சீனைவருக்கும் வாழக்கூடிய இடமாக இருக்க வேண்டும் என சிந்திப்பவர்களால்தான் உலகம் பல
பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அதில் வெற்றி கண்டு வருகிறது. மனிதனின் அறிவும்,
தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த நவீன
உலகில்தான் எழுதப் படிக்க தெரியாத 77 கோடி பேர் இருக்கிறார்கள். ஒருநாள் கூட
பாடசாலையில் காலடி எடுத்து வைக்க வாய்ப்பில்லாததால் கல்வி என்பதையே அறியாத 7
கோடிக்கும் அதிகமாக சிறுவர்கள் இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரமும் நம்மில்
பலருக்கு தெரியாது.
யுனிசெப் நிறுவனமும் உலக கல்வி பிரசார இயக்கமும் (விaசீpaign ஜீor லீனீuணீation)
இந்த புள்ளி விபரங்களை உறுதிப்படுத்தியிருக்கின்றன. “கல்வி வறுமையை ஒழிக்கிறது” என
கல்வியியலாளர்கள் கூறுவார்கள். இத்தனை கோடிப் பேருக்கு கல்வி இல்லை என்பதன் அர்த்தம்
என்னவென்றால் அவர்கள் வறுமையில் வாடுகின்றார்கள் என்பதே.
அவர்களின் நிலையை மாற்றாவிட்டால் அவர்களின் சந்ததிகளாக இன்னும் பல கோடிப்பேர்
வறுமையில் வாடப்போகிறார்கள் என்பதாகும்.
இத்தனை கோடி பேர் வறுமையில் வாடிக்கொண்டு தொடர்ந்தும் கல்வி பெறமுடியாத நிலையில்
வறுமை என்னும் விஷ சக்கரத்தில் சுழலுவதை அனுமதிப்பது மானிட சமூகத்திற்கே ஒரு
சாபக்கோடாகும். காந்தி அடிகளார் சொல்வது போல் பொது நியாயத்தின்படி மட்டும் வாழ்ந்து
விட்டுப்போகாமல் வாழ்வின் புதிய பிரச்சினைகளை துணிவுடன் முயற்சித்து தீர்ப்பதற்கு
சிந்தித்து செயல்பட சிலரால் உருவாக்கப்பட்டதே உலக கல்வி பிரசார இயக்கமாகும்.
2015
ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே
ஐ.நா. சபையால் மிலேனிய கல்வி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை
யதார்த்தமாக்கும் நோக்கத்துடனும் உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும், ஒவ்வொரு
நாடும் தமது பிரஜைகளாகிய ஒவ்வொரு பிள்ளைக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய
வேண்டும், அதற்கான திட்டங்களை தீட்டி அதனை நிறைவேற்ற நிதி ஒதுக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தவும், இந்த இலக்கை அடைய ஏழை மற்றும் அபிவிருத்தி அடையாத நாடுகளுக்கு
அபிவிருத்தி அடைந்த நாடுகள் அதிக நிதி உதவி செய்ய வேண்டும் என கோருவதற்குமே உலக
கல்வி பிரசார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கல்வி பிரசார இயக்கம் வருடம் தோறும் ஏப்ரல் மாதத்தின் ஒரு வாரத்தை கல்வி
பிரசார வாரமாக பிரகடனப்படுத்தி ஒவ்வொரு வருடமும் ஒரு விசேட தொனிப்பொருளை முன்வைத்து
உலகெங்கிலும் பிரசார இயக்கத்தை முன்னெடுத்து வருகிறது.
2002 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் கடந்த காலங்களில் பல வெற்றிகளை
அடைந்துள்ளது. உகண்டா போன்ற பல ஆபிரிக்க நாடுகளில் பாடசாலைக் கட்டணம் செலுத்தினால்
மட்டுமே பாடசாலைக்குச் செல்ல முடியும் என்ற நிலை காணப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான
சிறுவர்களால் பாடசாலை செல்ல முடியாத நிலை காணப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் “எல்லா
சிறுவர்களுக்கும் பாடசாலை கதவுகளை திறப்போம்” என்ற தொனிப்பொருளுடன் நடத்தப்பட்ட
பிரசார இயக்கத்தின் காரணமாக பல ஆபிரிக்க நாடுகள் பாடசாலை கட்டணங்களை அறவிடும்
நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தன.
இதனால் இலட்சக்கணக்கான சிறுவர்களுக்கு பாடசாலை
கதவுகள் திறந்தன. உலக கல்வி பிரசார இயக்கம் அடைந்த மாபெரும் வெற்றிகளில் இதுவும்
ஒன்றாகும். பாடசாலை கட்டணம் செலுத்த முடியாததால் ஒரு போதும் பாடசாலைக்கு செல்ல
முடியாத ஒரு முதியவர் கல்வியில் தனக்கிருந்த ஆர்வம் காரணமாக தனது 70 வயதில் 6 வயது
சிறுவர்களுடன் ஆரம்ப வகுப்பில் அமர்ந்து கல்வி கற்க ஆரம்பித்து ஓரிரு வருடங்களிலேயே
சில எழுத்துக்களை வாசிக்க எழுத கற்றுக்கொண்டதுடன் கல்வி தமது வாழ்க்கையில் எவ்வளவு
பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது என்பது தொடர்பாக எழுதிய ஒரு சிறிய கட்டுரை
உலகமெங்கிலும் பல கோடி மக்களால் ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டது. ஐ.நா. சபை அரங்கிற்கு
இவர் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டதன் மூலம் அனைவருக்கும் கல்வி பெறுவதன்
முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
பங்களாதேஷில் பல பின்தங்கிய மாவட்டங்களில் சில
வருடங்களுக்கு முன்னர் பெண் பிள்ளைகள் பாடசாலை செல்வது என்பது தடை செய்யப்பட்ட
விடயமாக இருந்தது. பெண் கல்விக்கு எந்தவித முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. உலக
கல்வி பிரசார இயகத்தால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி காரணமாக பங்களாதேஷத்தில் இப்போது
பெண் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுவது ஏறக்குறைய ஆண் பிள்ளைகளுக்கு சமமான
நிலைக்கு வந்து விட்டது என்பது ஒரு இமாலய சாதனைதான்.
இவ்வருடம் உலக கல்வி பிரசார வாரம் ‘ஆரம்பத்திலிருந்தே எல்லா பிள்ளைகளுக்கும் ஆரம்ப
சிறுவர் பராய அபிவிருத்தியையும் கல்வியையும் உறுதிசெய்வோம்’ என்ற தொனிப்பொருளுடன்
ஏப்ரல் மாதம் 21ம் திகதி முதல் 28ம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. எல்லா
பிள்ளைகளுக்கும் பாடசாலை கதவுகள் திறந்தால் மட்டும் அவர்களால் கல்வியை பெற்றுவிட
முடியாது. அவர்கள் பாடசாலை செல்லும் முன்னர் அவர்களுக்கு பிறந்ததில் இருந்து
மட்டுமல்லாமல் பிள்ளை தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே அவர்களுக்கான சரியான
பராமரிப்பு கிடைக்க வேண்டும். போஷாக்குணவு, மற்றும் மருத்துவ வசதி, முன்பள்ளிக்
கல்வி ஆகிய அனைத்தையுமே ஆரம்ப பிள்ளைப்பராய அபிவிருத்தி என அழைக்கிறார்கள். இவை
அனைத்தும் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் சரியான கல்வியை
பெற முடியும் என்பது தான் இந்த வருடத்திற்கான தொனிப்பொருளின் அர்த்தமாகும்.
உலகமெங்கிலுமுள்ள பிள்ளைகளுக்கும் -s> வசதி கிடைக்க வேண்டும் என்ற இயக்கத்திற்கு
நாம் ஆதரவு வழங்க வேண்டும்.
அதேவேளையில் பெருந்தோட்டத்தில் உள்ள நமது பிள்ளைகளுக்கு இது நாள் வரை சீரான ஆரம்ப
சிறுவர் பராய அபிவிருத்தியும் கல்வியும் கிடைக்கவில்லை என்பதை நாம் மறந்து விட
முடியாது. நமது நாட்டில் மிக் சிறந்த சுகாதார சேவை இருப்பதும் இது நாள் வரை
பெருந்தோட்டத்துறை சுகாதாரம் தேசிய சுகாதாரத்துறைக்கு வெளியே இருப்பதால் மற்ற
பிள்ளைகளுக்கு கிடைக்கும் அதே அளவு தரமான ஆரம்ப சிறுவர் பராய அபிவிருத்தி சேவைகள்
பெருந்தோட்ட சிறுவர்களுக்கு கிடைப்பதில்லை.
ஆரம்ப சிறுவர் பராய அபிவிருத்தியும் கல்வியும் என்ற விடயத்தில் பிறந்தது முதல் 6
வயதிற்குட்பட்ட சிறுவர்களின் அபிவிருத்தி தொடர்பான அனைத்து விடயங்களும்
உள்ளடங்கும். போஷாக்கு, பாதுகாப்பு, உள ரீதியான அபிவிருத்தி முன்பள்ளிக்கல்வி ஆகிய
அனைத்தும் இவற்றில் உள்ளடங்குகின்றன. இந்த அனைத்து விடயங்களை பொறுத்தவரையில்
பெருந்தோட்ட பகுதி சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை யாவரும் அறிவர்.
வாழ்வின் புதிய பிரச்சினைகளை துணிவுடன்
முயற்சித்து தீர்ப்பவர்களே சமுதாயத்தை மேம்படச் செய்கிறார்கள்.
பொதுநியதிக்கு ஏற்றபடி சாதாரணமாய் வாழ்பவர்கள் சமுதாயத்தை முன்னேற்றுவதில்லை.
அவர்கள் வெறுமனே வாழ்ந்துவிட்டு போகிறார்கள்” - காந்தி அடிகளார்
பெருந்தோட்ட பிள்ளைகள் கல்வியில் எதிர்பார்த்த அளவு வளர்ச்சியை காட்டாமைக்கு
போஷாக்கின்மையும் ஒரு முக்கிய காரணம் என்பதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி
வருகின்றனர். இதேவேளையில் முன்பள்ளிக் கல்வி பெறுவதும் பெருந்தோட்ட பிள்ளைகளை
பொறுத்தவரையில் தொடர்ந்தும் சவாலான பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. அரசாங்கம்
முன்னெடுக்கும் சிறந்த ஆரம்ப சிறுவர் பராய அபிவிருத்தி பணிகள் பெருந்தோட்ட பகுதியை
அடையவில்லை. இந்த பின்னணியில் பெருந்தோட்ட சிறுவர்களுக்கு இந்த உரிமைகளை
பெற்றுக்கொடுப்பதற்கான பரிந்துரைகளை செய்வதற்கு உலக கல்வி பிரசார வாரம் ஒரு
சிறப்பான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.
ஆரம்ப பிள்ளைபராய அபிவிருத்தியும் கல்வியும் என்ற விடயமும் முன்பள்ளிக் கல்வியும்
பெருந்தோட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமான விடயமாக இருப்பினும்
பெருந்தோட்ட சமூகத்தின் தலைமைத்துவம் விசேடமாக பெருந்தோட்ட அரசியல்வாதிகள் இந்த
விடயத்தில் அக்கறை காட்டாமல் இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் அவசியம்.
பல
தோட்டங்களில் முறையாக தாய் சேய் கிளினிக்குகள் நடத்தப்படாமை, தாய்மாருக்கான
கிளினிக்குகள் முறையாக நடத்தப்படாமை அல்லது அவ்வாறான கிளினிக்குகள் தூரமான
இடங்களில் நடத்தப்படுவதால் கர்ப்பிணித்தாய்மார் பிரச்சினைகளை எதிர்நோக்குதல்,
அரசின் போஷாக்கு உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் திரிபோசா போன்ற உணவுகள்
முறையாக கிடைக்காமை, முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தை பெருந்தோட்ட
பெற்றோர்களில் பெரும்பான்மையோர் அறிந்திருக்கின்ற சூழ்நிலையில் பெருந்தோட்டங்களில்
முன்பள்ளிகளை நடத்துவதில் தோட்ட நிர்வாகங்களும் அவற்றோடு தொடர்புபட்ட நிறுவனங்களும்
முன்பள்ளிகளை நடத்துவதில் இடையூறுகள் ஏற்படுத்தி வருகின்றமை, சில தோட்டங்களில்
சாதாரண தோட்ட சிறுவர் நிலைய தாதி கூட அந்த தோட்டத்தில் முன்பள்ளியை நடத்தும்
உரிமையை தடைசெய்து தான்தோன்றித் தனமாக நடப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளமை போன்ற பல
பிரச்சினைகள் தற்போதும் காணப்படுகின்றன.
பிரிடோ நிறுவனம் வருடா வருடம் உலக கல்விப் பிரசார வாரத்திற்கு முக்கியத்துவம்
கொடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. கல்விப் பிரசார வார நடவடிக்கைகள் மக்கள்
மத்தியில் நன்கு அறியப்பட்ட நிகழ்வாக உள்ளது. இம்முறை கல்வி பிரசார வாரத்தின்
தொனிப்பொருளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கிடைத்திருக்கும் வாய்ப்பினை
முழுமையாக பயன்படுத்தி பெருந்தோட்ட பகுதியில் பணியாற்றும் மற்றைய அரச, அரச சார்பற்ற
நிறுவனங்களையும், இது தொடர்பில் பணியாற்றும் தேசிய நிறுவனங்களையும் இணைத்து கொண்டு
பிரசார வாரத்தை முன்னெடுப்பதற்கு பிரிடோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
பெருந்தோட்ட சிவில் சமூகம், அரசியல்வாதிகள் ஆகியோரும் இவ்விடயத்தில் அக்கறை
காட்டுவது அவசியம் என்பதால் அவர்களையும் இப்பிரசாரத்தில் ஈடுபட செய்வதற்கு
முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
உலகக் கல்வி பிரசார வாரத்தின் முக்கியத்துவத்தையும் இவ்வருடத்திற்கான
தொனிப்பொருளையும் கவனத்தில் கொண்டு இந்த பிரசாரத்தில் அனைத்து தரப்பினரும் தம்மாலான
ஒத்துழைப்பை தரவேண்டும் என பிரிடோ நிறுவனம் வேண்டி நிற்கிறது.