ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 
15 வாகனங்களை மோதி சரக்கு லொறி விபத்து

15 வாகனங்களை மோதி சரக்கு லொறி விபத்து

ஆட்டோவை மோதிவிட்டு தப்பிசென்ற லொறி மீண்டும் விபத்தில் சிக்கியது

கல்முனை, அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் மாளிகைக்காடு பிரதேசத்தில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 12 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், கார் மற்றும் பிக்கப் வாக னம் என்பன சேதத்திற்குள்ளாகியுள்ளன.

கல்முனையிலிருந்து அம்பாறை நோக்கி சென்று கொண்டிருந்த கென் டைனர் லொறியொன்று பாதையைவிட்டு விலகி மாளிகைக்காடு பிரதேசத்தில் பிரபலமான தேனீர் கடை ஒன்றின் முன்னால் நிறுத்தப் பட்டிருந்த 12 மோட்டார் சைக்கிள், ஒரு கார் மற்றும் பிக்கப் வாகனம் என்பனவற்றின் மீது மோதுண்டதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தேனீர் கடையில் தேனீர் அருந்திக்கொண்டிருந்ததால் பாரிய உயிரிழப்பு ஏற்படாமல் காப்பாற்றப்பட்டதோடு வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த ஒரு சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஏற்கனவே இந்த கென்டைனர் வாகனம் பாண்டிருப்பு பிரதேசத்தில் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை மோதிவிட்டு மிக வேகமாக அம்பாறைக்கு செல்ல முட்பட்ட வேளையிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விபத்தை நேரடியாக கண்ட பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

அண்மைக் காலமாக கல்முனை பிரதேசத்தில் வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படும் நிலையில் இவ்விபத்து மிகவும் பாரிய விபத்தாக கருதப்படுகின்றது. இக் கென்டைனர் வாகனம் இடது புறமாக பாதையைவிட்டு விலகி இருக்குமானால் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும். கொழும்பு செல்வதற்காக இரவு நேர பஸ்சுக்காக காத்திருந்த பலர் நின்று கொண்டிருந்த நிலையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து நடைபெற்று சற்று நேரத்தில் ஸ்தலத்திற்கு விஜயம் செய்த சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கென்டைனர் சாரதியையும் நடத்துனரையும் கைது செய்யதுடன் விபத்துக்குள்ளாகி சேதமடைந்த சகல வானங்களையும் டிப்பர் ஒன்றில் ஏற்றி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி