சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராக இருந்த 46 பேரை பொலிஸார் கைது
செய்துள்ளனர். பேருவளை நகரிலுள்ள சமனல விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து
நேற்று அதிகாலை 2.40 மணியளவில் 46 சந்தேக நபர்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக
பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சட்டவிரோதமாக கடல் வழியைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல குழுவொன்று
தயார் நிலையில் உள்ளதாக பேருவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே அதிரடி
தேடுதல் நடத்தி முற்றுகை யிட்டுள்ளனர். சந்தேக நபர்களை அழைத்துச் செல்வதற்காக
வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, வவுனியா மற்றும் நீர்கொழும்பு ஆகிய
பிரதேசங்களைச் சேர்ந்த 46 சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 29 ஆண்களும், 07 பெண்களும், 10 சிறுவர்களும் அடங்குவர்.