பாலிந்த நுவர அஷ்க்வெலி தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத்
தீர்வு
பாலிந்த நுவர அஷ்க்வெலி தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத்
தீர்வு
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த லயன்
குடியிருப்புகளிலேயே இன்றும் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
ஒரு விறாந்தையும் எட்டு அடி அறை மட்டுமே இங்கு அமையப் பெற்றுள்ளன. இங்கு சமையல் அறை
கிடையாது. காற்று நுழையக்கூட வழியில்லாத இருண்ட அறைக்குள்ளேயே அனைத்து கருமங்களையும்
நிறைவேற்றிக் கொள்ள வேண்டியுள்ளனர்.
வீட்டு முற்றம் இல்லாத லயன் குடியிருப்புக்களைக் கொண்ட பல தோட்டங்களும் உண்டு.
இருக்கும் வீட்டு முற்றத்தை பாதையாகப் பயன்படுத்தி மக்கள் போக்குவரத்துச் செய்யவும்
வாகனப் போக்குவரத்து ஈடுபடும் ஒரு நிலை ஏற்படும்போது அங்கு வசித்துவரும்
குடியிருப்பாளர்களின் நிலை எவ்வாறிருக்கும்? எத்தனை பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம்
கொடுக்க வேண்டியிருக்கும் என்பது பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவ்வாறானதொரு’ நிலை களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர அஷ்க்வெலி தோட்டத்தில் மிக
நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. 12 தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வரும் லயன்
குடியிருப்புக்கள் இந்த குடியிருப்புக்களுக்கு முன்னால் அமைந்துள்ள முற்றமே
கலஹிட்டிய கிராமத்துக்கான பாதையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
நீண்ட காலமாக கிராமத்தவர்களும், தோட்ட மக்களும் இதன் ஊடாகவே போக்குவரத்துச்
செய்வதுடன் வாகனப் போக்குவரத்து இடம்பெற்று வருவது வழக்கமாகும்.
இதனால் இங்கு வசித்து வரும் குடியிருப்பாளர்கள் தமது வீடுகளில் இடம்பெறும் மங்கள,
அமங்கள காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாமலும் சிறுவர்கள் ஓடி ஆடி
விளையாடக்கூடிய வசதியில்லாமலும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்ததுடன்
விபத்துகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. வீட்டில் ஒருவர்
இறந்துவிட்டால் இறந்தவரின் உடலை வெளியில் எடுத்து வைத்து இறுதிக் கிரியைகளைக் கூட
செய்து கொள்ள வழியில்லாது இருண்ட அந்த எட்டடி அறைக்குள்ளேயே வைத்து அனைத்து
காரியங்களையும் செய்து கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நீண்ட காலமாக இந்த மக்கள் எதிர்நோக்கி வந்த இப்பிரச்சினைக்குத்
தற்பொழுது தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த நிலைகுறித்து புளத்சிங்கள பிரதேச சபை உறுப்பினர் ரீ.ஜெயராஜ் பிரதி அமைச்சரான
நிர்மல கொத்தலாவலவின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து பிரதி அமைச்சர் அண்மையில்
இங்கு விஜயம் செய்து பார்வையிட்டு தோட்ட அதிகாரியின் அனுமதியுடன் தோட்ட எல்லைப்
பகுதியில் கலஹிட்டிய கிராமத்துக்கான புதிய பாதை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை
எடுத்துள்ளார்.
சுமார் 30 லட்சம் ரூபா செலவில் 7 கி.மீ தூரம் கொண்ட புதிய பாதை வெட்டப்பட்டு
கொன்கிaட் பாதையாக அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது. அஷ்க்வெலி தோட்ட மக்கள் நீண்ட
காலமாக எதிர்நோக்கிவந்த பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்த பிரதேச சபை
உறுப்பினர் ரீ.ஜெயராஜ், பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல ஆகிய இருவருக்கும் தோட்ட
மக்களும், கிராம வாசிகளும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.