ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 
ஜனாதிபதியின் சிறந்த ஆளுமையினால்தான் தமிழ் இளைஞர்களுக்கு புதுவாழ்வு கிடைத்தது

ஜனாதிபதியின் சிறந்த ஆளுமையினால்தான் தமிழ் இளைஞர்களுக்கு புதுவாழ்வு கிடைத்தது

புலிகளின் முன்னாள் போராளி சசிகுமார் கூறுகிறார்

"ஜனாதிபதி அவர்களின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது. என்னைப் போன்ற எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தினால் தவறான வழியில் இட்டுச் செல்லப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகளை புனர்வாழ்வளித்து விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் சசிகுமார் கூறினார்.

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தில் இருந்த போதுதான் அனுபவித்த துன்பங்களைப்பற்றி விபரித்த அவர்; “ஜனாதிபதி மஹிந்த ராஜ்பக்ஷ அவர்கள் தனது வாழ்வுக்கு வழிகாட்டுவார்” என்று நம்பிக்கை வெளியிட்டார்.

எல்ரீ.ரீ.ஈ இயக்கத்தினால் பல்வேறு துன்பங்களை அனுபவித்து மயிரிழையில் உயிர்தப்பிய இரண்டு தமிழ் இளைஞர்கள் நேற்று தினகரன் காரியாலயத்திற்கு வந்து ஆசிரிய பீடத்தினரிடம் மனம் விட்டு உரையாடினார்கள்.

முதலில் நாம் ஹோமாகமவை பிறப்பிடமாகக் கொண்ட 21 வயது குமாரவேல் சசிகுமாருடன் பேசினோம். அவர், தன்னுடைய சோகக் கதையை இவ்விதம் எடுத்துரைத்தார்.

“எனது தந்தையின் மரணத்திற்கு பின்னர் எனது படிப்பை தொடருவதற்கு ஹோமாகமையில் இருந்த பிரச்சினைகள் காரணமாக எனது தந்தையின் நண்பர் ஒருவர் மன்னாருக்கு அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு வயது 12 இருக்கும்.

திருமணத்தின் பின்னர், எனது பெற்றோர் வவுனியா சிதம்பரபுறத்திலேயே வாழ்ந்தார்கள். ஆயினும், சில காலம் எனது தாயார் எனது பாட்டியாருடன் ஹோமாகமையில் இருந்தபோதே நான் பிறந்தேன்.

பிறகு மன்னாரில் இருந்து கொழும்பு செட்டியார் தெருவுக்கு வந்து பொற்கொல்லர் தொழில் பயிற்சியை சில காலம் பெற்றேன். அங்கு ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டதால் சிலரின் உதவியுடன் 2002ல் யாழ்ப்பாணம் சென்றேன்.

பின்னர் இவ்விதம் பிரச்சினைகளால் 2006ல் விஸ்வமடுவிலுள்ள தனது நண்பனின் திருமண வீட்டுக்கு வந்தேன். அதையடுத்து பாதை மூடப்பட்டது. அந்தக்காலகட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் போராளிகளை சேர்த்துக் கொண்டிருந்தது. என்னையும் பலவந்தமாக அமைப்பில் இணைத்துக் கொண்டனர். பின்னர் எனக்கு பலவந்தமாக யுத்தப் பயிற்சியை எல்.ரீ.ரீ.ஈயினர் கொடுத்தார்கள்.

பின்னர் எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளுடன் மன்னார் முழங்காவில் பிரதேசத்திற்கு யுத்த முனைக்கு அனுப்பப்பட்டேன். நாச்சுக்குடா யுத்தத்தில் நான் படுகாயமடைந்தேன். அதையடுத்து நான் போராட முடியாத நோயாளியாகி கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றேன்.

யுத்தம் முடிவடையும் கட்டத்தில் நான் எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளிடமிருந்து தப்பி வந்து பொதுமக்களுடன் ஒன்றாகக் கலந்து அரசாங்க பக்கத்திற்கு இராணுவத்திடம் சரணடைந்தேன். அங்கு இராணுவத்தினர் எங்களை துன்புறுத்தவில்லை. அன்போடு பராமரித்து புனர்வாழ்வளித்து என்னையும் மற்றவர்களையும் விடுவித்தனர்.

எனக்கு அப்போது 18 வயதாக இருந்ததால், என்னை அவர்கள் சிறுவர் போராளிகளாகவே மதித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவித்தனர். இன்று நான் ஒரு சுதந்திரப் பிரஜையாக கொழும்பிலும் நாட்டின் எந்தப் பிரதேசத்திற்கும் செல்லக்கூடியதாக இருக்கிறது. இதற்கு நானும் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

இன்று வாழ்க்கை நடத்த முடியாத பொருளாதார கஷ்ட நிலையில் இருக்கும் எனக்கு ஜனாதிபதி அவர்கள் தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக் கொடுத்து உதவி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.”

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி