தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் அடங்கிய பிரேரணைக்கு வட மாகாண சபையில்
இருட்டடிப்பு
சிவாஜpக்கே இந்நிலையா?
அதிர்ச்சியில் வடபகுதி மக்கள்; இரண்டு மாதங்களுக்கு மேலாக தீர்வு காண தவித்தவர்
சபையில் சத்தியாக்கிரகம்
(எஸ். சுரேஷ்)
வலி வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் அடிப்படைப் பிரச்சினை, வடமராட்சி
மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை எனத் தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளைச்
சுட்டிக்காட்டி அவற்றுக்குத் தீர்வு காண வட மாகாண சபை உறுப்பினர்
எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அம்மாகாண சபை
இரண்டு மாத காலமாக இருட்டடிப்புச் செய்து வருவது ஏன் என வடக்கு மக்கள்
கேள்வியெழுப்பியுள்ளனர்.
தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட மக்களது அடிப்படைத் தேவைகள் அடங்கிய பிரேரணையை சபைத்
தலைவர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவாதத்திற்கு எடுக்காது தேவையற்ற விடயங்களுக்கு
முக்கியத்துவம் கொடுத்து உடனடியாகவே எடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டி உறுப்பினர்
சிவாஜிலிங்கம் கடந்த வியாழனன்று சபை அமர்வின்போது சபையின் நடுவே தரையில் அமர்ந்து
தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.
வடமாகாண சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியில் இருந்து வருகிறது.
அக்கூட்டமைப்பின் ஐந்து கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றான ரெலோ கட்சியின் அரசியல்துறைப்
பொறுப்பாளராக சிவாஜிலிங்கம் இருந்து வருகிறார். அத்துடன் இவர் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினருமாவார். இவர் வடபகுதி தமிழ் மக்களின் அனைத்துவிதமான பிரச்சினைகளையும்
ஆழமாக அறிந்து வைத்திருப்பவர்.
இந்நிலையில் சிவாஜிலிங்கத்தின் முக்கியமான பிரேரணை தட்டிக் கழிக்கப்பட்டமைக்கு அவைத்
தலைவரினால் காரணம் எதுவும் கூறப்படவில்லை. தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள பிரதான
கட்சியான தமிழரசுக் கட்சி மாகாண சபையில் மட்டுமல்லாது சகல இடங்களிலும் அதன் ஏனைய
கூட்டணிக் கட்சியின் உறுப்பினர்களை ஒதுக்கி வைத்து வருவதனையே இச்சம்பவம்
சுட்டிக்காட்டுவதாக கூட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மக்களது பிரச்சினைகளை தீர்க்க முன்வைத்த சிவாஜியின் பிரேரணைக்கு முக்கியத்துவம்
கொடுக்காது முதல்வருக்கும், அவைத் தலைவருக்கும், அமைச்சர்களுக்கும் அதிசொகுசு
வாகனங்களைக் கொள்வனவு செய்வதிலேயே அவர்கள் குறியாக இருக்கின்றனர் என சபையின் ஏனைய
உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.