கலாயோகி ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி (ஆகஸ்ட் 22 1877 - செப்டம்பர் 9 1947),
கீழைத்தேயக் கலைகளுக்கும்,இந்து மதத்துக்கும் சிறந்த தூதுவராக விளங்கியர், சிறந்த
ஓவியர், சிற்பி, கட்டக்கலைஞர், கலைத் திறனாய்வாளர் (விமர்சகர்), ஆராய்ச்சியாளர்,
நூலாசிரியர்.
தேசிய வீரர் ஆனந்தக்குமாரசுவாமி
சேர் முத்துக் குமாரசுவாமி, எலிசபெத் பீவி என்போரின் ஒரே மகன் இவராவார். கொழும்பிலே
பிறந்தார். தாயார் இங்கிலாந்தின் கெண்ட் என்னும் பகுதியைச் சேர்ந்தவர். தாயாருடன்
1879 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்து சென்றார். இரண்டு வயதாகு முன் தந்தையை
இழந்து தாயின் பராமரிப்பிலே இங்கிலாந்தில் வளர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலே
பி.எஸ்.சி. தேர்வில் முதல் வகுப்பிற் தேர்ச்சியடைந்தார்.
பின்பு அதே பல்கலைக்கழகத்தில் 1905 இல் DSc (Geology) பட்டத்தையும் பெற்றார்.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது அங்கு அவருடன் கல்வி பயின்ற எதெல் மேரியைத்
திருமணம் புரிந்து கொண்டார். அவர் ஆங்கிலம், பிரெஞ்சு, பாரசீகம், சிங்களம்,
சமஸ்கிருதம், பாளி, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த புலமையுடையவராகவும்
விளங்கினார்.
எதெலுடன் இலங்கை திரும்பிய ஆனந்த குமாரசுவாமி 1903ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1906
டிசம்பர் வரை இலங்கையிற் கனிப்பொருள் ஆய்வுப் பகுதியின் தலைவராக விளங்கினார்.
எதெலுடனான மணவாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. சிறிது காலத்தின் பின்னர் எதெல்
நாடு திரும்பினார். பின்னர் ஆனந்த குமாரசுவாமி ரத்னா தேவி எனும் இலங்கைப் பெண்ணைத்
திருமணம் புரிந்தார். இவருக்கு நாரதா, ரோஹினி என இரு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில்
நாரதா பின்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தத் துக்கம் தாளாது ரத்னா
தேவியும் சிறிது காலத்தில் காலமானார்.
அந்தக் காலத்தில் விடுதலை (சுதேசிய) உணர்வால் உந்தப்பெற்று சமூக சீர்திருத்த
சங்கத்தை (1905) நிறுவி அதன் சார்பில் Ceylon National Reviw என்னும் சஞ்சிகையை
(இதழை) ஆரம்பித்து அதன் ஆசிரியராகச் சேவையாற்றினார்.
1907 ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்திலும் இந்தியாவிலும் கலா முயற்சிகளில் ஈடுபட்டார்.
1911ம் ஆண்டில் அலகபாத்தில் நடைபெற்ற பொருட்காட்சியின் கலைப்பகுதிக்கு பொறுப்பு
வகித்தார்.
இந்திய விடுதலை இயக்க ஆதரவாளராக, அதன் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார்.
ரவீந்திரநாத் தாகூர், சகோதரி நிவேதிதை முதலியோரின் நண்பராக வாழ்ந்தார்.
இந்தியக் கலைகளின் தெய்வாம்சத்தினை உலகிற்கு எடுத்துக் காட்டிய சிறந்த தூதுவராகக்
கருதப்படுபவர் இவர். இறைவனின் ஐந்தொழிலைப் (பஞ்சகிருத்தியத்தைப்) பிரதிபலிக்கும்
சிவநடனத்தை விளக்கி 1912 இலே ‘சித்தாந்த தீபிகை’ யில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை
மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பினை உலகிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாகக்
கொள்ளப்படுகிறார். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
சகோதரி நிவேதிதையுடன் இணைந்து பெளத்த புராணக் கதைகளையும் தொகுத்துத் தந்துள்ளார்.
‘பிரபுத்த பாரதா’ என்ற சஞ்சிகையில் (இதழில்) 1913, 1914, 1915ம் ஆண்டுகளில்
தாயுமானவர் பாடல்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் சிலவற்றை வழங்கினார்.
1917 முதல் ஐக்கிய அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் அமைந்திருந்த நுண்கலை நூதனசாலையில்
கீழைத்தேயப் பிரிவின் பணிப்பாளராகவும், பின்பு ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்தார்.
ஆனந்த குமாரசுவாமி அவர்கள் தமது எழுபதாவது வயதில் செப்டம்பர் 9, 1947ல்
அமெரிக்காவில் பொஸ்ரன் நகரில் காலமானார்.