மாணவரின் பலத்தையும் பலவீனத்தையும் அடையாளம் காண பாடசாலை ஆசிரியரால் மட்டுமே
முடியும்
மாணவரின் பலத்தையும் பலவீனத்தையும் அடையாளம் காண பாடசாலை ஆசிரியரால் மட்டுமே
முடியும்
ரியூஷன் கல்வியினால்
பாதிப்புகள் ஏராளம்
உவைஸ் காசிம்
‘பிச்சை எடுப்பினும் கற்கை நன்றே’ என்ற முது மொழி க்கு ஏற்ப ஒவ்வொரு மனிதனுக்கும்
கல்வி என்பது மிகவும் முக்கியமானதாகும். இதற்காகவே எமது அரசு பல கோடி ரூபாவை
இலவசமாகக் கல்விக்காக செலவழித்துக் கொண்டிருக்கிறது.
உதாரணமாக இலவச சீருடை, இலவசப் புத்தகங்கள், மதிய உணவு, பாடசாலை நுகர்வு, முதலீட்டுப்
பொருட்களுக்கான செலவு, என்பனவற்றைக் கூறலாம். இதனோடு நின்றுவிடாமல் ஜனாதிபதி அவர்கள்
ஒவ்வொரு மாணவருக்கும் பாதணியை வழங்குவதற்கும் உத்தேசித்திருப்பதானது போற்றக்
கூடியதாகும்.
ஆனால் இவற்றின் பெறுமதியை உற்று உணர்ந்து கொள்ள முடியாத சிலரினால் இலவசக் கல்வியின்
புனிதத்துவம் அழிந்து கொண்டிருக்கிறது. இது இவ்வாறு இருக்க எமது அரசு நவீன
சவால்களுக்கு மத்தியில் பல்வேறு நாடுகளுடன் போட்டி போடக் கூடிய கல்வித்
திட்டத்தினையும் முன்வைத்திருப்பதானது பாராட்டத்தக்கதாகும்.
இவ்வாறான கல்வியைப் பெற்று சமூகத்தில் தலை நிமிர்ந்து நிற்கக் கூடியவர்களாக எத்தனையோ
பேர் மாறியிருக்கின்றார்கள். இருந்தாலும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த
பல்லாயிரக்கணக்கானவர்கள் “கல்வியை” இன்று ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.
இதனால் அவர்கள் சமூகத்தில் நற்பிரஜையாக வாழ்வதோடு, சமூகத்தினையும்
வழிப்படுத்துகின்றனர். இவ்வாறு பெறுமதிமிக்க கல்வியில் இன்று புற்றுநோய் போன்று
“டியூசன்” ஊடுருவியிருப்பதானது வருத்தத்திற்குரியதாகும்.
‘டியூசன்’ கல்வியின் பெருக்கத்தினாலும், தாக்கத்தினாலும், மாணவர்கள் இன்று பாடசாலைக்
கல்வியில் நம்பிக்கையிழந்தவர்களாக காணப்படுகின்றார்கள். இது மட்டுமல்லாது
பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரிய, ஆசிரியர்களும், இன்று டியூசன் கல்வியில்
தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
டியூசன் கல்வி சமூகத்தில் வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு எந்தப் பாதிப்பினையும்
ஏற்படுத்துவதில்லை. மாறாக சமூகத்தின் நடுத்தர, வசதி குறைந்த மாணவர்களுக்கே டியூசன்
கல்வியினால் கூடுதலான பாதிப்புக்கள் இடம்பெறுகின்றன. பெற்றோருக்கு மூன்று அல்லது
நான்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் ரியூசனுக்காக செலவழிக்க முடியாமல்
திண்டாடுகின்றனர்.
இதனால் குழந்தைகள் தங்களது கல்வி நடவடிக்கைகளை இடை நடுவில் கைவிட
வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றார்கள். இது மட்டுமல்லாது பல
எதிர்பார்ப்புகளுடன் இருந்த குறித்த மாணவர்களின் எதிர்காலம் சூனியமயமாகின்றது.
இவற்றுக்கு யார் பொறுப்பு? பெற்றோர்களுக்கும் இதில் பங்கு இருக்கின்றது.
பாடசாலைகளை
நம்பிக்கைக்குரியவைகளாக மாற்றுங்கள். மாணவர்களின் கல்விக்கு உயிர் கொடுங்கள், இதனால்
பல மாணவர்களின் இடை விலகல்களைத் தடுக்க முடியும் என்பதுடன் குறிப்பிட்ட சமூகமும்
கல்விச் சமூகமாக மாறும். இது மட்டுமல்லாது அரசினது குறிக்கோள்களும் நிறைவு பெறும்.
இன்று டியூசன் கல்வியின் தாக்கமானது ஆசிரிய, ஆசிரியர்கள் மத்தியிலும்
தாக்கத்தினையும், விரிசல்களையும் ஏற்படுத்தாமல் விடவில்லை. ஏனெனில் டியூசனில்
பிரபல்யமான ஒரு ஆசிரியரை வேறு விதமாகவும், டியூசனில் படிப்பிக்காத ஆசிரியர்களை
இன்னொருவிதமாகவும் மாணவர்கள் நோக்குகின்றனர். இவை இவ்விதமிருக்க சில பாடசாலைகளில்
கற்பிக்கும் அதே ஆசிரியரே, பின்னரே வகுப்புக்களை வைத்து மாணவர்களை வற்புறுத்தி பணம்
பெறுவதாக மாணவர்கள் வாயிலாக ஆங்காங்கே தகவல்கள் வெளியாகின்றன.
தற்பொழுது ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் கூட மாலை நேர வகுப்புக்கள்
என்ற ரீதியில் டியூசனுக்குப் போய் வருவதனால் வேதனைக்குரியதாகும். இதனால் இவர்கள்
ஓய்வு நேரங்களில் விளையாடக் கூட நேரமில்லாதவர்களாக வளர்ந்து, நாளடைவில் நோய்
உள்ளவர்களாக மாற இந்த டியூசன் காரணமாக அமைகிறது.
இவை மட்டுமல்லாமல் அண்மைக் காலத்தில் மக்களின் கருத்துப்படி பாடசாலை இடை
விலகல்களுக்கு முக்கிய காரணம் டியூசன் கல்வியாகத் தான் இருக்கிறது. ஏனெனில் பாடசாலை
தவணை ஆரம்ப முதல் டியூசன் நிலையத்தில் கல்வி கற்பதற்கு முணைந்து அதற்கு செலவழிக்க
முடியாமல் திணறுகின்றார்கள். பதிவுக் கட்டணம், டியூட்ஸ்..... என்ற போர்வையில்
மாணவர்களிடமிருந்து பணம் பிடுங்குகின்றார்கள்.
பாடசாலையில் தரம் 6, 7, 8
வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் டியூசன்
கல்விக்கு ஆளாகின்றார்கள். இதனால் இவர்களுக்கு எந்த விதமான நன்மைகளும் கிட்டப்
போவதில்லை. மாறாக பாடசாலை ஆசிரியர்களால் தான் மாணவர்களின் பலம், பலவீனங்களை அடையாளம்
கண்டு கல்வி கற்பிக்க முடியுமே தவிர, வெறும் பணத்திற்கு மட்டும் ஆசைப்பட்டு விரிவுரை
ரீதியாக கற்பிக்கும் டியூசன் ஆசிரியர்களால் தியாகத்துடனும், அர்ப்பணிப்புடனும்,
கல்வி கற்பிக்க முடியாது என்பதை பெற்றோராகிய நாம் விளங்கி கொள்ள வேண்டும்.