சகல வேறுபாடுகளையும் ஒதுக்கிவிட்டு தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட வேண்டிய தருணம்
இது
சகல வேறுபாடுகளையும் ஒதுக்கிவிட்டு தமிழ்த்
தலைமைகள் ஒன்றுபட வேண்டிய தருணம் இது
தமிழ் ஊடகங்கள், புத்திஜீவிகள், சமயத் தலைவர்களின் ஒத்துழைப்பைக் கோருகிறார்
டக்ளஸ் தேவானந்தா
(எஸ். சுரேஸ்)
இலங்கையில் நீண்ட காலமாகப் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண
நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை இப்போது சரிவரப் பயன்படுத்திக் கொள்வது
தமிழ்த் தலைமைகளின் முன்னாலுள்ள பாரிய பொறுப்பும், கடமையும் ஆகும். இதற்காக தமிழ்
அரசியல் தலைவர்கள் தமக்கிடையே இருந்துவரும் சகலவிதமான அரசியல், கட்சி மற்றும்
தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு
ஒன்றாக ஒரே குரலில் தமது மக்களுக்கான பிரச்சினையைச் சர்வதேசத்தின் முன்
வெளிப்படுத்த ஒன்றுபட்டு முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்
நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்திருக்கிறார்.
உண்மையில் தமிழர் அரசியலில் பிரதான தமிழ் ஊடகங்கள் மிகவும் காத்திரமான
பங்களிப்பினைச் செய்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. பிரதான
தமிழ் ஊடகங்களை தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் நோக்குகிறார்கள். அதேபோன்று இந்தப்
பிரதான தமிழ் ஊடகங்கள்தான் தமிழ் அரசியல்வாதிகளையும் சரியான வழியில் இயக்குகின்றன
என்று கூறினாலும் தவறில்லை.
அந்தளவிற்குத் தமிழ் ஊடகங்கள் தமிழ் அரசியல்வாதிகளிடையேயும், தமிழ் மக்களிடையேயும்
மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. சமூக நலன் கருதி தமிழ் ஊடகங்கள் தமிழ்க்
கட்சிகளின் தலைமைகளை ஒற்றுமைப்படுத்தும் செயலைச் செய்ய நிச்சயம் முன்வர வேண்டும்
என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அவரது பேட்டியின் முழு விபரம் 06 ஆம் பக்கத்தில்
பிரசுரமாகியுள்ளது.