ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JANUARY 26, 2010
ஜனாதிபதித் தேர்தல் இன்று
ஜனாதிபதித் தேர்தல் இன்று
(ஸாதிக் ஷிஹான்)
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8வது ஜனாதிபதியை தெரிவு
செய்வதற்கான ஆறாவது ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது. சுமார் 30 வருடங்களுக்கு
பின்னர் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும் தேர்தல் இதுவாகும்.
இதற்கமைய, வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 11 ஆயிரத்து 98
வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை
வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவற்றில் 17
கட்சிகளின் சார்பில் 17 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் ஐவரும் அடங்குவர்.
சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்தி முடிப்பதற்கான சகல
நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் நேர
காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர்
தயானந்த திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி
பெற்றுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதேவேளை, அமைதியானதும், வன்முறையற்றதுமான தேர்தல் ஒன்றை நடத்தி முடிப்பதற்குத்
தேவையான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட்ட அடிப்படையில் பொலிஸ் திணைக்களம்
மேற்கொண்டுள்ளதென பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800
பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் பாதுகாப்பு கடமையில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பொலிஸாரும், முப்படையினரும்
உள்ளடக்கப்பட்ட 2523 நடமாடும் சேவைகள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும்
பொலிஸ் அதிகாரி ஒருவர், இரண்டு பொலிஸார், முப்படை வீரர்கள் இருவர் என்றடிப்படையில்
ஐவர் இந்தக் குழுவில் அடங்குவர்.
பொலிஸாரும், முப்படையினரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் பொலிஸாரும்
முப்படையினரும் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தெரிவத்தாட்சி உத்தியோகத்தர் காரியாலயத்திற்கான பாதுகாப்பு, வாக்குப் பெட்டிகளை
எடுத்துச் செல்லுதல், வாக்கெண்ணும் நிலையங்களைப் பாதுகாத்தல், தேர்தலுக்குப்
பிந்திய பாதுகாப்பு ஒழுங்கு போன்ற நடவடிக்கைகளுக்காக இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் கடமைகளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குகள் எண்ணும் நிலையங்கள்
வாக்களிக்கும் நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி 4 மணிக்கு முடிவடைவதை
அடுத்து வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புகளுடன் எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
இம்முறை, நாடு முழுவதும் வாக்குகளை எண்ணுவதற்கென 888 நிலையங்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சாதாரண வாக்குகளை எண்ணுவதற்கென 737 நிலையங்களும்,
தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்கென 139 நிலையங்களும், இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகளை
எண்ணுவதற்கென 12 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகள்
வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையங்களைச் சென்றடைந்தவுடன் இன்று இரவு 7
மணியளவில் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நள்ளிரவுக்குப் பின்னர் முதலாவது தேர்தல் முடிவை வெளியிட முடியும் என்று தேர்தல்
திணைக்கள உயர் அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, அவசரத் தேவைகளுக்கு ஹெலிகொப்டர்களை பயன்படுத்துவதற்கும் தேர்தல் திணைக்களம்
நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வேட்பாளர்கள்
இந்த ஜனாதிபதித் தேர்தலில் 17 கட்சிகளின் சார்பில் 17 பேரும் சுயேச்சை வேட்பாளர்கள்
ஐவருமாக 22 பேர் போட்டியிடுகிறார்கள். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புதிய ஜனநாயக
முன்னணியின் வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் -ஸிஷி(யிt
போட்டியாக இந்தத் தேர்தல் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியிலிருக்கும்
ஜனாதிபதி ஒருவருடன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் போட்டிக்கு களமிறங்கியிருப்பது
இதுவே இலங்கையில் முதல் தடவையாகும். அதேநேரம், ஜனாதிபதி பதவியில் இருப்பவர் பதவிக்
காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாக தேர்தல் நடைபெறுவதும் இதுவே முதல்
தடவையாகும்.
அடையாளத்தை உறுதிப்படுத்தல்,
வாக்களித்தல்
மக்கள் வாக்களிப்பதற்கு ஆளடை யாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டை
கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல்கள் ஆணையாளரால் அங்கீகரி க்கப்பட்ட ஏதாவதொரு
ஆளடையாள அட்டையைக் காண்பித்து வாக்களிக்க முடியும். வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்
பெறாதவர்கள் ஆளடையாளத்தை நிரூபித்து வாக்களிக்க முடியும் என்றும் ஆணையாளர்
அறிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும்.
ஒரு வேட்பாளருக்கு வாக்கை அளிப்பதாயின் வாக்காளரின் பெயருக்கும் சின்னத்திற்கும்
எதிரே புள்ளடியிடலாம். மூன்று வேட்பாளருக்கும் அளிப்பதாயின் முதலாமவருக்கு ‘1’
என்றும் இரண் டாமவருக்கு ‘2’ என்றும் மூன்றாமவருக்கு ‘3’ என்றும் அடையாளமிடலாம்.
முதலாவது வேட்பாளரைத் தெரிவு செய்யாமல் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்கு
அளிக்கப்பட்டிருக்குமாயின் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகும்.
மீறினால் துப்பாக்கிச் சூடு
தேர்தலின் போது எந்தவொரு தனிநபரோ குழுக்களோ சட்டத்தைப் புறக்கணித்து வன்முறைகளைத்
தூண்டும் நடவடிக்கைக ளில் ஈடுபட்டால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் நிலை
ஏற்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வன்முறைகளைத் தூண்டும் நடவடி க்கைகளில் எவராவது ஈடுபட்டால் முதலில் பொலிஸார்
எச்சரிக்கை அறிவு றுத்தல்களை விடுப்பார்கள். வாக்களிப்பு நிலையத்தில்
சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் வன்முறைகளைத் தூண்ட எவராவது
முயற்சித்தால் பொலிஸார் முதலில் எச்சரிக்கை விடுப்பார்கள்.
எச்சரிக்கைக்கு மதிப்பளிக்காவிடின் சுடுமாறு பொலிஸாருக்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.
கண்காணிப்பு பணிகள்
இம்முறை தேர்தலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளனர்.
பொதுநலவாய மற்றும் தெற்காசிய பிராந்திய நாடுகளிலிருந்து இலங்கை வந்திருக்கும்
85க்கு மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில்
கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக சுமார் ஆயிரம் வாகனங்களும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
முறைகேடு நடந்தால்
வாக்கெடுப்பு ரத்து
வாக்களிப்பு நிலையங்கள் அமையப் பெற்றுள்ள இடத்திலிருந்து ஐநூறு மீற்றர் தூரம்
வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சொந்தமான பிரதேசமாகக் கருதப்படும். இந்தப்
பிரதேசங்களிலோ அல்லது தேர்தல் சட்டங்களை மீறும் வகையிலோ எங்கேனும் எவரேனும்
செயற்பட்டால் குறித்த வாக்கெடுப்பு நிலையத்தின் வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்படும்
என்று தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் குறித்த பிரதேசத்திற்குள் கூட்டம் கூட்டுவது, ஒருவருக்கு ஆதரவாக
பிரசுரங்கள் விநியோகிப்பது, அழுத்தம் கொடுப்பது சட்ட விரோதமாகும் என்று தெரிவித்த
பொலிஸார் பிடியாணை இன்றி இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டனர்.