ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மலையகத்தில் மட்டுமல்ல இந்த நாட்டின் பிரசித்த பெற்ற அம்மன் ஆலயமாக திகழ்ந்து வருகிறது என்றால் அது அம்பாளின் திருவருள்தான். மாத்தளை மக்களை மட்டுமல்ல இலங்கையிலுள்ள இந்து மக்கள் அவளின் திருவடியில் தஞ்சம் என்று வருபவர்களை ஜாதி, மத, மொழி பேதமின்றி காத்துவருகிறாள் அன்னை முத்துமாரி.

அருள் சுரக்கும் ஆதிபராசக்தியானவள் வாழை, கமுகு போன்ற கனிச்சோலைகளுக்கு மத்தியில் அழகு மலை அடிவாரத்தில் மலை வளமும், கலை வளமும், மாண்புற்று விளங்கும் மாத்தளை மாநகரில் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனாக திவ்விய சிம்ஹாசனத்தில் வீற்றிருந்து அருள் சுரக்கும் திருத்தலமே மாத்தளை அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலாகும்.

இலங்கையில் பல திருக்கோயில்களில் பெரிய அளவிலான இராஜ கோபுரங்களுடன் காணப்பட்டாலும் இலங்கை திருநாட்டில் மிக உயர்ந்த இராஜ கோபுரம் அமையப்பெற்ற திருத்தலம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயமாகும். ஆனால் அதனை மிஞ்சும் வகையில் இப்பொழுது மாத்தளை அருள் மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வடக்கு நோக்கி 108 அடி நவதள நவகலசம் கொண்ட நவதள இராஜ கோபுரம் அமைக்கப்பெற்று வரலாற்றுப் பெருமையை மாத்தளை ஸ்ரீமுத்தமாரியம்மன் தேவஸ்தானம் பெற்றுள்ளது.

இவ்வாறு புகழ்பெற்ற மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசிமக மகோற்சவம் இருப்பத்தைந்து நாட்களுக்கு நடைபெறும். இவ் உற்சவம் கடந்த 24-01-2014 காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியது. அன்று காலை 11.00 மணிக்கு துவஜா ரோகணமும் (கொடியேற்றம்) நடைபெற்றது. எதிர்வரும் 15-02- 2014 சனிக்கிழமை காலை மக நட்சத்திரத்தில் இரதோற்சவமும், மாசிமாதம் 05ம் நாள் (17-02- 2014) திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவமும், இரவு துவஜ அவரோகணமும் (கொடியிறக்கம்) நடாத்தப்படும். இவ்வாலயத்தில் தினமும் காலை 8.30 மணிக்கு அம்பாளுக்கு 108 அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெறுவதோடு, தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இவ்வாலயம் கொழும்பிலிருந்து 90வது மைல் கல் தொலைவில் மலைப்பிரதேசமான மத்திய மாகாண கண்டி இராஜதானியலிருந்து 16வது மைல் கல் தொலவில் அமைந்திருக்கின்றது. வடக்கையும், மலையகத்தையும் இணைக்கும் ஒரு கேந்திர தளமாக மாத்தளை மாநகரம் விளங்கி வந்திருக்கிறது.

மாத்தளை எனும் பெயர் ஏற்பட்ட காரணமென்னவென்றால் கஜபாகு மன்னனின் ஆட்சிக்காலத்தில் சோழ நாட்டிலிருந்து சிறைப் பிடிக்ககப்பட்ட பெருந்தொகையானவர்னள் மாத்தளையில், குடியமர்த்தப்பட்டமையால், ‘மஹாதலயக்’ (பெருங்கூட்டத்தவர்) எனும் பொருள் பட இப்பிரதேசம் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆலயம் தோன்றுவதற்கான காரணம் தெரிய வருவதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பெருந் தோட்டத்துறைக்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் அழைத்து வரப்பட்ட போது ‘தலை மன்னார்’ ‘அரிப்பு’ இறங்கு துறையூடாக அழைத்து வரப்பட்ட போது தலைமன்னார் அரிப்பு இறங்கு துறையூடாக அழைக்கப்பட்டு வந்த மாத்தளையை வந்தடைந்தனர்.

இப்படி சிறு சிறு குழுக்களாக மலையகமெங்கும் வியாபித்த மக்கள் மாத்தளையிலும் குடியேறினர். எங்கும் வியாபித்து அடியவர்களுக்கு அருள் மழை பொழியும் அன்னை பராசக்தியான ஸ்ரீ முத்துமாரியம்பிகையானவள் ஒரு சிகை அலங்காரம் செய்யபவரின் கனவில் தோன்றி தன் திரு உருவத்தை ஒரு வில்வ மரத்தடியில் வெளிப்படுத்தி தன்னை பூஜிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அன்றிலிருந்து அவ் வில்வமரத்தடியில் சிலை வைத்து வணங்கி வந்ததாக ஆரம்ப கால பரம்பரைக் கதைகளும் ஏடுகளும் சான்று பகர்கின்றன.

இத்தகைய சக்தி வாய்ந்த அன்னை முத்துமாரிக்கு ஆலயம் ஒன்று அமைக்க கிடைக்கப்பெற்றது பெரும்பாக்கியமே. அன்று மாத்தளை நகரம் சிறு கிராமமாகவும் வண்டித்தடம் பதித்த போக்குவரத்து சாலையாகவும் விளங்கியது. இது திருகோணமலை வரை செல்லும் பாதையாகும். அத்துடன் எமது மக்கள் சமய வழிப்பாட்டுடன் கலைகளையும் பேணி பாதுகாத்து வந்ததுடன் பயபக்தியாகவும் வளர்த்தார்கள்.

அதில் முக்கியமானது காமன் கூத்து, இது இந்த அம்பிகையின் பதியில் வருடம் தோறும் முன்பு நடாத்தி வந்ததாகவும், அது மட்டுமல்லாது ஓட்டு மொத்தமாக சமய வழிபாட்டுடன் ஒரு கலாசார கேந்திரமாக அந்த ஆலயம் இருந்தமைக்கு பல சான்றுகள் உள்ளன. இவ்வாலயத்தில் ஆரம்ப காலத்தில் உயிர்ப்பரியிடல் நடை பெற்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மகோற்சவத்தின் போது இரதம் வெளி வீதி செல்வதற்கு முன் பலி பூசை கொடுத்த பின்பு இரதம் வெளி வீதி செல்வது வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் பலியிடல் பூஜையை மாற்றியமைத்து புது முறையாக சாம்பல் பூசனியை வெட்டி பலி பூசையாக செய்து இரதங்களை இழுக்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

1955ம் ஆண்டளவில் க குமாரசாமியார் தலைமைப் பதவியை ஏற்றிருந்த காலகட்டத்தில் இவ்வாலயத்தில் பாரிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அத்தியாவசிய தேவைகள் பல பூர்த்தியாகி ஆலயம் பெரும் அளவில் வளர்ச்சி கண்டது.

வேதாகம முறைப்படி விஸ்தரிக்கப்பட்ட ஆலயத்தின் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து, மூலஸ்தானமும் விஸ்தரிக்கப்பட்டு அர்த்த மண்டபம், மஹா மண்டபம், தரிசன மண்டபம் என பல மண்டபங்களும் நிர்மாணிக்கப்பட்டன. த. மாரிமுத்து செட்டியாரின் முயற்சியின் பயனாகவும், நிர்வாக சபையினரும், இந்து பெரு மக்களது ஆதரவோடும், 1992ம் ஆண்டு தேர் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு 1993ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் திகதி வெள்ளோட்டப் பெருவிழா காணும் பாக்கியம் அனைவருக்கும் கிட்டயதை மறக்கமுடியாது. ஆகவே இம்முறையில் மலையகத்தில் உள்ள ஏனைய ஆலயங்களும் சமய சமுக மேம்பாட்டு செயற்பாடுகளில் ஈடுபட்டு இந்து மக்களுக்கு சேவை செய்தால் நிச்சயமாக தெய்வ நம்பிக்கையோடு நல்ல :ணீ8&தி!}Z உருவாகும். இதற்கு சிறந்த நிருவாகமே முக்கியமாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி