்தில் சொன்ன, நிறைவேற்ற
முடியாத வாக்குறுதிகளையே இன்றும் மக்களுக்கு அளிப்பதுடன் தங்கள் எதிர்கால திட்டங்கள்
பற்றிய துண்டுப் பிரசுங்களையும் பகிர்ந்து அளித்து வருகிறார்கள்.
தேர்தல் முடிந்தவுடன் ரணில் விக்கிரமசிங்கவோ அவரது கட்சியினரோ மக்களிடம் சென்று
என்றுமே அவர்களுடைய குறைபாடுகளைக் கேட்டறிவதில்லை. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
மக்களை சந்திக்க நேரமில்லாதிருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரதேசத்துக்குச்
சென்று பொது மக்களை சந்தித்து அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகுகிறார்.
ஏதாவது ஓரிடத்தில் ஜனாதிபதியின் கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது
அப்பிரதேசத்தில் உள்ள பலரை பொது மேடையில் இருந்தே ஜனாதிபதி அவர்களின் பெயரைக்
குறிப்பிட்டு எப்படி சுகமாக இருக்கிaர்களா? விவசாயம் நல்ல முறையில் நடைபெறுகிறதா?
உங்கள் தாயார் சுகதேகியாக இருக்கிறார்களா? என்று குசலம் விசாரிக்கும் அளவுக்கு
மக்களின் நெருங்கிய நண்பராக விளங்குகிறார்.
எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் நிச்சயம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பெரும்பான்மை அதிகாரத்துடன் வெற்றிவாகை சூடுவதை எந்ததொரு சக்தியாலும் தடுத்துவிட
முடியாது.