தேர்தல் திணைக்களத்துக்கு உதவ இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தயார்
தேர்தல் திணைக்களத்துக்கு உதவ இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தயார்
எம். எஸ். பாஹிம்
தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச ஊழியர்கள் பக்கசார்பின்றி செயற்படுவது குறித்து
கண்காணிக்கவும் அது தொடர்பில் தேர்தல் திணைக்களத்துக்கு உதவுவதற்கும் இலங்கை மனித
உரிமை ஆணைக்குழு முன்வந்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கும்
தேர்தல் ஆணையாளருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தேர்தல் காலத்தில் பக்கசார்பின்றி செயற்படுவது குறித்து தேர்தல் கடமையில் ஈடுபடும்
அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் பொலிஸாருக்கும் வழிகாட்டல்கள் வழங்கியுள்ளதாக மனித
உரிமை ஆணைக்குழுவின் சட்டவிவகார செயலாளர் நிமல் ரத்சிஹேவா தெரிவித்தார்.
தேர்தலில் தேர்தல் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், பொலிஸார் கூட்டாக செயற்பட
வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் தேர்தல் காலத்தில் இடம்பெறும் தேர்தலுடன்
தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் மனித உரிமை ஆணைக்குழு கவனம் செலுத்தும்
என்றார். தேர்தல் தினத்திலும் மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடவடிக்கைகளில்
ஈடுபட திட்டமிட்டுள்ளது.
தேர்தல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பாகவே தமது அமைப்பு தேர்தல்
பணிகளுக்கு உதவ முன்வந்ததாகவும் அவர் கூறினார்.