வென்னப்புவ, தங்கொட்டு பிரதேசங்களில் பல கொள்ளைகளில் ஈடுபட்ட நால்வர் கைது
வென்னப்புவ, தங்கொட்டு பிரதேசங்களில்
பல கொள்ளைகளில் ஈடுபட்ட நால்வர் கைது
புத்தளம் விசேட நிருபர்
வென்னப்புவ, தங்கொட்டுவ உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் வீடுகளைக் கொள்ளையிட்டும்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களைக் கொள்ளையிட்டும் அவற்றை விற்பனை
செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வென்னப்புவ சூதாட்டக் கும்பல் ஒன்றினைச்
சேர்ந்த நால்வரை கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளதாக சிலாபம் பிவின்
தீர்க்கப்படாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
தமக்குக் கிடைத்த தகவல்
ஒன்றினையடுத்து மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்களால் அண்மையில்
திருடப்பட்டு பெறுமதியான நான்கு மோட்டார் சைக்கிள்கள். சுமார் நான்கு இலட்சம் ரூபாய்
பெறுமதியான தங்க நகைகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும்
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வென்னப்புவ பிரதேசத்தில் வசிக்கும் பிரதேச செயலாளர் ஒருவரின் வீட்டில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த பெறுமதியான மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில்
விசாரணைகளை ஆரம்பித்த தீர்க்கப்படாத குற்றங்களின் விசாரணைப் பிரிவினர் திருடப்பட்ட
மோட்டார் சைக்கிளுடன் தங்கொட்டுவை பிரதேசத்தில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் அந்நபரால்
வென்னப்புவ, தங்கொட்டுவ மற்றும் கொச்சிக்கடை போன்ற பிரதேசங்களில் கடந்த காலங்களில்
மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான மூன்று மோட்டார் சைக்கிள் திருட்டு பற்றிய விபரங்கள் பெற
முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு அப்பிரதேசங்களில் உள்ள நான்கு வீடுகளில் தங்க நகைகள், பணம் மற்றும்
இலத்திரனியல் உபகரணங்களையும் கொள்ளையிட்டு அவற்றை விற்று பணம் பெற்றுக்
கொண்டுள்ளதாகவும் இந்தச் செயற்பாடுகளுக்கு தன்னோடு மேலும் மூவர் தொடர்பு
பட்டிருந்ததாகவும் அந்நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து வென்னப்புவ மற்றும்
தங்கொட்டு பிரதேசங்களில் வசிக்கும் அம்மூவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கொள்ளையிட்ட பணத்தில் போதைப் பொருள் பாவனை, சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக
தெரியவந்துள்ளது.