ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, OCTOBER, 04, 2010
புறக்கோட்டை 3ம் குறுக்குத்தெருவில் தீ; 3 தீயணைப்பு வீரர்கள் திடீர்
சுகவீனம்
புறக்கோட்டை 3ம் குறுக்குத்தெருவில் தீ;
3 தீயணைப்பு வீரர்கள் திடீர் சுகவீனம்
(மர்லின் மரிக்கார்)
புறக்கோட்டை, மூன்றாம் குறுக்குத் தெருவிலுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட வர்த்தகக்
கட்டடத் தொகுதியின் கீழ் மாடியிலிருக்கும் கடையொன்றில் நேற்று பிற்பகல் தீ விபத்து
ஏற்பட்டதாக கொழும்பு தீயணைக்கும் படையினர் தெரிவித்தனர்.
இத் தீ விபத்து ஏனைய பிரதேசங்களுக்குப் பரவாது முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணியில்
இருபது தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர். இதற்கு ஐந்து தீயணைப்பு வாகனங்களும்
பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இத்தீ விபத்து கட்டடத்தின் கீழ் மாடியிலிருந்த புடவை களஞ்சியசாலையில் ஏற்பட்டதால்
முழு கட்டடமும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால் தீ விபத்து உருவான இடத்தைக்
கண்டறிவதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதன் விளைவாக தீயணைப்பு வீரர்கள் மூவர் திடீரென மூச்செடுக்கும் உபாதைக்கு உள்ளாகினர்.
அவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினர்.
அதனைத் தொடர்ந்து சுவாசிப்பதற்கு பயன்படுத்தும் விசேட உபகரணங்களை பயன்படுத்தி தீயை
துரிதமாகக் கட்டுப்படுத்தும் பணியை முன்னெடுத்ததாகவும் அவர் கூறினர்.
நேற்று பிற்பகல் 2.46 மணியளவில் ஆரம்பமான இத்தீயை துரிதமாக செயற்பட்டு மாலை 6.30
மணியாகும் போது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாகவும் அவர்கள் கூறினர்.
(ரு - ஈ)