ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

பொலிஸ் பாதுகாப்புடன் பாலு மகேந்திராவின் உடலுக்கு மௌனிகா அஞ்சலி

பொலிஸ் பாதுகாப்புடன் பாலு மகேந்திராவின் உடலுக்கு மௌனிகா அஞ்சலி

நடிகை மௌனி காவுக்கு ஒருவழியாக தன் கணவர் மறைந்த பாலு மகேந்திரா உடலைப் பார்க்க அனுமதி கிடைத்தது. அவர் பொலிஸ் பாதுகாப்புடன் நேற்றுகாலை நேரில் வந்து கணவர் உடலைப் பார்த்து கதறி அழுதார். பாலு மகேந்திரா 1998ல் தாலி கட்டி மணந்தவர் நடிகை மௌனிகா. இதனை 2004ம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பில் இறந்தார் பாலு மகேந்திரா. தகவலறிந்து, கணவர் உடலைப் பார்க்க ஓடிவந்த மௌனிகாவை, பாலுமகேந்திரா உடலைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. இயக்குநர் பாலா, நடிகைகள் அர்ச்சனா மற்றும் ஈஸ்வரி ராவ் போன்றவர்கள்தான் மௌனிகா அங்கு வரக்கூடாது என்று பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பரபரப்பு கிளம்பியது. பாலு மகேந்திரா மீது அவரது மனைவியான மௌனிகாவுக்கு இல்லாத உரிமையா.. அதைத் தடுக்க இவர்கள் யார்? என்ற அளவுக்கு விவாதம் கிளம்ப, உடனடியாக இதில் சுமூகத் தீர்வு காண இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பேசினர். அதன்படி நேற்று காலை மௌனிகாவை அழைத்து, பாலு மகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்த அழைத்தனர். அதைத் தொடர்ந்து அவர் பாலு மகேந்திரா உடல் வைக்கப்பட்டிருக்கும் அவரது சினிமா பட்டறை கூடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். கணவர் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி