பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிற்கின்ற பரம்பொருளுக்கு உலகமே கோயிலாகும்.
மெய்யடியார்கள் தம் மனக் கண்களால் வழிப்பட்டுப் பூசிக்க இறைவன் அவர்களுடைய மனதிலே
கோயில் கொண்டருளுகின்றான். ஆயினும், சாதாரண மக்கள் தனித்தோ, ஒன்றுகூடியோ அவனை
உணர்வொன்றித் துதித்தல் கோயில்களிலேயே முடிகின்றது.
தலைமுறை தலைமுறையாகப் பல பக்தர்கள் தவமும், செபமும், தியானமும், பூசையும்,
பிரார்த்தனையுஞ் செய்த இடங்களே திருக்கோயில்கள். பக்த கோடிகள் விழுந்து புரண்டு
வழிபட்ட தலங்களுக்கு ஒரு தனிச் சக்தி உண்டு. அவற்றில் இறைவனை எளிதிற் காணலாம்.
நிலத்தை அகழ்ந்தால் நீரைப் பெறலாம். ஆனால் சில இடங்களிற் கிணறும் குளமும் நீர்
வேட்கை தீர்ப்பதற்குத் தயாராக இருக்கின்றனவே, அவற்றை நாம் அடைந்து சுலபமாகத் தாகந்
தணித்துக் கொள்ளலாம் அல்லவா? அவை போன்றவையே கோயில்கள். பக்தித் தாகத்தை
அவ்விடங்களிற் சிரமமில்லாது தீர்த்துக்கொள்ளலாம்.
‘கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்’ என்பது முதுமொழி. இதிலிருந்து
முக்கியமானதோர் உண்மை புலப்படுகின்றது. அதாவது, என்ன இருந்தாலும், இல்லாவிட்டாலும்
ஆலயம் ஒன்று ஊருக்கு இன்றியமையாதது என்பதே அவ்வுண்மை. மக்களுடைய ஆன்ம
ஈடேற்றத்துக்கும் நல் வாழ்வுக்கும் ஆதாரமாக இருப்பது ஆலயம் என்பதை நம் முன்னோர்கள்
உணர்ந்திருந்தார்கள். அன்றுஞ்சரி இன்றுஞ்சரி, தமிழ்க் கிராமங்கள் ஆலயத்தைச் சூழ்ந்தே
அமைந்துள்ளன.
எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும், அதன் நடுவில் ஓர் ஆலயமும் அதனைச் சூழ்ந்து
குடிமனைகளும் இருக்கும்.
வேதகாலத்தில் ஆலயங்கள் இருந்ததில்லை. இயற்கையின் சூழ்நிலைகளே வழிபாட்டிற்குரிய
இடங்களாய் இருந்தன. நாளடைவில் ஆகமங்களை அனுசரித்து ஆலயங்கள் கட்டப்பட்டன. மானுட உடல்
ஆலயங்களுள் மிகச் சிறந்தது என ஆன்றோர்கள் கருதினர். மனித உடலிலேயே தெய்வம் உள்ள
தென்ற கருத்தைப் பாமரர்கள் எளிதில் அறியமுடியாது.
அவர்களுக்குப் பயன்படுவதற்காகவே
ஆலயங்கள் அமைக்கப்பெற்றன. உடலில் உள்ள தத்துவங்களை விளக்குவதற்கு ஆலயங்கள்
வந்துள்ளன. ஆகமங்கள் விதித்துள்ளபடியே ஆலயங்களை அமைக்க வேண்டும். இமயங்கள்,
நியமங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்தே இவைகள் அமைக்கப்பட்டன. பொதுமக்கள் வந்து
தங்கி உணவு உண்டு, சுப நிகழ்ச்சிகள் செய்வதற்காக ஆலயங்கள் கட்டப்பட்டன. இவை
மனோதத்துவ முறைப்படி பல நன்மைகள் செய்து வருகின்றன.
உயிர் உடம்பில் அடைபட்டிருப்பது போல் ஆலயத்துள் இறைவன் தங்குகின்றான் என்பதை
திருமூலர் தம் திருமந்திரத்தில்,
“உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பினுள் உத்தமன் கோயில்
கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே” என விளக்குகின்றார்.
அதாவது, உடம்பினுள் உத்தமனான இறைவன் கோயில் கொண்டிருப்பதால் இவ்வுடலைப் பாதுகாத்து
வருகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒளவைப் பாட்டியார்
“உடம்பினாலாய பயனாவ தெல்லாம்
உடம்பினுள் உத்தமனைக் காண்” என்று குறிப்பிடுகிறார்.
மனிதன் மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டி மல்லாந்து படுத்திருப்பது போல்
ஆலயங்களில் கருவறை முதல் முன் கோபுரம் வரையுள்ள பாகம் அமைந்திருக்கும். முகம்
ஆலயத்தின் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் கழுத்து, துவார பாலகர் நிற்குமிடங்கள்
மனிதனது தோள்கள், அங்கிருந்து கொடிமரம் வரையுள்ள பாகம் உடம்பு. கொடி மரம் முதுகுத்
தண்டு, வாயிற் கோபுரம் பாதங்கள் ஆகும்.
குறியின் அடி மகா பலிபீடம். தொப்புள் நாடி - அதிகார நந்தி. இதயம் - கழுத்து,
வாகனநந்தி - புருவநடு, கருவரை -லிங்கம், தலை -உச்சி, கர்ப்பக்கிரகம் - விமானம்.
மனித உடம்பில் மூலாதாரம் முக்கிய உறுப்பாகக் கருதப்படுகிறது. மூலாதாரத்து மூண்டெழு
கனலை என்று விநாயகர் அகவலில் ஒளவையார் குறிப்பிடுகிறார். மனிதனின் மூலாதாரமே கொடி
மரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கொடி மரத்தில் உள்ள 32 வளையங்கள் முதுகுத் தண்டில்
உள்ள 32 எலும்புகளைக் குறிக்கின்றன. மூர்த்தம் ஆன்மா எண்ணங்களின் பிறப்பிடம்.
தொப்புள் இங்கு சிவனுடைய வாயில் காப்பாளனாகிய நந்தியை நிர்மாணிப்பதன் மூலம்
எண்ணங்களை அடக்கி மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை உணர்த்தப்படுகிறது.
தீய குணங்கள் நீங்க வேண்டும் என்பதை (பலியிட வேண்டும்) பலி பீடம் குறிக்கின்றது.
புருவ மத்தியில் ஆன்ம ஒளி ஏற்படும் என்பதைக் குறிக்க அங்கு நெற்றிக்கண்
அமைக்கப்பட்டுள்ளது. மூளையிலுள்ள நரம்புகள் அனைத்தும் மணியாகவும், விளக்காகவும்
உருவகப்படுத்தப்படுகிறது.
கர்ப்பகிரகம் - முகம்
அர்த்த மண்டபம் - கழுத்து
மகா மண்டபம் - மார்பு
மணி மண்டபம் - வயிறு
உள் சுற்று - தோள்கள்
வெளிச் சுற்று - கைகள்
கருவறைத் தூண்கள் - கண்கள்
தூண்கள் - எலும்புகள்
கர்ப்பக்கிரகம் என்பது பிரதான மூர்த்தியை வைத்து வணங்கும் இடமாகும். இதற்கு கருவறை
(மூலஸ்தானம்) என்று பெயர். பத்திதத்துவமும் தனு புவன போகங்களும் மாயையில் ஒடுங்க,
மாயை இறைவன் திருவடியில் ஒடுங்கும். கருவறை இருட்டாக இருக்கக் காரணம் ஏன்? ஆதி காலம்
தொட்டு உயிர் அறியாமையை நீக்கிச் சிவப்பேற்றைத் அளிப்பதற்காக கருவறையை
நம்முன்னோர்கள் இருட்டறை ஆக்கித் திருவருள் புரியும் திருவுருவங்களைக் கருவறையினுள்
வைத்தனர்.
கோடைக்காலத்தில் கருகிய புற்பூண்டுகள் மழைக் காலத்திலே ஒன்று சேர்ந்து முளைக்கும்.
இது போல ஊழிகால இருளின் முடிவு நீங்கி மீண்டும் உயிர் பிறப்பு எடுக்கின்றது.
இப்பிறவியாகிய இருளின் தொடக்கம் அங்கு தொடங்குகிறது. இப்பிறவியெடுத்து அறியாமையாகிய
இருளில் துன்பப்படும் உயிர்களை இறைவன் திருவருள் சக்தியின் துணை கொண்டு ஈடேற்ற
விரும்புகிறான் என்பதை,
“இருட்டறை மூலையிருந்த குமரி
குருட்டுக் கிழவனை கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி அவளை மனம் புரிந்தாளே.”
என்கிறது திருமந்திரம்.
இருட்டறை - கருவறை, மூலையிலிருந்த குமரி அதாவது, மறைந்திருந்த திருவருள் சக்தி.
குருட்டுக் கிழவன் அறியாமையில் மூழ்கி இருக்கும் ஆன்ம கூடல், ஆன்மாவோடு சேர்த்து
அருள் புரிய எண்ணிக் குருட்டினை நீக்கி ஆன்மாவின் அறியாமையைப் போக்குகிறது. பின்
இறைவன் ஆன்மாக்கள் பொருட்டு இரங்கி வந்து திருவருளிடத்தில் சேர்க்கிறான் என்பது
பொருள். அநாதிகாலம் முதல் அறியாமையில் மூழ்கி இருக்கும் ஆன்மாவை உய்யும் வழியைப்
பெறுவதற்காக ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பண்டைய ஆலயங்களில் உள்ள கர்ப்பக் கிரகங்கள்
மிகவும் இருண்டு தொழுவோர் மனதில் ஒருவகை அச்சத்தையும், வியப்பையும் உண்டு பண்ணுமாறு
அமைந்திருக்கும்.
ஆலயங்களை வெறும் வழிபாட்டுக் கூடங்களாக நாம் எண்ணுவதில்லை. இறைவனின் இருப்பிடமாகவும்,
இறைவடிவாகவும் எண்ணி வழிபடுகிறோம். ஆலயத்திலுள்ள பராசக்தியைப் பெறுவதற்காக உயிர்
சக்திகள் ஆலயத்திற்குச் செல்கின்றன.
இருட்டில் மெல்லிய ஒளியில் மூல மூர்த்தியை வணங்கும் போது ஊன்றிக் கவனித்தால் மட்டுமே
வணங்க முடியும். இப்படிச் செய்வதால் மனம் குவித்தல், ஒரு நிலைப்படுத்தல், கவனித்தல்
திறன் வளருதல் என்கிற மனோ விஞ்ஞானம் வளருகிறது.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது பழமொழி, கோயிலின் வாயிலை அழகு செய்வது
கோபுரங்கள். கோபுரம் இறைவனின் திருவடியைக் குறிக்கும். கோபுரம் இல்லாத
கோயில்களுக்குச் சிறப்புகள் குறைவாகவே கருதப்பட்டது. ஆகவே கோயில்கள் கோபுரங்களுடன்
அமைப்பதே சிறப்பாகும்.
எனவே உலகத்தில் பெறுகின்ற இன்பத்துக்கு முடிவு உண்டு. துன்பம் என்பதை விலையாகக்
கொடுத்துதான் அதைப் பெற முடியும். ஆனால் சிற்சுகமாகிய இறை இன்பம் துன்பமில்லாத
அளவில் அடங்காத சிற்சுகமாகும். தாயுமான சுவாமிகள் அத்தகைய பேரின்பமுடைய பரம்பொருளை
‘சிற்சுகமான வாழ்கவே’ என்று அழைக்கின்றார். இச்சுகத்தை இறையனுபூதி மூலமாகவே பெற
முடியும். ஆகவே,
சிவஸ்ரீ சு. மணி கிருஷ்ணகுமார் குருக்கள்
ஏழுமுககாளியம்மன் திருக்கோயில்