தமிழ் - முஸ்லிம் தரப்பு இணைந்தே கிழக்கில் ஆட்சி அமைக்க வேண்டும்
தமிழ் - முஸ்லிம் தரப்பு இணைந்தே
கிழக்கில் ஆட்சி அமைக்க வேண்டும்
இனியும் பிரிந்து நிற்பது ஆரோக்கியமானதல்ல - சுமந்திரன்
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முஸ்லிம்களோ, முஸ்லிம்களைத் தமிழர்களோ விட்டுவிட்டு
நிர்வாகத்தை அமைப்பது நியாயமற்ற செயல் என்பதே எமது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில்
நாம் உறுதியாக இருக்கிறோம்.
இனியும் பிரிந்து நின்று ஒருவரை ஒருவர்
புறக்கணித்துவிட்டு ஆட்சி அமைப்பது ஆரோக்கியமானதல்ல என தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11
ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டன.
முஸ்லிம்
காங்கிரஸ் 7 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. இந்த மூன்று கட்சிகளும் பெற்றுக் கொண்ட
ஆசனங்களையும் சேர்த்தால் அரசாங்கத்திற்கு எதிரான ஆசனங்கள்தான் அதிகமாக இருந்தன.
அவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும்
எம்முடன் இணைந்து ஆட்சியமைக்க வருமாறும் முதலமைச்சர் பதவியைத் தருவதாகவும் நாம்
பகிரங்கமாகவே முஸ்லிம் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தோம். முஸ்லிம் சகோதரர் ஒருவரை
முதலமைச்சராக நியமியுங்கள் என்று நாம் தெளிவாகவே கூறினோம்.
ஆனால் அந்த அழைப்பை உதாசீனம் செய்து, ஒரு ஆட்சியை அமைத்தார்கள். கடந்த 2
வருடங்களுக்கும் மேலாக இருக்கின்ற அந்த அமைச்சரவையில் ஒரு தமிழருக்குக் கூட இடமில்லை.
5 அமைச்சர்களிலே ஒருவர் கூட தமிழர் இல்லை.
சபைத் தலைவரோ பிரதித் தலைவரோ கூட தமிழர்
அல்ல. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு இடமில்லையா? கிழக்கில் அரசாங்கம்
நிர்வாகம் அமைக்கின்ற போது அங்கே ஒரு தமிழ் மகனுக்குக் கூட இடமில்லாமல் ஆட்சி
நிறுவப்படுவது நியாயமா? 7 ஆசனங்களைக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரசுக்கும் 11
ஆசனங்களைக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் ஏன் ஓர்
இணக்கப்பாட்டைக் காண முடியவில்லை? நாங்கள்தான் முதலமைச்சர் பதவியைக் கேட்கவில்லையே?
குறைந்த ஆசனங்களைக் கொண்டிருந்த உங்களுக்குத்தான் முதலமைச்சர் பதவியைத் தருவதாக
சொன்னோமே? அப்படியிருந்தும் அங்கு ஒரு தமிழருக்குக் கூட இடமில்லை என்பதைப்
பற்றிக்கூட கவலைப்படாமல் ஒரு ஆட்சியை அமைத்தீர்கள். இந்த ஜனாதிபதித் தேர்தலோடு அந்த
ஆட்சி முடிவுக்கு வருகிறது.
முஸ்லிம் காங்கிரசோடு இப்போதும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள்
உங்களுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்தபோது அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது
நீங்கள் விட்ட தவறு என்று சொன்னோம்.
அவர்களில் சிலர் அதனைத் தவறு என்று ஏற்றுக்
கொள்கிறார்கள். எனவே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முஸ்லிம்களோ, முஸ்லிம்களை
தமிழர்களோ விட்டுவிட்டு நிர்வாகத்தை அமைப்பது நியாயமற்ற செயல் என்பதே எமது
நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில்
இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்
கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.