இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கின் குற்றப்பத்திரிகையில், பா. ஜ. க. மூத்த தலைவர்
அமித் ஷா பெயர் சேர்க்கப்பட்டிருந்தால், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசு மகிழ்ச்சியடைந்திருக்கும் என்று சி. பி. ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா
கூறியதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, ரஞ்சித் சின்ஹா அவ்வாறு கூறவில்லை என்று சி. பி. ஐ. அலுவலகம் மறுப்பு
தெரிவித்துள்ளது.
இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில், 2வது குற்றப் பத்திரிகையை ஆமதாபாத்
நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சி. பி. ஐ. தாக்கல் செய்தது. அதில், இந்த
வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும்,
பா. ஜ. க. மூத்த தலைவருமான அமித் ஷாவின் பெயர் இடம்பெறவில்லை.
இதுகுறித்து கருத்து தெரிவித்த குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜுன்
மோத்வாடியா, போலி என்கவுன்ட்டர் வழக்கில் அமித் ஷா மீது எந்தக் குற்றச்சாட்டையும்
சி. பி. ஐ. தெரிவிக்காததற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆங்கிலப்
பத்திரிகை ஒன்று ரஞ்சித் சின்ஹாவின் பேட்டியை வெளியிட்டிருந்தது.