எனக்கு அப்பா அறிவுரை எதுவும் சொல்ல மாட்டார், என்று நடிகை ஸ்ருதிஹாசன்
கூறியுள்ளார். 3 படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்த
படத்தில் தனது நடிப்பை பார்த்து பலரும் பாராட்டியதாக கூறியிருக்கும் ஸ்ருதி, தனது
தந்தை நடிகர் கமலஹாசன் பாராட்டியதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழ் தவிர பிற மொழிகளிலும் நடித்து வருகிறேன். 3
படத்துக்கு பிறகு, நான் நடித்து வரும் படம் கப்பார் சிங், தபாங் படத்தின் தெலுங்கு
ரீமேக் ஆகும். எனது தந்தை ஒரு நடிகர் என்ற முறையில் எனது படங்கள் குறித்த அவரின்
கருத்தையும் கேட்பேன். ரொம்ப பிடித்திருப்பதாக அவர் சொல்வார். நான்
சந்தோ'ப்படுவேன். உண்மையிலேயே அவருடைய மகள் என்பதற்காக என்னை அவர் பாராட்டமாட்டார்.
விமர்சிப்பதில் அவர் பாரபட்சம் காட்டமாட்டார். அவர் விமர்சனம் வெளிப்படையாகவும்,
நேர்மையாகவும் இருக்கும்.
அவரது விமர்சனம் எனது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.
அவர் ஒருபோதும் அறிவுரை கூறுவது கிடையாது. ஆலோசனைகளை மட்டுமே வழங்குவார்.
சினிமாவில் நடிக்கும்போது, அந்த பாத்திரமாகவே மாறிவிட வேண்டும். பிற
பாத்திரங்களுடன் (ரோல்) ஒப்பிட்டு பார்க்க கூடாது என்பார். அவரது இந்த பாடமே,
சினிமாவில் நான் வெற்றி பெற வழிகாட்டியாக இருக்கிறது.
3 படத்தின் இந்தி மொழி பதிப்பை பார்த்து விட்ட எனது தாயார் சரிகா, என் நடிப்பை
பாராட்டினார். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், அந்த பாத்திரமாகவே நான் மாறி
விடுவேன். 3 படத்தில் வரும் அழுகை காட்சி கூட, சினிமாவுக்காக ஒப்புக்காக அழவில்லை.
அந்த பாத்திரத்தின் வலியை உணர்ந்து அழுதேன், என்று கூறியுள்ளார்.