எழுத்துகளுக்குள் எண்களை புகுத்தும் போது வருகின்ற சிக்கல்
எழுத்துகளுக்குள் எண்களை
புகுத்தும் போது வருகின்ற சிக்கல்
யாரோ எதனாலோ, எப்போதோ வழுக்கி விழுந்த பின்வரும் இடங்களில் நாமும் நம் சோம்பலால்
வழுக்கி விழுந்து கொண்டே இருக்கிறோம்.
10-ல், 10-ம், 10-வது
மேல் உள்ளவாறு எழுதுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவற்றை முழுமையாக எழுத்தால்
எழுதிப் பார்த்தால் விளங்கும்.
10-ல் இதை முழுமையாக எழுத்து வடிவத்திலேயே எழுதினால் பத்து+ல் ஸ்ரீ "பத்துல்' என்று
தானே எழுத வேண்டும். இதைப் படித்துப் பாருங்கள். பத்துல் என்றுதானே வருகிறது.
பத்தில் என்று நினைத்துக்கொண்டு எழுதும் நாம், பத்துல் என்று எழுதுகிறோமே இது
முறைதானா?
அவ்வாறே பத்தாம் வகுப்பு என்று எழுதும் போதும் 10-ம் என்று எழுதுகிறோமே, இதையும்
மேற்கூறியவாறு முழுமையாக எழுத்து வடிவில் எழுதிப்பார்த்தால் "பத்தும் வகுப்பு'
என்றாதானே வருகிறது. ஆகவே, இவற்றை முறையே 10-இல், 10-ஆம் என்றுதான் எழுத வேண்டும்.
எழுத்தில் முழுமையாக எழுதினால் இந்தச் சிக்கலே வராது. எண்ணும் எழுத்தும் கலந்து
எழுதப்படும் போதுதான் இச்சிக்கல் வருகிறது.
இவ்வாறே 10-கு என்று எழுதினால் "பத்துகு' என்றுதானே வரும். ஆகவே, இதைச் சரியாக எழுத
வேண்டுமானால் 10-க்கு என்று எழுதுவதே சரி. எனவே, இத்தகைய இடங்களில் நமக்கு ஐயம்
வரும்போது அப்பகுதியை முழுமையாக எழுத்து வடிவில் எழுதிப் பார்த்தால் ஐயம் தெளிந்து
கொள்ளலாம்.
10-ஆம் வகுப்பு என்று எழுதுவதைக் கைவிட்டுச் சிலர் 10-வது வகுப்பு என்று எழுதுகிற
வழக்கத்தை மேற்கொள்கின்றனர்.
இதை முழுமையாக எழுத்தால் எழுதினால் பத்து+வது ஸ்ரீ பத்துவது வகுப்பு என்றுதானே வரும்.
ஆகவே, அதனை 10-ஆவது என்று எழுதுவதே சரி. இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய
மற்றொன்றும் இருக்கிறது. 10-ஆம் வகுப்பு என்று சொல்வதுதான் சரியானதே தவிர, ஆம்
என்பதற்கு மாறாக ஆவது என்பதைப் பயன்படுத்துவதற்கு மொழி மரபில் இடமில்லை.
ஏனெனில், ஆகும் என்னும் சொல்தான் ஆம் என மருவி வழங்கப்படுகிறது. வது என்பது ஆவது
என்பதிலிருந்து வந்ததென்று கூறவும் முடியாது. அப்படி ஒரு மரபு இருப்பதாகவும்
தெரியவில்லை. அதன் பொருளும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. ஆகவே, "ஆவது' அல்லது "வது'
என்று எழுதும் முறையை முற்றிலும் கைவிடுவதே பொருத்தமாகும்.