ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, OCTOBER, 04, 2010
ரஷ்ய - ஜேர்மன் ஜோடிகள் வெற்றி
ரஷ்ய - ஜேர்மன்
ஜோடிகள் வெற்றி
சென்னை, அக். 03
சென்னையில் நடந்த சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் ரஷ்யா, ஜெர்மனி ஜோடிகள்
சாம்பியன் பட்டத்தை வென்றன. வெற்றி பெற்ற ஜோடிகளுக்கு அமைச்சர் பொன் முடி பரிசுகளை
வழங்கினார்.
மெரினா பீச் வாலிபால் கிளப் சார்பில், இந்திய கைப்பந்து சம்மேளனம் ஆதரவுடன் எஸ். ஆர்.
எம். கோப்பைக்கான 2வது சர்வதேச பீச் வாலிபால் போட்டி (சென்னை சேலஞ்சர் 2010) சென்னை
பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் கடந்த ஒரு வார காலமாக நடந்தது. 33 நாடுகளை
சேர்ந்த 56 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றன. நேற்று முன்தினம் இறுதிப் போட்டி
மற்றும் 3வது இடத்திற்கான ஆட்டங்கள் நடந்தன.
ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் 16ம் நிலை ஜோடியான அலெக்சாண்டர்
லிகோலெதோவ் - எவ்ஜெனி ரோமாஷின் (ரஷ்ய) ஆகியோர், 11ம் நிலை இணையான துருக்கியின்
செல்சக் செகர்சி - வோல்கன் காக்டேபேவுடன் பலப் பரீட்சை நடத்தினர். 45 நிமிடங்கள்
நீடித்த இந்த ஆட்டத்தில் ரஷ்ய ஜோடி 21-18, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி
பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
3வது இடத்திற்கான ஆட்டத்தில் அமெரிக்காவின் மைக்கேல் மாரிசன் – ஸிமெட் ஜோடி 21-16,
21-18 என்ற நேர் செட்டில் துருக்கியின் முராத் கிகின்கோலு-ஹகன் காக்டேபே இணையை
தோற்கடித்தனர். முதல் 3 இடங்களை பிடித்த ஜோடிகள் முறையே ரூ. 2.88 இலட்சம், 1.98
இலட்சம், 1.44 இலட்சத்தை பரிசுத் தொகையாக பெற்றன.