தென் சூடான் பழங்குடியின மோதலில் 100க்கும் அதிகமானோர் பலி
தென் சூடான் பழங்குடியின மோதலில் 100க்கும் அதிகமானோர் பலி
தென் சூடானில் கிளர்ச்சியாளர்கள் பழங்குடி குழுவொன்றுடன் இணைந்து மற்றொரு
பழங்குடியினர் மீது நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 100க்கும்
அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தென் சூடானின் ஜொக்கலை மாநிலத்தில் பழங்குடி
இனத்தினருக்கு இடையில் தொடரும் கால்நடை தொடர்பிலான மோதலின் தொடர்ச்சியாகவே கடந்த
வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஜொக்கலை மாநிலத்தில் நிலவும் பஞ்சத்தை தவிர்க்க பழங்குடியின மக்கள் தங்கள்
கால்நடையுடன் பயணம் மேற்கொண்டனர். அவர்களின் பாதுகாப்பிற்கு 14 இராணுவத்தினரும் உடன்
சென்றனர்.
அப்போது ‘யாவ் யாவ்’ இயக்க தீவிரவாதிகள், மற்றொரு பழங்குடியினருடன் சேர்ந்து கொண்டு
கால்நடையுடன் பயணம் மேற்கொண்ட பழங்குடியின மக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் பெண்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பிற்கு
சென்ற 14 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சூடானிலிருந்து கடந்த 2011
ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற தென் சூடானில் இவ்வாறான மோதல்களால் 1500க்கும்
அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.