13 ஆவது கொழும்பு மரதன் போட்டி; கென்ய வீரர்கள் சம்பியன்
13 ஆவது கொழும்பு மரதன் போட்டி;
கென்ய வீரர்கள் சம்பியன்
13வது கொழும்பு மரதன் போட்டியில் ஆண்களுக்கான போட்டியில் முதல் மூன்று இடங்களையும்
கென்ய வீரர்கள் தட்டிச் சென்றனர்.
இதேவேளை பெண்களுக்கான மரதன் போட்டியில் முதல் இரண்டு இடங்களையும் கென்ய
வீராங்கனைகளும் 3ம் இடத்தை இலங்கை வீராங்கனை பி. ஜி. எல். ஏ. போகாவத்தையும் பெற்றுக்
கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இந்த மரதன் போட்டியை
ஜனாதிபதியின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கன் விமான சேவையின் சந்தைப்படுத்தல்
முகாமையாளர் பிரதீப் துரைராஜ், மேல் மாகாண சுற்றுலாச்சபைத் தலைவர் கிளாவுட் தோமஸ்,
அனில் குணவர்தன, திலக் வீரசிங்க, ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
இப்போட்டியில் 4 ஆயிரம் மெய்வல்லுனர்கள் பங்கேற்றனர். 25 நாடுகளில் இருந்து 113
வெளிநாட்டு போட்டியாளர்கள் பங்கேற்றமை விசேட அம்சமாகும். அத்துடன் இரண்டு களியாட்ட
மரதன் போட்டியும் அரை மரதன் போட்டியும் 42.196 மரதன் போட்டியும் இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு 2500 அமெரிக்க டொலரும், ஸ்ரீலங்கன் விமான
சேவையால் டிக்கெட்டும் வழங்கப்பட்டது.
இதே வேளை இப்போட்டியில் வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு
நீர்கொழும்பு பீச்பார்கில் இடம் பெற்றது. இறுதி நிகழ்வில் பரிசளிப்பு விழாவுக்கு
மேல் மாகாண சுற்றுலாத்துறை அமைச்சர் நிமால் லான்சா, ஸ்ரீலங்கன் விமான சேவையின்
தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க, நீர்கொழும்பு மாநகர பிரதி முதல்வர் தயான் லான்சா,
கிளோட் தோமஸ் மேல் மாகாண சுற்றுலா சபைத் தலைவர், முன்னாள் மெய்வல்லுனர்கள் ரோஸா,
விமலசேன பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மரதன் போட்டி நல்ல முறையில் சிறப்பாக இடம்பெற்றது. ஒத்துழைப்பு வழங்கிய
அனைவருக்கும் நன்றி என திலக் பெரேரா தெரிவித்தார்.