ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, OCTOBER 07, 2009
ஆசிரியப் பணியின் தனித்துவம்
ஆசிரியப் பணியின்
தனித்துவம்
உலகில் அனைத்து உத்தியோகங்களைப் பார்க்கிலும் ஆசிரி யத் தொழிலானது உயர்ந்ததும்
புனிதமானதுமாக மதிக்கப் படுகிறது. பிள்ளைகளின் அறிவுக்கண்ணைத் திறப்பவர்கள்
ஆசிரியர்களென்பதால் இத்தொழிலானது போற்றுதற்குரியதாகிறது.
அனைத்து மதங்களிலும் ஆசிரியர்களைப் பற்றி உயர்வாகக் கூறப் பட்டுள்ளது. ‘எழுத்து
அறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்பது தமிழ் ஆன்றோர் கூறி வைத்த பொன்மொழி ஆகும்.
‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ ஆகியோர் மேன்மை நிலையைச் சேர்ந் தோர் என்பதால் அவர்களது
மலரடி தினமும் தொழுதல் வேண்டு மென்று தமிழ் நன்னூல்கள் கூறுகின்றன.
இது போலவே ஆசிரியத் தொழிலை இஸ்லாமும் உன்னதமாகப் போற்றுகிறது. பலவிதமான மதச்
சடங்குகளை மேற்கொள்வதிலும் பார்க்க கற்பித்தல் பணியானது மேன்மையானதென இஸ்லாம் கூறு
கிறது.
இத்தகைய உயர்ந்த கீர்த்திக்குரிய பணியாக கற்பித்தல் தொழில் மதிக் கப்படுவதையிட்டு
ஆசிரியர்கள் உண்மையிலேயே பெருமை கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
சர்வதேச ஆசிரியர் தினமானது இலங்கையில் நேற்று சிறப்பாகக் கொண்டாடப் பட்டிருக்கும்
இவ்வேளையில், ஆசிரியர் சமூக மானது எமது நாட்டில் தற்போது எவ்வாறு நோக்கப்படுகிற
தென்பதையிட்டு ஆராய வேண்டியது அவசியமாகும்.
ஆசிரிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரின் போக்குகள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில்
நிலவுகின்ற அதிருப்தி குறித்து தினகரனின் ஆசிரிய தலைப்பில் முன்னரும் குறிப்பிட்டி
ருக்கிறோம். ஆசிரிய சமூகத்தை ஒட்டுமொத்தமாகக் குற்றம் சாட் டுவது பொருத்தமல்ல.
அதேசமயம் பொறுப்பற்ற விதத்தில் உதா சீனமாகச் செயற்படுகின்ற ஆசிரியர்களால் ஏனைய
ஆசிரியர் களுக்கு அவப்பெயர் ஏற்படுவதை பொறுத்துக் கொள்ளலாகாது.
ஆசிரியர்கள் மத்தியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன் றின் பிரகாரம்
இலங்கையில் சேவையிலுள்ள ஆசிரியர்களில் சுமார் நாற்பது சதவீதத்தினர் ஆசிரியத்
தொழிலுக்குப் பொருத்த மில்லாதவர்களென்பது அறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக
பத்திரிகையில் செய்தியொன்றும் வெளியாகியிருந்தது.
இத்தகவலை வைத்துப் பார்க்குமிடத்து இதுபோன்ற அலட்சியப் போக்குடைய ஆசிரியர்களால்
பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற மாணவர்களின் பரிதாப நிலைமையே கவலை தருகிறது.
ஆசிரியர் தொழிலின் மகத்துவம் குறித்து போற்றிப் புகழும் இவ்வேளையில் அப்பணிக்குப்
பொருத்தமில்லாத ‘பிரகிருதிகள்’ குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இவர்களால் எதிர்கால சந்ததி பாழாக்கப்படுவது ஒருபுறமிருக்க, மாணவ சமூகத்தின் மீது
அக்கறை கொண்டு பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு அவப்பெயரும் ஏற்படுகிறது.
ஆசிரியத் தொழிலுக்கான தகைமைச் சான்றிதழைக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அனைவரும்
அத்தொழிலுக்குப் பொருத்தமான வர்களென எண்ணுவது தவறு. ஆசிரியர்களாகத் தொழில் புரியும்
உயர் பட்டப்படிப்பு தகைமைகளைக் கொண்டோரால் மாணவ ருக்கு பயனெதுவும் ஏற்படாததையும்
நாம் காணலாம். அதே சமயம் சாதாரண தகைமையுடைய ஆசிரியர்கள் பலர் சிறப்பான
பணிபுரிவதையும் எம்மால் அறிய முடிகிறது.
எனவே சிறப்பான கற்பித்தல் என்பது பொதுநலம் கொண்ட ஆசிரியர்களாலேயே சாத்தியமாகிறது.
பொதுநல நோக்கமற்ற ஆசிரியர்களே மாணவரின் எதிர்காலத்தைப் பாழடிப்பவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர்களை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள அதிபர்கள் சிலரின்
பொறுப்பற்ற அலட்சியப் போக்கு குறித்து பெற்றோர் மத்தியில் நிலவும் அதிருப்தி
குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கொழும்பில் உள்ள கல்லூரிகள் சில வற்றின்
அதிபர்களின் உதாசீனம் குறித்தும் பெற்றோர் மத்தியில் அதிருப்தி உண்டு. கொழும்பின்
தென்பகுதியில் உள்ள பிரபல தமிழ்ப் பாடசாலையொன்றில் மாணவத் தலைவர்களின் அராஜகப்
போக்கினால் அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது போன்ற குறைபாடுகள் பாடசாலை அதிபரினால் சீர்செய்யப்படுவது அவசியம்.
விபரம் புரியாத குழந்தைப் பருவத்திலேயே மாணவர்கள் பாடசாலை யில்
ஒப்படைக்கப்படுகின்றனர். அம்மாணவரின் எதிர்காலம் ஆசிரியர் கைகளிலேயே
ஒப்படைக்கப்படுகிறது. பெற்றோரைப் பொறுத்தவரை பெரும் நம்பிக்கைகளுடனேயே அக்குழந்தை
ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
எனவே மனசாட்சியின் அடிப்படையில் பணிபுரிவது ஆசிரியர்களின் பொறுப்பாகிறது.
இலங்கையிலுள்ள இலட்சக்கணக்கான நல்லாசான் களுக்கு நாம் தலைவணங்குகிறோம். அதேசமயம்
கற்பித்தல் பணியை அலட்சியமாகக் கொள்வோர் தங்களது மனசாட்சிக்குத் தலைவணங்கி பணியாற்ற
வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்.