ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, OCTOBER, 04, 2010
மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 மீனவர்களுக்கும் 100 விதவைகளுக்கும் விசேட
தொழிற் பயிற்சி
மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 மீனவர்களுக்கும்
100 விதவைகளுக்கும் விசேட தொழிற் பயிற்சி
(களுவாஞ்சிக்குடி குறூப் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை வடக்கு, கிழக்கு மாகாண கரையோர சமுதாய அபிவிருத்தி
திட்டம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இம் மாவட்டத்தில் உள்ள 7 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 17 கிராமங்களைச்
சேர்ந்த பாதிக்கப்பட்ட 100 மீனவர்களும் 100 விதவைகளும் இதற்காக தெரிவு
செய்யப்பட்டனர். 100 மீனவர்களுக்கும் கண்ணாடி இழை படகினை உற்பத்தி செய்வதற்கான 3
மாத பயிற்சி அவர்களின் கிராமங்களிலேயே வழங்கப்பட்டது. அதேபோன்று 100 விதவைகளுக்கும்
மீன்பிடி வீச்சு வலை பின்னும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட படகுகளும் வலைகளும் வைபவ ரீதியாக 100 மீனவர்களுக்கும்
கையளிக்கப்பட்டன. மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் உதவிப்
பணிப்பாளர் எஸ். ரி. ஜோர்ஜ் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் நெக்டெப் திட்ட
பணிப்பாளர் எஸ். எம். குரூஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் ஆகியோர்
கலந்து கொண்டு இவற்றை கையளித்தனர். இத் திட்டம் பிறக்டிக்கல் அக்சன் நிறுவனத்தினால்
நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதேவேளை மேற்படி 100 விதவைகளும் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் அனுசரணையுடன் மீனவர்
ஓய்வூதியத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். (ஐ)