சீனம்பிட்டி வடிச்சல் தண்ணீர் சீறிவந்து
சிற்றோடையான ஆற்றில் ஓடி மிச்சம்
ஊனமுற்ற காயநீரு நாறுமாப்போல்
ஊரேதுர் நாற்றமாகி தொல்லையாச்சு!
கடைசியாகி மிஞ்சி நின்ற ஓடைக்குள்ளே
கம்பிவேலி போட்டுப் பொதுத் தள்ளுறாங்க
இடையிடையே சண்டை வரும் இருகரைக்கும்
இவைகளை யார் கேட்டாரோ இதுவரைக்கும்!
ஓடைகள் நதிகளான கதைகள் உண்டு
ஓரசாரம் நகரமான சரித்திர முண்டு
ஓடையாகி நதிதொலைந்த ஓரொன்றென்றால்
ஒலுவிலைத்தான் சொல்லிடலாம் வேறெங்குண்டோ!
வரமொன்று வேண்டும்
- தொன்மையூர் கவிராயர் -
பொங்கும் அலை தரைமீது பொருதுகின்ற கோலம்
பொந்துகளில் நண்டுபுகுந் தோடிவிளை யாடும்
செங்கதிரும் சாகரத்துள் செத்துவிழும் மாயம்
செகமெங்கும் காரிருளும் சூளுகின்ற நேரம்
அந்திபடும் வேளையிலே ஆகாயம் மீதில்
அணியணியாய் பறவைகளும் அடைந்திடவே செல்லும்
உந்தி எழும் அலைகளினால் உயர்ந்துவரும் தோணி
உள்நோக்கி இறங்கையிலே உறைந்துவிடும் மேனி
திரைகடலில் மீனவர்கள் திரும்பிவரக் கண்டு
திருமதிகள் தரைமீதில் திருப்தியினைக் கொண்டு
விரைந்தோடி வீட்டிற்குள் விரிப்புதனைப் போட்டு
விருந்தினையே படைத்திடுவார் விருப்போடு கேட்டு
மென்காற்று மேனியினில் மேவிஇத மூட்டும்
மெதுவாக வெண்ணிலவும் எழுந்துமுகம் காட்டும்
தண்ணொளியால் தரணியெங்கும் பொன்னிறமாய் மாறும்
தலைதூக்கும் துயரெல்லாம் தானாக ஓடும்
நெய்தல்நிலம் மீதினிலே நிதந்தோறும் நானும்
நெஞ்சத்தில் நெகிழ்வூட்டும் நிகழ்வுகளைக் காணும்
மெய்யான உலகத்தில் மெய்மறந்த காலம்
மென்மேலும் தொடர்ந்திடவே வரமொன்று வேண்டும்.
~பென்சன் பணம்'
- கிண்ணியா மஜீத் ராவுத்தர் -
பென்சன்
பெரிய தொகையுமில்லை
கணிசமான அளவுதானே, மட்டமாக
காணும் எனக்கும் அவளுக்கும்
இனி விலை வாசி கூடாவிட்டால்
பென்சன் நாளன்று அது
ஒரு பெருநாள் போல
பெண்சாதிபேர, பெற்ற
பிள்ளைகள் பெரிய தொல்லை
பலசரக்கு பால்காரன், புதினப்
பத்திரிகை மின், தண்ணி, மீன்காரன்
பல மரக்கறிகள், மாமிசம் வேற
படிப்புச் செலவு, பரிதாபங்கள் வேற
வேறுதொழில் தெரியாது
வெய்யிலில் நின்று செய்யாது
ஏர் பூட்டி உழைக்க இப்போ
என்னால ஏலாது
அப்போ வேறு வருவாய்..ஏது?
வெறும் குண்டானுக்குள்ளே குதிரை
‘ஒப்கோர்ஸ்’ வார பென்சனுக்குள்தான்
வக்காளத்தெல்லாம் வரையறை
கைக்கூலி பெற்று
கனவிலும் பழக்கமில்லை
பொய் சொல்லிப் பிழைத்ததில்லை
போதுமான வருமானமில்லை
பெட்டிக் கடை ஒன்றை
பறையாம வைப்போமென்றா, பேரன்
தட்டியை ஒசத்தி திறந்து
தரையில தவளுரான் பாரன்
பிறகென்னாச்சி...? கடையில அறுந்து
பலருக்குக் கடன்காரனா எல்லாம் போச்சு
குருடி வந்து பழைய கதவை
திறடி என்ற கதையாச்ச
உ யர்வோ யர்வு!
- வெலிமடை ரபீக் -
காலுக்குக்
கீழ் இருந்த
வாழ்க்கைச் செலவு
நாளுக்கு நாள்
உயருது
தோளுக்கும் மேல்
இருபதாம் தேதி
துக்க தினமா?
சம்பள நாள்
சந்தோசம் பாழ்
நகர வாழ்க்கை
நகரா வாழ்க்கை
கிராமத்து மண்ணில்
பாதங்களால் மிதிபட்டு
நசுங்கும்
கீரைக்கும்
காசிங்கு
எரிவாயு
ஏறுவரிசை
வருவாய்
இறங்குவரிசை
கொங்ரீட் கூட்டுக்குள்
கொதிக்குது வாழ்க்கை
மருந்துக்கு
வைத்திருந்த காசும்
விருந்துக்குப் போச்சடி
காலுக்குக் கீழ் இருந்த
வாழ்க்கைச் செலவு
நாளுக்கு நாள்
உயருது
தோளுக்கும் மேல்
முதல் காதலிக்கு...
நீ....
என
கணைக்கிறது
உள்ளம்
பாசமது
புரியாப் பருவத்தில்
பாசத்தைக் காட்டி
நேசத்தை வளர்த்தாய்...
மடி தாங்கி பாலூட்டி
கைபிடித்து தூரம் சென்று
கதை சொல்லி கதை வாங்கி
குளிப்பாட்டி எண்ணெய் தேய்த்து
பாட்டோடு தூக்கம் கொடுத்து
கரைசேர கல்வியும் சொன்னாய்...
அன்னையாகவும்
தந்தையாகவும்
என் முதல் காதலி
நீ தான்
அம்மா......
மறுபிறப்பில் என்னை மகனாகப் பெற்றுவிடு!
- கவிமணி அ.கெளரிதாசன் -
தும்பியது
பிடிக் கின்ற
துடுக்கான சிறு வயதில்
அம்மாவுன் முந்தானை
அலைந்து திரிந்தவன் நான்!
ஆனாவை அரி வரியில்
ஆம், நானும் அறிய முதல்
பேனாவால் “ஆனா” வைப்
பெற்றவள்நீ, எழுதவைத்தாய்!
பத்தாம் வயதி னிலும்
பால்குடித்த நினைவுகளை
சித்தம் மறக்கவில்லை
சித்திரமே, நீயிலையே!
அண்ணன்மார் அக்காமார்
அனைவருக்கும் ‘கடைக்குட்டி’
இன்னுமென்னைத் துரத்தி வரும்
இனியவளே, உன் பா(வா)சம்!
காசினியே மதிக் கின்ற
‘கவிஞன்’ எனும் படியாய்
பேசரிய தமிழ் ஊட்டி
பெருங்கல்வி கற்பித்தாய்!
மணம்முடித்து எந்தனுக்கு
மழலைகளோ நான்கி ருந்தும்
கணப்பொழுதும் உனைக் கண்டு
கதைபேசா நாளிலையே!
வறுமையிலே வாடி டினும்
வாய்மைதனை மறக்காமல்
வறுமையிலும் செம்மையுடன்
வாழ்ந்து முடித்தவளே!