2017 மெய்வல்லுனர் அட்டவணையில் சர்வதேச போட்டிகளுக்கு முன்னுரிமை
2017 மெய்வல்லுனர் அட்டவணையில் சர்வதேச போட்டிகளுக்கு முன்னுரிமை
(எம்.பஸ்ரிப்)
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தால் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு கால அட்டவணை
தயாரிக்கப்பட்டு தற்போது விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கையளிக்கப்பட்டிருப்பதாக
சங்கத்தின் தலைவர் சுகத் திலகரத்ன தெரிவித்தார். இதன்படி,அடுத்த வருடம் நவம்பர்
மாதம் வரையிலான அனைத்து மெய்வல்லுனர் போட்டிகளுக்கான நேர அட்டவணை முழுமையாக பூர்த்தி
செய்யப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தனியார் வனொலி நிறுவனமொன்றின் ஏற்பாட்டில் அடுத்த வருடம் முதல் மாவட்ட
மட்டத்தில் இளம் மெய்வல்லுனர் வீரர்களை இனங்காணும் நோக்கில் நடத்துவதற்கு
திட்டமிடப்பட்டுள்ள மெய்வல்லுனர் போட்டிகளும் அடுத்தவருட இலங்கை மெய்வல்லுனர்
சங்கத்தின் கால அட்டவணையில் இடம்பெற்றுள்ளதுடன்,இதற்காக கொழும்பு, கேகாலை மற்றும்
மாத்தளை ஆகிய மாவட்ட மெய்வல்லுனர் சங்கங்கள் அனுமதி வழங்கியுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு
விழா இரத்தினபுரி மாவட்டத்தில் நடத்துவதற்கும், இதன் முதற்கட்டமாக மரதன்
ஓட்டப்போட்டிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி நுவரெலியாவில்
ஆரம்பமாகவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனைத்தவிர, சீனா, ஜப்பான், இந்தியா,
உகண்டா, பஹாமாஸ், தாய்லாந்து, கஸகஸ்தான் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில்
மெய்வல்லுனர் வீரர்களுக்கு விசேட பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு
வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.