நான் மூக்குத்தி அணிந்திருப்பதில் எந்த ரகசியமும் இல்லை. சும்மா அழகுக்காக
போட்டிருக்கிறேன். அதைப் போய் கிசுகிசுவாக்குகிறார்கள் என்றார் நடிகை நயன்தாரா.
தன்னைச் சுற்றிய வதந்திகள், பிரபுதேவாவுடனான காதல் பற்றி சமீபத்தில் அவர் அளித்த
பேட்டி! 2003ம் ஆண்டு சினிமாவுக்கு வந்தேன். ஒரு படத்தோடு எல்லாம் முடிஞ்சிடும்னு
நினைச்சேன். ஆனால் காலம் என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்திடுச்சி. ஏகப்பட்ட பேர்,
புகழ்... வதந்தி!
என் படம் வெற்றிபெற்றால் சந்தோஷப்படுவேன். தோல்வியானால் ரொம்ப வருத்தப்படுவேன்.
இடைப்பட்ட காலத்தில் அப்படி வருத்தப்பட அவசியம் இல்லாமல் போச்சு.
தமிழில் நடித்த ஆதவன், மலையாளத்தில் நடித்த பாடிகார்ட், தெலுங்கில் அடூர் ஆகிய
மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தன. இதைவிட பெரிய
சந்தோஷம் என்ன இருக்கு. இந்த படங்களில் நடிக்கும் போது அவை ஜெயிக்கும் என்று
நம்பினேன். என் கணிப்பு பலித்துவிட்டது.
என்னை சந்திக்கிறவர்கள் மீனா, நவ்யா நாயருக்கு திருமணம் முடிந்து விட்டது.
ரம்பாவுக்கு திருமணம் நடக்கப் போகுது. உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள்.
இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. திருமணம் முக்கியமானது. அது நடக்கும்போது
நடக்கும்.
எனக்கு ஒரு வேளை காதல் திருமணம் நடந்தால் அது என் அப்பா, அம்மா, துபாயில் வசிக்கும்
அண்ணன் போன்றோரின் சம்மதத்துடன் தான் நடக்கும்.
சினிமா நடிகைகள் எது செய்தாலும் அது பரபரப்பான செய்தியாகிவிடுகிறது. நான் மூக்கூத்தி
அணிந்ததைகூட ஏதோ ரகசியம் இருக்கு என்று கிசுகிசுவாக்கிவிட்டார்கள். மூக்குத்தி
போட்டால் நல்லா இருக்கும் என்று சொன்னதால்தான் போட்டேன். குறிப்பிட்ட நாயகர்களுடன்
தான் நடிப்பேன் என்று நான் சொல்வது இல்லை. கதையும் கேரக்டரும் சிறப்பாக இருந்தால்
யாருடன் வேண்டுமானாலும் நடிப்பேன். எனக்கு எந்த பேதமும் இல்லை.
என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. அவற்றுக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை.
ஆரம்பத்தில் இந்த வதந்திகள் என் மனதை பாதித்தது. இப்போது பழகிவிட்டேன்.
வருத்தப்படுவது இல்லை. என்னை நம்புபவர்கள் இருக்கிறார்கள்.
சினிமா ஒரு கவர்ச்சி உலகம். இங்கு ஜெயித்தால் ஆகாயத்துக்கு தூக்குவார்கள். தோற்றால்
பாதாளத்தில் தள்ளி விடுவார்கள்...” என்றார்.