கடல், தரை, வான் வழியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு
இந்திய இராணுவ வீரர்கள் 2 பேர் பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவத்தை
தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து இரு நாட்டு இராணுவ
அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்ததை தொடர்ந்து பதற்றம் தணிந்தது.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண கசி பிராந்திய
பகுதியில் கடந்த 9ம் திகதி இரவு பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம்
நீடித்த துப்பாக்கி சண்டையில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டல் மத்திய இராணுவ மந்திரி ஏ. கே. அந்தோனி
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எல்லை பகுதியில் சகஜமான இயல்பு நிலை
திரும்பவில்லை என்றும் பதற்றம் நீடிப்பதாகவும் ஆயுதம் ஏந்திய இந்திய வீரர்கள்
எல்லைப் பகுதி மற்றும் கடல், வான் வழியாக தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
பாகிஸ்தான் தரப்பில் அமைதி திரும்புவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதை செயலில்
காட்டுவதில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தானில் 42 தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதாக தகவல்
கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.