ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JANUARY 26, 2010
பகிடிவதை - மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாசாரம்
பகிடிவதை - மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாசாரம்
மன்னார் அமுதன்
“ஆர்வத்தோடும், கண்களில் தெறிக்கும் மகிழ்ச்சியோடும், எதிர்பார்ப்போடும், எதிர்காலம்
பற்றிய பல வண்ணக் கனவுகளோடும் ஒரு மாணவன் பல்கலைக்கழகத்திற்குள் (ஏதோ ஒரு கல்வி
நிலையத்துள் மேற்படிப்பிற்காக) காலெடுத்து வைக்கிறான்.
போட்டி நிறைந்த இவ்வுலகத்தை
கல்வியால் வெல்ல வேண்டும் என்ற ஒரு வெறி தெறிக்க, அவனுள் ஒரு பெருமித உணர்வு ஆசையோடு
பலமுறை கடந்து சென்ற பல்கலைக்கழகத்திற்குள் இன்று தானும் ஒரு மாணவனாக நிற்கிறோம்
எனும் பெருமிதம் அவன் முகமெங்கும் பிரகாசிக்கிறது.
தன் தாய் மஞ்சள் கயிற்றில் கட்டியிருந்த ஒரு துண்டு தங்கத்தையும் அடைமானம் வைத்து
இங்கனுப்பியதற்கு, நல்ல முறையில் கல்வி கற்று ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்று அவள்
கழுத்தில் போட்டு விட வேண்டுமென்ற வைராக்கியம்.
இத்தனையும் தாண்டி எதிர்காலம், வேலை,
தங்கச்சி கல்யாணம், புது வீடு என கற்பனைக் குதிரையோடு சேர்ந்து காலும் ஓட, தன்
வகுப்பிற்குள்ளே வந்து சேர்கிறான்.
முதல் நாள், முதல் வகுப்பு, அவன் வகுப்பறை முழுவதும் மேலாண்டு மாணவர்கள்
சூழ்ந்திருந்து பெருங்குரலெடுத்து அவனை வரவேற்கிறார்கள். புது அனுபவம் அவனுக்கு
எங்கோ பறப்பது போல் மகிழ்ச்சியாய் இருந்தது.
ஆனால் இவையெல்லாம் ஒரு சில நிமிடங்களே நிலைத்தன. திடீரென ஒருதொகை மாணவர்கள் இழிவான
வார்த்தைகளைக் கூறிக் கொண்டு புயலென அவ்வகுப்பறையினுள் வந்தார்கள். அவர்கள் புது
மாணவனை உடைகளைக் கழட்டுமாறு ஓங்காரமிடுகிறார்கள்.
அனைவரும் ஒன்று கூடி ஒருவனை அதைச்
செய், இப்படிச் செய்யென கட்டளையிட அவனும் பயத்தால் நடுங்கிக் கொண்டே அனைத்தையும்
செய்கிறான். அவன் மறுக்கும் போது உடல் ரீதியாக அவனைத் துன்புறுத்துகிறார்கள்.
உளவியல் ரீதியாகவும் தாக்குகிறார்கள். இவ்வாறு புதுமுக மாணவர்கள் எதிர்நோக்கும்
உளவியல் மற்றும் உடலியல் தாக்குதல்கள் எண்ணிலடங்கா. மேலும் புதுமாணவர்கள் தங்களைத்
தாங்களே கீழ்த்தரமாக உடலியல் தொல்லை செய்து கொள்ள வற்புறுத்தப்படுகிறார்கள்.
அவ்வாறு செய்ய மறுக்கையில் மேலாண்டு மாணவர்கள் புதுமுக மாணவர்களை துஷ்பிரயோகம்
செய்கிறார்கள். இத்தகைய அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் அவன் வண்ணக்
கனவுகள் நொருங்க, வெட்கத்தாலும் அழுகையாலும் முகம் வீங்கி, துக்கம் இதையத்தை அடைக்க
அப்படியே மயங்கி விழுகிறான்.
அவன் கனவு வீட்டின் கதவுகளோடு சேர்ந்து சாளரங்களும்
மூடிக்கொள்ள இன்று வரை துக்கத்திலும் எதையோ பிதற்றிக் கொண்டு இருண்ட அறைகளில்
வாழ்கிறான்.
மேற்கூறிய எதுவும் கற்பனையல்ல. யாவும் உண்மை உலகளாவிய அளவில் இன்று பெருகிவரும்
பகிடிவதையை ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்தாற் போல ஆங்கிலத்தில் hazing, ஜீagging,
bulling, plலீனீging, hoursலீ - playing... என வெவ்வேறு பெயர் கொண்டு அழைத்தாலும்
இதன் நோக்கமென்னவோ எல்லா இடங்களிலும் காட்டுமிராண்டித் தனமான வரவேற்புக் கலாசாரமாகவே
உள்ளது.
இந்தப் பகிடிவதை எனும் விசமரத்தின் விதையானது கி.பி. 7 ஆம் அல்லது 8 ஆம்
நூற்றாண்டில் விதைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அக்காலத்தில் கிரேக்கக்
கலாசாரத்தில், நடத்தப்படும் குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றுபவர்களிடம்
ஒன்றுமையுணர்வை, குழு உணர்வை ஏற்படுத்துவதற்காக வீரர்களைத் தாழ்வுபடுத்தி அவமதித்து,
ஒறுத்தடக்கி, கடுமையான தொந்தரவிற்கும் பிரச்சினைக்கும் உள்ளாக்கினார்கள்.
கால ஓட்டத்தில் இக்காட்டு மிராண்டிக் கலாசாரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து இராணுவத்
துறையிலும் பின் கல்வித்துறையிலுமாக தன் வேர்களைப் பரப்பி விழுது விட்டு
வளர்ந்துள்ளது.
பகிடி வதையின் விளைவாக நடைபெற்ற முதல் குற்றச் செயல் 1873 இல் கொர்னெல் பல்கலைக்
கழகத்தில் ஒரு புதுமுக மாணவனின் இறப்பாகப் பதிவாகியது.
அன்று முதல் இன்று வரை ஆண்டு
தோறும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள மூத்த மாணவர்களின்
பகிடி வதையால் சில மாணவ, மாணவி களாவது இறப்பது, உடல் ஊனம் அடைவது, மனம் பேதலித்துப்
போதல், பாலியல் துஷ்பிரயோ கங்களுக்கு உள்ளாதல் என பல எண்ணிலடங்கா வன்முறைகளுக்கு
புதுமுக மாணவர்கள் இலக்காவது யாவரும் அறிந்த பகிரங்க ரகசியமாகும்.
ஒரு நாட்டின் எதிர்காலத் தூண்கள் மாணவர்கள் தான் என ஒவ்வொரு அரசாங்கமும் மார்தட்டிச்
சொல்வதோடு நின்று விடாமல் மாணவர்களுக்கெனப் பல வசதிகளையும் செய்து கொடுத்துக் கொண்டு
தான் இருக்கிறார்கள்.
ஏன் இந்த மேலாண்டு மாணவர்கள், புதுமுக மாணவர்களைப் பகிடி வதைக்கு
உட்படுத்துகிறார்கள்? மேலும் வைரக்கல்லிற்கு ஒப்பிடப்படும் தமது மதிப்புற்குரிய
நேரத்தை படிப்பதில் செலவிடாமல் பகிடிவதையில் வீணாக்குகிறார்கள் என்ற கேள்வியை சில
மேலாண்டு மற்றும் புதுமுக மாணவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறிய காரணங்கள் கீழ்
வருமாறு:
1. பகிடி வதை மேலாண்டு மாணவ ர்களுக்கும், புதுமுக மாணவர்களு க்கும் இடையே ஒரு
பிரிக்க முடியா பிணைப்பையும், ஒரு உறவுப் பாலத்தையும் ஏற்படுத்தியது.
2. புதுமுக மாணவர்களின் ஆளு மையை விருத்தி செய்யவும் அவர்களை திறந்த மனதுடைய
வர்களாகவும் பொது விட யங்களில் ஈடுபாடுடையவர்க ளாகவும் மாற்றுவதற்கும் பகிடி வதை
பயன்படுகிறது.
3. புதுமுக மாணவர்கள், மேலாண்டு மாணவர்களையும், தமது துறை உறுப்பினர்களையும் எவ்வாறு
மதிக்க வேண்டும் என்பதை பகிடி வதையின் மூலம் கற் றுக்கொடுக்கிறோம்.
4. ஒழுங்கு முறையோடும் கடு மையான சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு ஒழுக்கமாகக் கல்வி
கற்று பள்ளியிலிருந்து பல்கலைக் கழகத்திற்கும் பிரவேசிக்கும் மாணவர்களுக்கு திடீரென
ஒரு சுதந்திரம் கிடைக்கிறது. அச்சுதந் திரத்தை புதுமுக மாணவர்கள் தவறான முறையில்
பயன்படுத்தி ஒழுக்கம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக சில பயிற்சிகளை பகிடி வதை யின்
மூலம் பயிற்று விக்கிறோம்.
5. மேலாண்டு மாணவர்களின் துணையின்றி புதுமுக மாணவர் கள் கல்வி கற்று வெளியேறுவது
கடினம்.
6. சில மேலாண்டு மாணவர்கள் மனநோய்க்கு உட்பட்டவர்க ளாகவும் உள்ளத்தில் ஏற்றத்தாழ்வு
உள்ளவர்களாகவும், இருக்கி றார்கள். மேலும் இவர்கள் தமது பெற்றோரால் சரிவரக்
கவனிக்கப் படுவது இல்லை. அவர்கள் தான் இவ்வாறான கீழான செயல்களில் ஈடுபடுவது.
7. மேலாண்டு மாணவர்கள் பகிடி வதையை வலிந்து செய்வதில்லை. ஆனால் மாணவர்கள் மத்தியில்
மாணவர் போல் நடமாடும் சில அரசியல் கட்சிகளின் உறுப்பி னர்கள் தான் இவ்வாறு
செய்கிறார்கள். அவர்கள் புதுமுக மாணவர்களை மிகவும் கொடுமைப் படுத்துவதுடன் தமது
கட்சிகளில் வலிக் கட்டாயமாக உறுப்பினர்களாக இணைத்துக் கொள்கிறார்கள்.
மேற்கூறப்படும் பல காரணங்களும் ஒன்றாகி இன்று மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தைக்
கேள்விக் குறியாக்கியுள்ளது.
இன்றைய மாணவர்கள் மறியல் செய்வதிலும், வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதிலும்,
ஒருவரை ஒருவர் தாக்கி உடல் பலத்தைக் காட்டுவதிலும், பகிடிவதையில் ஈடுபடுவதிலும்,
தமக்குத் தேவையானவற்றையும், அனாவசியமானவற்றையும் கூட பெற்றோரிடமிருந்து மிரட்டிப்
பறிப்பதிலும் மிகவும் ஆற்றல் மிக்கவராயிருக்கிறார்கள்.
அத்தோடு வலிந்து சென்று
நலிந்த மாணவர்களை அடிமைப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தைக் கல்வியிலும்,
அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள கடமைகளிலும் காட்டத் தவறுகின்றனர்.
கல்வி கற்பதை விடவும் விரி வுரையாளர்களுக்கும், பேராசிரி யர்களுக்கும் எதிராகச்
சுவரொட்டிகளை வெகு முனைப்போடு தயாரிப்பதிலும், தமக்கு ஒதுக்கப்படாத வகுப்பறைகளை
அடாவடித் தனமாக ஆக்கிரமிப்பதிலும், இரவினில் வகுப்பறைகளிலேயே தங்குவதிலும் வெகு
முனைப்போடு செயலாற்றுகிறார்கள்.
“அடிச்சு வளர்க்காத பிள்ளையும், ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது” எனும்
பழமொழிக்கேற்ப பெற்றோர்கள் செயல் பட வேண்டும்.
விரிவுரையாளர்களையும் ஒழுங்கீனமான
மாணவர்களுக்கு எதிராக சட்ட நட வடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும். ஒரு புதுமுக
மாணவனுக்குக் கொடுக்கப் படும் அழுத்தங்கள் மென்மையான தாகவோ வேதனையளிக்கத் தக்க வகை
யிலோ உளவியல் அல்லது உடலியல் என எவ்வடிவத்தில் இருந்தாலும் அவை அனைத்துமே பகிடி
வதையொன்றே கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் பகிடிவதை எந்த ஒரு பயன்பாடான விடயத்திற்கும், வளர்ச்சிக்கும் (ஆளுமை
விருத்திற்கோ, இன்ன பிறவுக்கோ) ஒருபோதும் மாணவர்களுக்கு உதவாது ஒரு புதுமுக மாணவனை
துன்புறுத்துவதன் மூலமும், துஷ்பிரயோகம் செய்வதன் மூலமும் எந்த ஒரு மேலாண்டு
மாணவனும் தனக்குரிய மரியாதையைப் பெற்றுக்கொள்ள முடியாது. மரியாதை என்பது கொடுத்துப்
பெற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று என்பதை பேராசிரியர்கள் கூறித் தான் மேலாண்டு மாணவர்கள்
அறிந்து கொள்வார்கள்.
புதுமுக மாணவர்களிடம் மரி யாதையைப் பெற்றுக்கொள்ள மேலாண்டு மாணவர்கள் உதவி
மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் ஒரு குழந்தை எவ்வாறு
எல்லாவற்றையும் பெரியோர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறதோ அதேபோல் தான் புது முக
மாணவனும் கற்றுக்கொள்கிறான். ஏனெனில் பல்கலைக்கழகம் எனும் குடும்பத்திற்குள்
புதிதாய் இணைந்து கொள்ளும் குழந்தைகளே “புதுமுக மாணவர்கள்” அவனிடம் மேலாண்டு
மாணவர்கள் பணிவுடன் நடப்பதன் மூலம் தமது பெருந்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
‘பகிடிவதைச் சட்டத்தால் தடை செய்யப்பட்ட அனுகுமுறை என மாணவர்கள் அறிந்திருந்தும்,
அதை மீண்டும் மீண்டும் செய்யத் துணிவதற்குக் காரணம் கடுமையான சட்டதிட்டங்கள்
நடைமுறைப் படுத்தப்படாமையே ஆகும். மேலும் இவர்கள் தமது துறை சார்ந்த
பேராசிரியர்களாலும், உறுப்பினர் களாலும் பல முறை எச்சரிக்கப்பட்ட பின்னரும்,
மாணவர்களை பகிடி வதைக்கு உட்படுத்துவது, அவர்கள் தமது துறை சார்ந்தவர்களையே
மதிக்கவில்லையென்பதையே காட்டுகிறது.
தமது மூத்தோர்களின் வாய்மொழியை மதிக்காத
இவர்கள் புதுமுக மாணவர்களுக்கு எப்படி, மரியாதையைக் கற்றுத்தர முனையலாம். மேலாண்டு
மாணவர்கள், கல்வியிலும் தொழில் முயற்சிகளிலும், நல்ல குணங்களாலும் சக மாணவர்களுக்கு
முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
எமது கல்வி நிறுவனத்தின் நிர் வாகியும், முகாமைத்துவ அலு வலர்களும், எமக்குக்
கற்றுத் தரும் மதிப்பிற்குரிய ஆசிரியர்களும் கூட ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் தமது
பட்டங்களைப் பெற்றுக் கொண்டே இன்று இந்நிறுவனத்தை வழிநடத்துகிறார்கள். (தொடரும்)