எல்லோரும் இந்நாட்டு மன்ன ரென்னும்
எண்ணங்கள் இதயத்தில் பூக்கும் வண்ணம்
நல்லபுதுச் சிந்தனைகள் உதிக்க, மாந்தர்
நனிசிறந்த வாழ்வடையும் வழிகள் செய்ய
இல்லாதார் உள்ளவர்கள் என்ற பேச்சு
இல்லாத ஒரு நிலையைச் தோற்று வித்து
‘சில்வாவும், சுலைமானும், சில்வெஸ்ரரும்
சிவாவுடனே கைகுலுக்கச் செய்தாலென்ன?’
இல்லையினி எம் நாட்டில் சண்டை, யென்று
இசைக்கின்ற வார்த்தைகளைச் செவிகள் கேட்க,
‘கல்முனை’ ‘கொழும்பு’ முதல், ‘காலி’ தொட்டுக்-
‘கதிர்காம’ ‘கண்டித்’, ‘திரு மலை’வரைக்கும்
செல்லுகின்ற நிலைவரவும் வேண்டும்! அச்சமும்
சேராமல் பயணங்கள் தொடர, மாந்தர்,
‘அல்லலுக்கு விடைதந்து ஆனந் தத்தை-
அனைவருக்கும் சித்திரைநீ, அளித்தா லென்ன?’
சித்திரையாள் வருகின்றாள்
பாண்டியூர் பொன் - நவநீதன்
தினகரனின்
காதலியாய்
நேயமுற
வாழ்ந்திருந்து
நமக்கெல்லாம்
நல்ல நல்ல
வாழ்வளிக்க
செல்வியவள்
செப்பி - தாம்பூலஞ்
சப்பி - பூ
இதழ் சிவக்கப்
புத்தாண்டுத்
தேரேறிச்
சித்திரையாள்
வருகின்றாள்
திங்களியைத்
தோழியாக்கி - பார்
எங்கு மெழில்
தங்கமாக்கிப்
பங்குனிக்கு
விடை கொடுத்து
தன் பணிக்கு
இடமெடுத்து
விண் முகில்
சேலை கட்டி
வெண்ணிலாப்
பொட்டு ஒட்டி
விண்மீன்களினைப் - பூச்
சரமாகச் சூடி
வியாழ (ன்)
குருநாளில்
புத்தாண்டுத்
தேரேறிச்
சித்திரையாள் - வருகின்றாள்
சத்தியங்களும் பத்தியங்களும்!
ஜே. ஹவாப்தீன்
கிளியின் முகவரியில்
வெளவாலின் குடியிருப்பு
வாயால் விழுங்கி
வாயால் கக்கிய அருவருப்பு
நதியைத் திருப்பி
மண்ணின் ஈரம் ரசித்த இதயம்
குதியால் கசக்கிய
குளுத்திப் பூச்சியாய்
மல்லிகைப் பூவால்
மலர் வீடு செய்துதரும்
மணக்கும் கனவுக்காய்
மண்டையில் அடித்துக்கொண்டேன்
மாட்டுச் சாணத்தை
மறைவில்
முகத்தில் பூசுவது தெரியாமல்
நச்சுமரத்தின் கிளையில்
ஆடிய
ஏமாந்த உயிர்க்கூடு
அதன் வேர்களில் புதைந்து
அப்பாவிச் சுவாசம்...
நாக்கு இத்துப்போன சாக்கு
என்பதை
செத்துப்போன உறவு சொல்லியது
உயிர் போகும் போது
கொத்தும் பாம்பும் அதுதான்
பத்தியங்களை விழுங்கி
பைத்தியப்பட்டம் வழங்கி
சத்தியங்கள் எரிந்து சாம்பராகி
சரித்திரம் அவியும் போது
கண்ணீர்த்துளிகள்
சாட்சி சொல்லும்
ஏகாந்த வலி!
எஸ். எல். எம். ரிலா
நீ
இல்லாத பிறகு
எனக்கு ஆறுதல்
உன்னைப்பற்றி எழுதும்
என் கவிதைகள் தான்
என் பொழுதுகள் எல்லாவற்றையும்
உன்னுடனே கழிக்கவிரும்புகிறேன்
ஆனால் என்னிடம் எஞ்சியிருப்பது
உன் நினைவுகள் மட்டும் தான்
உனக்காக எழுதிய கவிதையெல்லாம்
இன்னும் என்னிடம் தான் இருக்கின்றன
உன் நினைவுகளை போல
பூட்டியே வைத்திருக்கிறாய்
உன் இதயத்தை
என்னை வெளியே தள்ளிவிட்டு
நீ தந்த காதல்
இப்பொழுது
காயமாய் வலிக்கிறது
நீ
எதை வேண்டுமானாலும்
பொய் என்று சொல்
என் காதலைதவிர
நாளோடிப் போனதுவே நாற்பதுக்கு மேல் அகவை
நான்கண்டு கொண்டேனே நரைகள் - என்
நயனத்தில் என்றும் நீர்த் திரைகள்!
ஆளோடிப் போய்விட்டான் அவனோடி மூபத்து
ஆண்டோடிப் போனதுவே சும்மா! - நானோர்
ஆண்பிள்ளைக் கும்; மட்டும் அம்மா!
காலமெல்லாம் காத்திடுவான் கண்மணிபோல் பார்த்திடுவான்!
காவலரண் போலிருப்பான்! என்றே - நான்
கனவொன்றைத் தான் கண்டேன். அன்றே!
கோலமெல்லாம் அழிந்து துயர் கூடிப்போய் வா (ழ) டவைத்தான்
கொழுநனென வந்து சென்ற கடையன்! - இந்தக்
கொடிபடரத் துணைநில்லாக் கொடியன்
கண்டுபிடித்துத்தொலை!
- றாஹில்
நீ
ஒருதுளி
கொந்தளிக்கிறாய்
கடல்களாகி!
ஏழாம் அறிவு
கிடைத்தால்கூட
முடியாது
உன் கனவுகளை
புகைப்படம்
எடுக்க!
உயிர்
இயக்குகிறது என்கிறாய்
மனச்சிறைக்குள்
ஆயுட் கைதியான
நீ!
கண்ணீருக்குள்
உன்னைக் கண்டுபிடித்து
தொலைத்துவிடு
புன்னகைக்குள்!
நுளம்புக்குக் கூட
அன்பு போதி
வழிகாட்டும்
அது
மின்மினியாகி!
பேதம்
உனக்குள் இருந்தால்
கல்தேட
தேவையில்லை
நீ
உண்டாக்க!
உன் எளிமை
வானம் என்றால்
புகழ் பரவும்
நிலா வரை!
நள்ளிரவு
இருளுக்கு
பயப்படுகிறாய்
ஒரு சொட்டு
வெளிச்சமும் இல்லாத
நீ!
பூப்பெய்தியவளுக்கு
பாயாகிப் போன
குருத்தோலையால்
பூரிப்படைகிறது தென்னை
இப்போதெல்லாம்
குருத்தொலையை
மரம் வெட்டி
வெட்டி எறியும் தருணங்களில்
தென்னை மரம் ஆசிர்வதிக்கிறது
வழமை போல குருத்தோலையை
பழுத்தொலை சீண்டிக்கொண்டேயிருக்கிறது
ஓலைக்குடிசை இல்லாத ஊரில்
பழுத்தோலையை சுமக்கும் தென்னை
வெட்கப்பட்டுக் கொள்கிறது
போகுமிடம் தெரியுமா?
வாசுகி குணரத்தினம்
மரணத்தின் வலி
புரிந்து கொண்டாயா
அதன் வேதனை
உனக்குத் தெரியுமா.
மரணம் வரும் வரைக்கும்
அது புரிவதில்லை.
சுதந்திரமாகச் சுவாசித்த
மீனுக்கு அது தெரியும்
ஒரு ஆலாவின் வாயில்
சிக்கிச் சிதறுகையில்
மரண வலி புரியும்
ஆலா எனும் வல்லரக்கனால்
செட்டைகள் உடைக்கப்பட்டு
கண்கள் பிடுங்கப்பட்டு
கடைசி நொடி உயிரை
கையில் பிடித்தபடி
ஆலாவோடு சேர்ந்து
பறந்துகொண்டிருக்கும்.
அந்த மீனுக்கு
ஆனது மரணம்
வானத்தில் தான்
தன்னைச் சேர்த்து விடும்
என்பது தெரிந்துவிடும்
ஆனால் மானிடா
உனது மரணத்தின்
வாசற் கதவு
எங்கே உண்டு என்பது
உனக்குத் தெரியுமா
உயிர்போன பின்பும்
நீ எங்கே
என்பது
உனக்குத் தெரியுமா?