ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, OCTOBER 07, 2009
சின்னச் சின்ன தகவல்கள்
சின்னச் சின்ன தகவல்கள்
எலி புகுந்ததால் தரையிறக்கப்பட்டது விமானம்
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியாவின் ரியாத்
நகருக்கு நேற்று முன்தினம் பகல் 2 மணிக்கு 412 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம்
புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்துக்குள் ஒரு எலி நடமாடுவதை சிப்பந்தி
ஒருவர் பார்த்தார்.
சாதாரண எலியாக இருந்தாலும், அது விமானத்தில் உள்ள வயர்களை கடித்து துண்டித்து
விட்டால், பெரும் ஆபத்தாகி விடும். எனவே, அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள், பயணிகள்
அனைவரையும் வெளியேற்றினர்.
எலியை வெளியேற்ற புகை போடும் வசதி, அந்த விமான நிலையத்தில் இல்லை.
எனவே, எலியை வேட்டையாடி பிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக என்ஜினியர்களும்,
தொழில்நுட்ப ஊழியர்களும் விமானத்துக்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
செய்வதறியாமல் திகைத்த பயணிகள், ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை ஏற்றிச்
செல்ல மும்பையில் இருந்து மாற்று விமானம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுபோல், கடந்த மாதம் 26 ம் திகதி, கனடா நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், எலி
புகுந்ததால், பஞ்சாப்பில் அவசரமாக தரை இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி சூட்டில் இருந்து
உயிரைக் காப்பாற்றிய 5 ரூபா நாணயம்
மும்பை புறநகரான கலினா பகுதியில் கிருஷ்ணா ஷெட்டி என்பவர் “வீடியோ கடை”
வைத்திருக்கிறார்.
தனது கடையின் முன்பு அமர்ந்தபடி, பக்கத்து கடைக்காரரான நிக்கோலஸ் என்பவருடன் நேற்று
முன்தினம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று நபர்கள்
வந்து திடீர் என சரமாரியாக சுட்டனர்.
அதில் ஒரு குண்டு நிக்கோலஸ் மீது பாய்ந்தது.
கிருஷ்ணாவை நோக்கி வந்த இரண்டு குண்டுகளில் ஒன்று அவரது வயிற்றில் பாய்ந்தது.
மற்றொரு குண்டு அவருடைய மார்பை நோக்கி பாய்ந்தது. ஆனால், கிருஷ்ணாவின் சட்டை
பாக்கெட்டில் இருந்த 5 ரூபா நாணயம், “அதிர்ஷ்டவசமாக” அவரது உயிரை காப்பாற்றியது.
பாய்ந்து வந்த குண்டை நாணயம் தடுத்து விட்டது.
குண்டு பாய்ந்ததால் அந்த நாணயம் வளைந்துவிட்டது. அந்த 5 ரூபா நாணயம் மட்டும்
இல்லாவிட்டால் கிருஷ்ணாவின் மார்பை குண்டு துளைத்து சம்பவ இடத்திலேயே பலியாகி
இருப்பார்.
தற்போது, பாந்தராவில் உள்ள மருத்துவமனையில் கிருஷ்ணா மற்றும் நிக்கோலஸ் இருவரும்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்
பிளாஸ்டிக் நெகிழா தன்மை கொண்டது. டீ கோப்பை பொலிதீன் பைகள் முதற்கொண்டு அலங்காரப்
பொருட்கள் உட்பட நாம் பயன்படுத்தும் ஏராளமான பொருட்களில் பிளாஸ்டிக் சேர்க்கப்பட்டு
உள்ளது. இதனால் நாள்தோறும் வீணாகும் கழிவுகளிலும் அதில் அதிக அளவில் பிளாஸ்டிக்கும்
கலந்து இருக்கிறது.
இது நெகிழா தன்மை கொண்டது மட்டுமல்லாமல் மறுசுழற்சி செய்தாலும் காற்றுக்கு பாதிப்பு
ஏற்படுத்தும் தன்மை உடையது. அனால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான
விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் பிளாஸ்டிக்கை உபயோகமான ஒரு வழியில் மறுசுழற்சி செய்யலாம் என்று
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஏராளமாக குவியும் இந்த கழிவுகளை
பெற்ரோல், டீசல் போன்ற ஒரு மாற்று எரிபொருளாக மாற்றிவிடலாம் என்பதுதான் அந்த புதிய
முறை.
இந்த முறையில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவில் இருந்து 3 முதல் 5 பேரல் எரிபொருளை
தயாரிக்கலாம். இது தாவர எண்ணெய் போன்ற கலங்கலான நிறத்திலும், மண்ணெண்ணெய் மற்றும்
டீசல் போன்ற சிறிது மணமுடனும் இருக்கும். இந்த எண்ணெய்யை மோட்டார் எரிபொருளாக
பயன்படுத்தலாம்.
இப்படி பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளை பயன்படுத்த ஒரு நிறுவனம்
ஒப்பந்தம் செய்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. வரும் காலத்தில்
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் எரிபொருள் பரவலாக பயன்படுத் தப்படும் என்று
எதிர்பார்க்கலாம்.