புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

நம்பிக்கை தரும்மாற்றங்கள் தொடர இடமளித்தல் அவசியம்

நம்பிக்கை தரும் மாற்றங்கள் தொடர இடமளித்தல் அவசியம்

சகல சமூகங்களினதும் குறிப்பாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் அதிகளவு ஆதரவுடன் கடந்த ஜனவரி 08 ஆம் திகதியன்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை யடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரும் இணைந்து செயற்பட்டமையினால் ஏற்பட்டுவந்த “மாற்றங்கள்” சிறுபான்மை இன, மதக் குழுக்கள் மற்றும் சமூகங்களுக்கு குறிப்பிடத்தக்கதான ஆறுதலளிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தியிருப்பதை நன்கு உணர முடிகின்றது.

ஆனால் நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பெரும்பான்மை மேலாதிக்கவாத சிந்தனை கொண்ட சில சக்திகள் “இனவாத” உணர்வுகளுக்கு “உசுப்பேற்றி” விட்டு வாக்குகளை கவர்ந்திழுக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டமைக்கான சமிக்ஞைகள் கடும் போக்கு சக்திகளிட மிருந்து வெளிப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இது குறித்து வாக்காளர்களாகிய பொதுமக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

இந்த நாட்டின் தலைவிதியை மீண்டுமொரு தடவை நிர்ணயிக்கப்போகும் நாளைய தேர்தலில் இத்தகைய இனவாத சக்திகளுக்கு அரசாங்கத் தரப்பின் போசிப்பு ஒரு போதும் இருக்கப்போவதில்லை. ஆனாலும் வகுப்புவாதச் சிந்தனைகளுக்கு உரமூட்டும் கருத்துக்களை இன மேலாதிக்கவாத சக்திகள் சில பரப்புரை செய்து வந்ததை மிகவும் தெளிவாக அவதானிக்க முடிந்தது. அதனைத் தடுத்து நிறுத்துவதில் போதுமான முனைப்புக்கள் எடுக்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது.

பெரும்பான்மை இனத்தின் வாக்குகளில் தெரிவாகும் அரசாங்கம் சிறுபான்மையினத்திடம் கப்பம் பெற்றுக் கொண்டு அவர்களுக்காக மட்டும் செயற்படுவதாக கடும் தேசியவாத அமைப்பான பொது பலசேனாவின் புதிய முகமாக தோற்றம் பெற்றிருக்கும் பொதுஜன பெரமுனக் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட பலரும் வெளிப் படையாகவே குற்றம் சாட்டியிருந்தனர். இவரைப் போலவே இனவாத சிந்தனை கொண்டிருக்கும் பலரிடம் இருந்தும் மிக மோசமான இனவாதக் கருத்துக்கள் தேர்தல் காலத்தில் வெளியாகியிருந்தது.

நீண்டகால யுத்தத்தாலும் இடம்பெயர்வாலும் ஏற்பட்ட உயிர், உடைமை இழப்புக்களிலிருந்து தமிழ் மக்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் இன்னமும் மீட்சி பெற முடியாமல் இருந்துவரும் நிலையிலும் முகாம்களிலும் இடைத்தங்கல் நிலையங்களிலும் சொந்தக் காணிகளுக்குக் கூட செல்ல முடியாமல் துன்பத்துடன் இருந்துவரும் நிலை யிலும் சிறுபான்மை மக்களுக்குச் சார்பாகவே இந்த அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றதென்ற குற்றச் சாட் டையும் இந்தச் சிலர் முன்வைத்திருந்ததைக் காண முடிந்தது.

அத்துடன் நாட்டின் அபிவிருத்தியிலும் முன்னேற்றத் திலும் சிறுபான்மை மக்களுக்கு அக்கறையில்லையெனவும் தமது இனத்தின் உரிமைகளை பெற்றுக் கொள்வதில் மட்டுமே அவர்கள் அக்கறையுடன் இருப்பதாகவும் இவர்கள் சாடியிருக்கும் கருத்துக்களையும் நாம் தாராள மாகவே ஊடகங்களில் கண்டிருக்கிறோம். உண்மையில் “பெரும்பான்மை இனவாதம்” நடைமுறையொழுங்காக விரவிவருவதற்கு இடமளிக்கப்பட்டால் “நல்லிணக்கத் திற்கான” முயற்சிக்கு ஆபத்தை தோற்றுவித்துவிடும் எந்தவொரு பாரிய விவகாரத்திற்கும் பெரும்பான்மையினர் போராட்டமின்றி வெற்றி பெற்றுவிட முடியும்.

ஆனால் தப்பபிப்பிராய உணர்வின் நிரந்தரமான அழுத்தத்தினால் தமது நியாயபூர்வமான கோரிக்கைகளைக் கூட சிறுபான்மையினர் தளர்த்திக்கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அத்துடன் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், தாக்குதல்கள் அபாயமும் முன்னைய காலங்களைப் போன்று அதிகளவில் ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சமான சூழலும் அவர்களிடம் காணப்படுகிறது. ஆனால் இத்தகைய நிலைக்கு இப்போது இடமளிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இடமளிக்க மாட்டார்கள் எனும் நம்பிக்கையும் அம்மக்களிடையே நிறையவே காணப்படுகிறது.

நியாயபூர்வமான உரிமைகளை வலியுறுத்தி சாத்வீக வழியில் நடத்தப்படும் போராட்டங்கள்கூட அடக்கி யொடுக்கப்பட்ட கடந்தகால பதிவுகள் இருந்து வருகின் றன. அதேவேளை அடிப்படை உரிமைகளை வலியுறுத் தும் சிறுபான்மையினரை தேசவிரோத சக்திகளென வகைப்படுத்தி பெரும்பான்மையினர் மத்தியில் நிரந்தரமா கவே தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த உணர்வுகளைத் தட்டியெழுப்பி தமது “வாக்கு வங்கி”யைப் பெருக்குவதற்கும் சில பெரும்பான்மை மேலாதிக்கவாத “கடும்போக்கு சக்திகள்” முயற்சிப்பதும் இருந்து வருகிறது. தேர்தல் காலத்தில் இந்த முயற்சிகளும் பரப்புரைகளும் தீவிரமடைந்திருந்தது.

இந்த சக்திகளை எந்த இன, மதத்தைச் சார்ந்தவர்க ளாயினும் பொதுமக்கள் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அதேவேளை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும், சுயேச்சைக்குழுக்க ளும் இன, மதவாத விரோதத்தை தூண்டும் கருத்துக் களுக்கு சிறிதளவும் இடமளிக்காத விதத்தில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மதத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், தேர்தல்கள் ஆணையாளரும், குறிப்பாக ஜனாதிபதியும் வலியுறுத்திக் கூறியிருந்தபோதிலும் பலர் இவ்விடயத்தில் தாம் நினைத்ததையே செய்தனர். விருப்பு வாக்குகளைப் பெறுவதே அவர்களது குறியாகக் காணப்பட்டது.

வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் பிராந்தியங் களைச் சேர்ந்த மக்களின் பிரச்சினைகள், தேவைப்பாடுகள், அவற்றைத் தீர்த்துவைக்கக்கூடிய தங்களின் திட்டங்கள், ஆற்றல்கள் பற்றி பிரசாரப்படுத்துவது தவறானதல்ல. ஆனால் இதர இனங்கள், மதக் குழுக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் தொடர்பான “விரோத” உணர்வுகளைத் தூண்டும் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வது அவசியம் என்பதைக் கவனத்திற் கொள்ள பலரும் தவறிவிட்டனர்.

எனவே வாக்காளர்களாகிய பொதுமக்கள் இத்தகையவர் களுக்கு இத்தேர்தலில் நல்லதொரு பாடத்தினைப் புகட்ட வேண்டும் ஜனவரி 08ஆம் திகதி எமக்குக் கிடைத்த நம்பிக்கை தரும் மாற்றங்களைத் தொடர்ந்தும் தக்க வைப்பது மக்களாகிய உங்களது கரங்களிலேயே உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் குறிப்பிட்டது போன்று நல்லவர்களையும், உங்களுக்குச் சேவை செய்யக் கூடியவர்களையும் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவது உங்களது பொறுப்பு.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.