புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

காதோடு காதாக...

காதோடு காதாக...

* பிரபாகரன் பற்றி சீரியஸாக
பொய்யுரைத்த சிறிதரன் எம்.பி.

புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவார். அவர் மீண்டு வருவார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்நாடு மதுரையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்ததாக நம்பகரமாகத் தெரிய வருகிறது.

தமிழ்நாடு மதுரை சட்டத்தரணிகள் சங்கம், தமிழ் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடத்திய கருத்தரங்கில் தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் பேசிய சிறிதரனிடம் அக்கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறுகிறார்கள் அது உண்மையா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அது பொய் பிரசாரம், பிரபாகரன் உயிருடன்தான் பாதுகாப்பாக இருக்கிறார். அவர் மீண்டும் வருவார், மீண்டுவருவார் என தெரிவித்தார். அப் போது சிறிதரனுக்கு பிரபாகரன் இருக்கும் இடம் தெரியும். ஆனால் அவருக்கு அந்தப் பிரபாகரன் யாரென்றுதான் தெரியாது. பிரபாகரனின் பெயரைப் பாவித்துப் பிழைக்கத் தெரிந்த பலரில் இவரும் ஒரு கில்லாடிதான். ஆனாலும் இது கொஞ்சம் ஓவராகத்தான் தெரியுது.

* டாக்டர்களால் இறந்த குழந்தை
உயிருடன் மீண்டு வந்த அதிசயம்

ஆர்ஜென்டினாவின் அரசு மருத்துவமனை ஒன்றில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்த பெண் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். அடையாளம் கண்டறிய முடியாத நோயால் அந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் இறப்பு சான்றிதழ் வழங்கினர். இதையடுத்து அந்த குழந்தை குளிரூட்டப்பட்டுள்ள பிணவறை கொண்டு செல்லப்பட்டு பிணங்கள் வைக்கப்படும் இழுவறை (டிராயர்) பெட்டியில் வைத்து பூட்டப்பட்டது.

குழந்தை பிறந்து 12 மணி நேரத்துக்கு பின்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவிருந்த தாய் கடைசியாக தனது குழந்தையின் முகத்தை பார்த்து விட்டு செல்ல ஆசைப்பட்டார். பிண அறைக்கு சென்று தனது குழந்தை வைக்கப்பட்டு இருந்த இழுப்பறையை (டிராயர்) திறந்து பார்த்தார். அப்போது குழந்தையின் உடலில் அசைவு காணப்பட்டது. உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவரிடம் ஓடிவந்தார். அந்த குழந்தைக்கு தேவையான அவசர சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட்டது.

சில மணி நேரத்துக்கு பின்னர் குழந்தையின் உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது. குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை வைத்து பராமரிக்கப்படும் பிரிவில் வைத்து அந்த குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல் நிலை சீராகவும், நல்ல நிலையிலும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிணவறைக்கு சென்று 12 மணி நேரத்துக்கு பிறகு பச்சிளம் குழந்தை உயிருடன் திரும்பி வந்திருப்பது தாய்க்கு மகிழ்ச்சியையும், மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

படித்த டாக்டர்கள் என்று மக்கள் நம்பிக்கை வைத்துச் செயற்பட்டால் இப்படியா அலட்சியமாக நடந்து கொள்வது? பொதுமக்களே கவனம். உறவினர்கள் எவராவது ஆஸ்பத்திரியில் இறந்தால் எதற்கும் ஒரு தடவை இறந்த உடலைக் கிள்ளிப்பாருங்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.