துபாய் நாட்டிலிருந்து கலைஞர்களின் ஆக்கங்களைத் தொகுத்து லண்டன் சென்று நிகழ்ச்சிகளை
வழங்கிவந்த காலகட்டத்தில்தான் இந்த சிரமத்தையும் போக்க துபாய் நாட்டிலேயே ஒரு கிளையை
ஆரம்பித்தால் நல்லது என்று தோன்றியது.
2002ம் ஆண்டு பெரும் முதலீட்டு செலவில் ஒலிபரப்பு சாதனங்களை கொள்வனவு செய்து துபாய்
நாட்டில் ‘சங்கமம்’ ஒலிபரப்பு கிளையை ஆரம்பித்தேன். மக்கள் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்கும் நாடு துபாய். ஆகவே என்னுடைய இந்த ஒலிபரப்பு சேவைக்கு அனுமதியையும்
வழங்கியது. ஒரே அலைவரிசையில் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட இலண்டன் நேயர்களும்
கேட்கக் கூடிய வகையில்சேவைகள் நடந்தன. பகுதிநேர ஒலிபரப்பு சேவையாக நடத்தி வந்த
சங்கமத்தின் சேவையை முழுநேர நிகழ்ச்சியாக நடாத்துவதற்காக சுங்கப் பகுதி தொழிலையும்
இராஜிநாமா செய்தேன். தனி மனித உழைப்பால் நடாத்தி வந்த இந்த சங்கம ஒலிபரப்பு சேவைக்கு
போதிய விளம்பர அனுசரணையாளர்கள் கிடைக்காமையினால் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுக்க
வேண்டிய சூழலும் ஏற்பட்டது. உழைக்க வந்த இடத்தில் உழைக்காமல் போக்கற்ற
வேலைப்பார்க்கிறான் என்றும் தூற்றினார்கள்.
நான் சளைக்கவில்லை. வானொலி சேவையோடு தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தேன். கலாசார
விழுமியங்களுக்கு களங்கமில்லாமல் நடாத்துவதற்கான அங்கீகாரம் கிடைத்தது. சங்கமம்
தொலைக்காட்சி சேவை மத்திய கிழக்கில் வாழும் தமிழ் பேசும் அனைத்து இல்லங்களையும்
சென்றடைந்தது. மத்திய கிழக்கில் இயங்கும் சுமார் இருபத்தைந்து தமிழ்ச் சங்கங்கள்
அதன் நிகழ்வுகளை சங்கமத்தின் மூலமாக ஒளிபரப்பு கிறார்கள்.
பெரும்பாலான தமிழக கலைஞர்கள் இந்நாட்டில் இலைமறைக்காயாக வாழ்கின்றார்கள். நல்ல
நடிப்புணர்வு, பாடக்கூடிய குரல் வளம், பேச்சாற்றல், ஆய்வுகள் என்று பலதரப்பட்ட
கலைஞர்கள் தங்கள் திறமையை சங்கமத்தின் மூலமாக வெளிக்கொணர்ந்து பூரிப்படைகின்றார்கள்.
என் கவலையெல்லாம் நான் பிறந்த வளர்ந்த இலங்கை மண்ணிலிருந்து ஒரு கலைஞரும் முன்
வருகின்றார்கள் இல்லையே என்று. இலங்கையில் ஓரமாக இருந்த என் கலைபடைப்பு அந்நிய
மண்ணில் முழுமையாக வெளிப்படுத்த அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு
பெருமைப்படுகின்றேன். இந்த வாய்ப்பை இலங்கை கலைஞர்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்த
வேண்டுமென்று விரும்புகின்றேன். அவர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்க
காத்திருக்கின்றேன். சங்கமத்தின் மூலம் கடந்த இரு தசாப்தங்களில் சுமார் 300- 400
கலைஞர்கள் உருவாகியுள்ளார்கள். இதில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு கூட இலங்கை
கலைஞர்கள் இல்லை என்பதுதான் வேதனை.
சங்கமத்தின் கலைப் பயணத்தில் நான் சந்தித்த இலங்கை கலைஞர் ஒருவரே. அவர்தான் ஜின்னா
சரிபுதீன். நல்ல கவிதையாளர். ஆண்டு தோறும் கலைஞர்களைப் பாராட்டி கெளரவிக்கும்
விழாவில் நம் இலங்கை கலைஞர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற பேரவாவில் தான்
நம்நாட்டு சிறந்த பாடகி நூர்ஜஹான் மர்சூக் மற்றும் சிறந்த எழுத்தாளர் மானா
மக்கீனையும் அழைத்து சங்கமத்தால் கெளரவப்படுத்தினேன். இன்னும் பல கலைஞர்கள் நம்
மண்ணில் உருவாக வேண்டும். அவர்களுக்கு ஆவனசெய்ய காத்திருக்கின்றேன். தொடர்பு
கொள்ளுங்கள். தொலைபேசி 00971506507604
Email : [email protected] குறும்படத் தயாரிப்பில் ஆர்வம் கொண்டுள்ளேன்.
ஏற்கனவே துபாய் நாட்டில் குறும்பட மொன்றை வெளியிட்டுள்ளேன். இலங்கை கலைஞர்களைக்
கொண்டு இலங்கை இயற்கை வனப்புக் காட்சிகளோடு இயக்கவிருக்கும் இக்குறும்படத்திற்கு
முழு வாய்ப்பும் நம் கலைஞர்களுக்கே வழங்கவிருக்கின்றேன். அத்தோடு இலங்கை
தொலைக்காட்சி சேவையொன்றோடு இணைந்து சங்கமம் நிகழ்ச்சிகளை பகிர்ந்து ஒளிபரப்ப
ஒழுங்குகள் நடந்து கொண்டிருக்கின்றது என்பதையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்த
விரும்புகின்றேன்.
கலைப் பயணத்தில் ஒரு நோக்கை வைத்து பயணித்தோமானால் கலைத்தாய் ஒருபோதும் நம்மை
கைவிடமாட்டாள் என்பது என் நம்பிக்கை. அது என் வாழ்விலும் சாத்தியமாயிற்று.