2011-02-04

  தாய் நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் புகழ் சேர்த்தவர் சைமன் காசிச்செட்டி

தாய் நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் புகழ் சேர்த்தவர் சைமன் காசிச்செட்டி

புகழ் சேர்த்தவர் சைமன் காசிச் செட்டிசைமன் காசிச்செட்டி (மார்ச் 21, 1807 - நவம்பர் 5, 1860) 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ்பெற்ற தமிழர்களில் ஒருவர். அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கைச் சட்ட சபைக்கும் நியமிக்கப்பட்டு பணியாற்றினார். இவை தவிர தான் எழுதிய நூல்கள் மூலம் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

புத்தளம் நகருக்கு அண்மையில் கற்பிட்டி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நகரமாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. கற்பிட்டி வணிகத்தில் முன்னணியிலிருந்த ஒரு துறையாக விளங்கியது.

தேசிய வீரர் காசிச் செட்டி

தமிழ் நாட்டைச் சேர்ந் செட்டிமார் முதலான வணிகக் குழுவினர் இங்கே வாழ்ந்து வந்தனர்.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பமொன்றில் 21 மார்ச் மாதம் 1807 ஆம் ஆண்டின் கவிரியேல் காசிச் செட்டியின் புதல்வராகப் பிறந்தார். இளம் வயதிலேயே தனது தாய்மொழியான தமிழ், இலங்கையின் பெரும்பான்மையினர் மொழியான சிங்களம், அக்காலத்து ஆட்சி மொழியான ஆங்கிலம் என்பவற்றைக் கற்றுப் புலமை எய்தினார். இவை தவிர சமஸ்கிருதம், போத்துக்கீச மொழி, டச்சு மொழி, லத்தீன், கிரேக்கம், எபிரேயம், அரபு மொழி ஆகிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கினார்.

இவர் 21 வயதான போது மணியகாரர் என்னும் பதவிக்கு நியமனமானார். பின்னர் மாவட்ட முதலியார் பதவிக்கு உயர்வு பெற்றார்.

புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கிய காசிச் செட்டி 1828 ஆம் ஆண்டு முதலாக புத்தளம் மணியக்காரராகவும் 1933 ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தில் முதலியாராகவும் பணியாற்றினார். 1838 இல் கோல்புறூக் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்ட சபையில் தமிழ் பேசும் மக்களுக்கான உறுப்புரிமை வெற்றிடமானபோது சைமன் காசிச்செட்டி இலங்கைச் சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். 1845ஆம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு 1848 ஆம் ஆண்டு முதலாகத் தற்காலிக நீதிபதியாகவும் 1852 ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார்.

தனது அரசுப் பணிகளுக்கு மத்தியிலும் இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகுந்த தொண்டாற்றினார். தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் பற்றி எழுதியதோடு, தமிழ் – வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்த் தாவரவியல் அகராதி என்னும் நூல்களைத் தயாரித்தார். யாழ்ப்பாணத்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன.

இலங்கையின் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட ‘கஜற்’ என்னும் செய்தி வெளியீட்டுக்கும், இலங்கையில் ஆங்கிலேயர் வெளியிட்ட செய்திப் பத்திரிகைகளுக்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட ‘சிலோன் கசற்றியர்’ என்னும் வெளியீட்டைச் செட்டியார் வெளியிட்டதன் மூலம் இலங்கையிலும் இலண்டனிலும் கூடப் புகழ் பெற்றார். இவர் ‘உதயாதித்தன்’ என்னும் தமிழ் மாசிகை ஒன்றையும் 1841 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். எனினும் நீண்டகாலம் அதை நடத்த முடியாமல் நிறுத்திவிட்டார்.

இவர் எழுதிய நூல்களுள் இன்னொரு முக்கியமான நூல் ‘தமிழ் புளூட்டாக்’ இது இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்.