அணுசக்தி, தொடர்பான ஆறு நாடுகளின் பேச்சு விரைவில் தொடங்குவதற்கு, வடகொரியா
விருப்பம் தெரிவித்துள்ளது.
வடகொரியா, தென்கொரியா, சீனா, ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளிடையே,
அணுசக்தி தொடர்பான பேச்சு, கடந்த 2009ல் நடந்த போது, அதிலிருந்து வடகொரியா
வெளியேறியது. இதையடுத்து, பல்வேறு பொருளாதாரத் தடைகளை வடகொரியா மீது அமெரிக்கா
விதித்தது.
இந்நிலையில் கடந்த மாதம், இந்தோனேசியாவின் பாலிதீவில், இரு கொரிய நாடுகளிடையே
அணுசக்தி பேச்சு நடந்தது. தொடர்ந்து கடந்த வாரம், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே,
நியூயோர்க்கில் பேச்சு நடந்தது.
இதையடுத்து வடகொரிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விடுத்த அறிக்கையில்,
“2005ல் போடப்பட்ட “கொரிய மண்டலத்தில் அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம்’ தொடர்பாக,
மீண்டும் ஆறு நாடுகளின், பேச்சுவார்த்தையை விரைவில் ஆரம்பிக்க வடகொரியா
விரும்புகிறது” என்று கூறியுள்ளார்.