“கார்கில் போரில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததற்கு நான் தான் பொறுப்பேற்க வேண்டும் என
நவாஸ் ஷெரீப் கூறுவது தவறு. காஷ்மீர் மற்றும் கார்கில் பிரச்சினைகளில் மக்களை தவறாக
முன்னடத்திச் செல்வதை அவர் நிறுத்த வேண்டும். அடுத்தாண்டு, மார்ச் 23ம் திகதி நான்
பாகிஸ்தான் திரும்புவேன்” என்று பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷராப்
கூறியுள்ளார்.
கார்கில் போரில் பாக். தோல்வி அடைந்ததற்கு அப்போதைய இராணுவத் தளபதியான முஷாரப் தான்
பொறுப்பேற்க வேண்டும் என்று பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம்
சாட்டியிருந்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதத்தில் தன் கட்சி தொண்டர்களிடையே
வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் பேசிய முஷாரப் கூறியதாவது:
கார்கில் போரின் போது, அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது
பற்றி பொய் சொல்கிறார் நவாஸ். கார்கில் போரின் உண்மை நிலை என்ன என்பதைப் பற்றியும்
அவர் பேசவில்லை.
வரும் 2013 பொதுத் தேர்தலில் கலந்துகொள்வதற்காக, அடுத்தாண்டு மார்ச் 23ம் திகதி நான்
பாகிஸ்தான் திரும்புவேன். இவ்வாறு முஷாரப் தெரிவித்தார்.