நேட்டோ ஹெலிகொப்டர்கள் தாக்குதல்;
8 தீவிரவாதிகள் உட்பட 18 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச ஹோட்டலை மனித வெடிகுண்டுகளும்
துப்பாக்கி ஏந்திய நபர்களும் தாக்கினர். அவர்களை வீழ்த்துவதற்கு நேட்டோ
ஹெலிகொப்டர்கள் அழைக்கப்பட்டன.
இரண்டு ஹெலிகொப்டர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 3 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
இதன் போது தாக்குதலில் ஈடுபட்ட 8 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும், சம்பவத்தில்
மேலும் 10 பேர் பலியானதாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதில் இரு
பொலிஸாரும் கொல்லப்பட்டுள்ளனர்.
காபூல் சர்வதேச ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு தலிபான் தீவிரவாதிகளுக்கும் நேட்டோ
படையினருக்கும் இடையே 5 மணி நேரம் மோதல் நடந்தது.
தீவிரவாதிகள் தாக்கிய ஹோட்டல்
மேற்கத்திய நாட்டவர்கள் தங்கும் பிரபலமான இடமாகும் தங்கள் அமைப்பினரே தாக்குதல்
நடத்தியதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். நேற்று அதிகாலை ஹோட்டலில்
இருந்து தீப்புகை கடுமையாக வந்து கொண்டு இருந்தது.
உள்துறை அமைச்சு செய்தித் தொடர்பாளர் சித்திக் கூறுகையில், “இருதரப்பினருக்கு
இடையேயான மோதலில் கொல்லப்பட்ட பொது மக்களில் 7 பேர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
இது தவிர, 8 பேர் காயமடைந்துள்ளனர்” என்றார்.
செவ்வாய்க்கிழமை இரவு ஹோட்டலின்
அறைகளில் இரவு உணவு சாப்பிட்ட போது தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது. ஒரு மனித
வெடிகுண்டு நபர் தனது உடலில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
அப்போது ஹோட்டலில் இருந்தவர்கள் பீதியில் அலறி ஓடினர். ஹோட்டல் மின்சார இணைப்பும்
துண்டிக்கப்பட்டது. ஹோட்டல் மேல் தளப்பகுதிகளில் இருந்த தீவிரவாதிகள் கையெறி
குண்டுகள், எறிகணைகள், ஏ.கே.47 போன்ற அதிநவீன துப்பாக்கிகளை வைத்து இருந்தனர். இந்த
தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த தாக்குதல் இடம்பெற்ற ஹோட்டலில் கடந்த திங்கட்கிழமை ஆப்கானில் இருந்து சர்வதேச
படைகள் வெளியேற்றம் குறித்த விசேட மாநாடொன்று இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.