இருநூறு வருடங்களாக தோட்ட மக்கள் என்றும் பெருந்தோட்ட மக்கள் என்றும் நிர்வாக பெயர்
கொண்டு அழைக்கப்பட்ட மலையக சமூகத்தின் அவலத்தை நீக்கி லயத்து வாழ்க்கை முறையை
மாற்றி அமைக்க புதிய கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தை அமைச்சு மட்டத்தில்
முன்னெடுக்கவுள்ளோம்.
மலையக மக்களின் நீண்டகால கனவுகளை நனவாக்குவதே எனது முதலாவது
இலக்காக இருக்கும் என மலைநாட்டு புதிய கிராம உட்கட்டமைப்பு மற்றும் சமூக
அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மலையகப் பெருந்தோட்ட
மக்களின் லயன் வாழ்க்கை முறையை ஒழித்து தோட்டம் என்ற சொல்லுக்கு பதிலாக கிராமங்களாக
அவற்றை மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தை அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிடம்
பொதுக்கோரிக்கையாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு முன்வைத்து மீளவும் அந்த அமைச்சினை
நிறுவினோம். இன்று அதே அமைச்சு எமது கொள்கைத்திட்டங்களுக்கு ஏற்றாற்போல மலைநாட்டு
புதிய கிராம உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சு எனும் பெயரில்
விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மலையக வரலாற்றில் அமைச்சு மட்டத்தில் இந்த மாற்றத்தை
கொண்டு வந்துள்ளமை சாதனையாகும். அதேநேரம் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு கிடைத்த
கெளரவமாகவும் கொள்ள முடியும். இதனை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆளும் அரசாங்கத்துக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.