புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

மூத்த எழுத்தாளர், முற்போக்கு எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம்

மூத்த எழுத்தாளர், முற்போக்கு எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம்

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்ட காலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பிரேம்ஜி ஞானசுந்தரன் கடந்த சனியன்று இரவு கனடாவில் காலமானார்.

அச்சுவேலியில் 17-11-1930 ஆம் திகதி பிறந்த ஞானசுந்தரன் தமது ஆரம்பக் கல்வியை அச்சுவேலி கிறிஸ்தவ கல்லூரியிலும் பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். 1947இல் தமது 17 வயதிலேயே சுதந்திர இளைஞர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அன்றிலிருந்து ஞானசுந்தரன் தீவிரமான வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும் ஈடுபடத் தொடங்கினார்.

தமிழகம் சென்று மூத்த அறிஞர்கள் நாமக்கல் கவிஞர் வி.க.வா.ரா - சுவாமிநாத சர்மா - குயிலன், பேராசிரியர் ராமகிருஷ்ணன் - தமிழ் ஒளி முதலானோரின் தொடர்பினால் இடதுசாரிக் கருத்துக்களை உள்வாங்கி இடதுசாரியாகவும் முற்போக்கு எழுத்தாளராகவும் இயங்கிய ஞானசுந்தரன் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி இதழிலிலும் பணியாற்றினார். தாயகம் திரும்பிய பின்னர் கே.கணேஷ் மற்றும் கே.இராமநாதன் ஆகியோரின் தொடர்புகளினால் இலங்கை கம்யூனிஸ்ட கட்சியின் தேசாபிமானி - மற்றும் சுதந்திரன் முதலான இதழ்களிலும் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.

தேசாபிமானியில் அவர் அக்காலப்பகுதியில் எழுதிய தேசபக்தன் கண்ணோட்டம் என்ற பத்தி எழுத்து வாசகர்களை பெரிதும் ஈர்த்தது. 1954இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து அதன் வளர்ச்சிக்கு அள்ளும் பகலும் தொண்டாற்றினார். சுயநலமற்ற தன்முனைப்பு உணர்வுகளற்ற பொது நோக்குடன் அவர் இயங்கியதனால் மாற்றுக்கருத்துள்ளவர்களும் அவரை நேசித்தனர். அந்த நேசிப்பே அவரை தொடர்ந்தும் பல வருடகாலமாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியில் நீடிக்கச் செய்தது.

பிரேம்ஜி என்ற புனைபெயரில் அவர் எழுதத் தொடங்கியது முதல் பிரேம்ஜி ஞானசுந்தரன் என்ற பெயரிலேயே அவர் அழைக்கப்பட்டார். சங்கத்தின் கிளை அமைப்புகளான எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம், அறிவு வட்டம் முதலானவற்றையும் உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரக்கூடிய திட்டங்கள் - மற்றும் தமிழகத்தின் வணிக இதழ்கள் மற்றும் தரக்குறைவான இதழ்களை இலங்கைக்கு தருவிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கும் நடைமுறைகளை அமுல்படுத்துவதிலும் யாழ். பல்கலைக்கழக வளாகம் உருவாக்கப்பட்ட பொழுது அதன் முதல் தலைவராக பேராசிரியர் கைலாசபதியை நியமித்தல் தொடர்பான ஆலோசனைகளிலும் பிரேம்ஜி மிக முக்கிய பங்காற்றியுள்ளார்.

சோவியத் தூதரகத்தின் சோவியத் நாடு சோஷலிஸமும் தத்துவமும் - சக்தி - முதலான இதழ்களிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் புதுமை இலக்கியம் இதழிலும் ஆசிரியராக பணியாற்றினார். சிறந்த பத்திரிகையாளருக்கான சோவியத்தின் லெனின் விருதும் அவருக்கு கிடைத்துள்ளது. இலங்கையில் பாரதி நூற்றாண்டு விழா உட்பட பல இலக்கியம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மாநாடு, முதலானவற்றில் பிரேம்ஜியின் கடுமையான உழைப்பு குறிப்பிடத்தகுந்தது. 1971 முதல் 1975 வரையில் இலங்கை தமிழ் ஆலோசனைச் சபையிலும் யாழ். பல்கலைக்கழக அமைப்புக்குழுச் செயலாளராகவும் இலங்கை பத்திரிகைக் குழுவில் உறுப்பினராகவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசனைச் சபையின் உறுப்பினராகவும் இயங்கிய காலகட்டத்தில் பல ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தார். சில உலக நாடுகளில் நடந்த இலக்கிய மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார்.

அவரது பிரேம்ஜி கட்டுரைகள் நூல் 2008இல் வெளியாகியது. கனடாவுக்குச் சென்று தமது இரண்டு பெண் பிள்ளைகளின் வேண்டுகோளை ஏற்று அங்கு சென்றார். அவரது புலம்பெயர்வு இலங்கை தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகவே கருதப்பட்டது.

புலம்பெயர்ந்தாலும் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு தம்மாலியன்ற ஆதரவையும் அவர் வழங்கத்தவறவில்லை. அவரது எழுத்துலகப் பிரவேச பொன்னாண்டை முன்னிட்டு அவரது இலக்கிய நண்பர்கள் 1998இல் கனதியான தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளனர். கொழும்பில் சில மாதங்களுக்கு முன்னர் சில மூத்த முற்போக்கு எழுத்தாளர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வை இலங்கை முற்போக்கு கலை இலக்கிய அமைப்பு நடத்தியபொழுது பிரேம்ஜியும் பாராட்டப்பட்டார்.

தமது மனைவியையும் மக்கள் மருமக்களையும் ஒரு பேரக்குழந்தையையும் உலகெங்கும் வாழும் அவரை நேசித்த இலக்கிய நெஞ்சங்களையும் விட்டு விட்டு அவர் நிரந்தரமாக விடை பெற்றுவிட்டார்.

எம்மிடம் எஞ்சியிருப்பது அவர் பற்றிய நீங்காத நினைவுகளே.

முருகபூபதி

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.