முள்ளிவாய்க்கால் போரில் எமது மக்களின் இழப்புக்களை துயரங்களை நேரில் பார்த்தவள்
என்ற வகையிலும் நானும் அதில் என் காலை இழந்தவள் என்ற வகையிலும் மக்களின் வலிகளை
நான் அறிவேன். வலிபடும் மக்களின் துயர் தீர்க்க என்னால் இயன்ற அளவு பாடுபடுவேன்.
மக்களுடைய நிலங்கள் அவர்களுக்கு கிடைப்பதற்கு உரிய தரப்புக்களோடு தொடர்பு கொள்வதோடு
அதற்காக குரல் கொடுப்பேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா
தெரிவித்தார்.
இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்கால் வரை சென்று தன் காலை இழந்தும்
தமிழ் தேசியத்துக்காக குரல்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு
செய்யப்பட்டுள்ள முல்லைத்தீவின் மங்கை சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவுக்கு வற்றாப்பளை
கண்ணகி ஆலய நிர்வாக சபை தலைவர் மு. குகதாசன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் புதிய பெண் பாராளுமன்ற
உறுப்பினரை வாழ்த்தி உரைகளும் ஆற்றினர்.இந்த நிகழ்வின்போது இராணுவ ஆக்கிரமிப்பில்
உள்ள பொது மக்களுக்கு சொந்தமான கேப்பாப்பிலவு நிலத்தை விடுவித்து தர மகஜர் ஒன்றும்
அப்பகுதி மக்களால் சாந்தி ஸ்ரீஸ்காந்தரசாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.