இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பிலும் இந்தியா நட்பு அழுத்தம் தர வேண்டும்
இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பிலும் இந்தியா நட்பு
அழுத்தம் தர வேண்டும்
- தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இந்திய அரசு, இலங்கை
அரசுக்கு நட்பு அழுத்தம் தர வேண்டும். இந்த அழுத்தம், தற்போது நமது தமிழ் முற்போக்கு
கூட்டணியினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு தயாரித்து வரும் யோசனை வரைவுகள்,
புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவதற்கு உதவிட வேண்டும்.
கடந்த காலங்களை போலல்லாமல், இன்று வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ்
மக்களுக்கு, குறிப்பாக மலையக மக்களுக்கு உரிய தேசிய அவதானத்தை நமது கூட்டணி புதிய
சுறுசுறுப்புடன் பெற்று தந்து கொண்டுள்ளது. இன்று புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில்
நாம் உள்வாங்கப்பட்டுள்ளோம். இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்தில் எங்களை எவரும்
புறக்கணிக்க முடியாத அரசியல் சூழலை நாம் படிப்படியாக குறுகிய காலத்தில்
ஏற்படுத்தியுள்ளோம். நாம் மேலும் பலம்பெற இந்தியா உதவிட வேண்டும். வடக்கு கிழக்கில்
வாழும் எங்கள் தமிழ் உறவுகள் மீது, இந்திய அரசு காட்டிவரும் அக்கறை மற்றும்
அவதானங்களுக்கு எந்தவித பழுதும் ஏற்படாத விதத்தில், எங்கள் மீதும் இந்தியாவின்
அக்கறை அதேவிதமாக இருந்திட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா
சுவராஜிடம் தெரிவித்ததாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்
அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். இதற்கு
“நீங்கள் எங்களது இரத்த உறவுகள் என்பதை நாம் ஒருபோதும் மறக்க முடியாது” என
வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலளித்ததாக கூறிய அமைச்சர் மனோ கணேசன் மேலும்
கூறியதாவது,
புதிய அரசியலமைப்பு உருவாக்கம், புதிய தேர்தல் முறைமை ஆகியவை தொடர்பில் நமது
முற்போக்கு கூட்டணி தேசியரீதியாக இன்று எடுத்து வரும் நடவடிக்கைகளை நாம் இந்திய
அமைச்சருக்கு விளக்கி கூறினோம்.