'தானா சேர்ந்த கூட்டம்' படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில்
உருவாகும் படத்துக்கு திகதிகள் ஒதுக்கியிருக்கிறார் சூர்யா.
'சி 3' படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் 'தானா சேர்ந்த
கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. கீர்த்தி சுரேஷ் நாயகியாக
நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன்
நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து உருவாகும் சூர்யா படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்
தயாரிக்க முன்வந்தது. இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தது.
செல்வராகவன் கூறிய கதை, தயாரிப்பு நிறுவனம் மற்றும் சூர்யா இருவருக்கும்
பிடித்துவிடவே உடனடியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இக்கூட்டணி குறித்த
அறிவிப்பை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில்
வெளியிட்டது.
யாரும் எதிர்பாராத கூட்டணி என்பதால், பலரும் ஆவலுடன் காத்திருப்பதாக இக்கூட்டணிக்கு
வாழ்த்து தெரிவித்தார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது மற்றும் இதர நடிகர்,
நடிகைகள் உள்ளிட்ட விஷயங்களை எதையும் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.